Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டு

ஆநிரை கவர்தல், ஏறுதழுவுதல் என மாடுகளுடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கை தமிழருடையது!
’கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை’
என்று செல்வத்தை மாடென வர்ணித்தார் திருவள்ளுவர்.
ஜல்லிக்கட்டு நம் உரிமை; அறமும், மறமும் சேர்த்துப் போராடுவோம்!
---------
பொங்கல் முடியும், போராட்டம் வடியும் எனும்
கனவைத் தாண்டி முறியடித்தோம்!
திங்கள் செவ்வாய் புதன்களைக் கடந்து
தினவுடன் தினமும் குரல்கொடுத்தோம்!
நெஞ்சுரம், தியாகம், வேட்கை, எழுச்சியென
அஞ்சிடாமலே பொங்கிடுவோம்!
வஞ்சகம் கொண்டே எவர் எதிர்த்தாலும்
வெஞ்சினத்துடனே போர்த்தொடுப்போம்!
திமிலைப் பிடித்து வாகைசூடி – வெற்றித்
திமிருடன் வலம்வரும் தமிழர்நாம்!
அமிலம், விடமென அந்நிய மாடுகள்
அமிர்தத்தை நஞ்சென மாற்றிடுமே!
திரைக்குப் பின்னால் நடக்கும் சதியால்
அரைவேக்காட்டு அறிக்கை வரும்!
கரைந்துவிடாமல், கலைந்துவிடாமல்
நிறைவாய், விரைவாய்ப் போராடுவோம்!
வறுமை, பசி, பிணி வாட்டினால்கூட
உரிமைக்காகக் குரல்கொடுப்போம்!
சிறுமையும், கயமையும் தலைவிரித்தாலும்
பெருமையுடனே சமர்புரிவோம்!