Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டு

ஆநிரை கவர்தல், ஏறுதழுவுதல் என மாடுகளுடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கை தமிழருடையது!
’கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை’
என்று செல்வத்தை மாடென வர்ணித்தார் திருவள்ளுவர்.
ஜல்லிக்கட்டு நம் உரிமை; அறமும், மறமும் சேர்த்துப் போராடுவோம்!
---------
பொங்கல் முடியும், போராட்டம் வடியும் எனும்
கனவைத் தாண்டி முறியடித்தோம்!
திங்கள் செவ்வாய் புதன்களைக் கடந்து
தினவுடன் தினமும் குரல்கொடுத்தோம்!
நெஞ்சுரம், தியாகம், வேட்கை, எழுச்சியென
அஞ்சிடாமலே பொங்கிடுவோம்!
வஞ்சகம் கொண்டே எவர் எதிர்த்தாலும்
வெஞ்சினத்துடனே போர்த்தொடுப்போம்!
திமிலைப் பிடித்து வாகைசூடி – வெற்றித்
திமிருடன் வலம்வரும் தமிழர்நாம்!
அமிலம், விடமென அந்நிய மாடுகள்
அமிர்தத்தை நஞ்சென மாற்றிடுமே!
திரைக்குப் பின்னால் நடக்கும் சதியால்
அரைவேக்காட்டு அறிக்கை வரும்!
கரைந்துவிடாமல், கலைந்துவிடாமல்
நிறைவாய், விரைவாய்ப் போராடுவோம்!
வறுமை, பசி, பிணி வாட்டினால்கூட
உரிமைக்காகக் குரல்கொடுப்போம்!
சிறுமையும், கயமையும் தலைவிரித்தாலும்
பெருமையுடனே சமர்புரிவோம்!

Sunday, January 15, 2017

அ(பொ)ங்கலாய்ப்புகள்

பண்டிகைக்காலங்களில் இரண்டு பிரச்சனைகள்தான் தலையாய மண்டைக் குடைச்சல்கள்.

1)    “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே/ வாரங்களே/ நாட்களே/ மணிநேரங்களே ஆன புத்தம்புதிய திரைப்படம்என்று அடித்தொண்டையிலிருந்து, நாபிக்கமலம் வழியாகக் கத்திக் கூப்பாடு போடும் தொலைக்காட்சிச் சேனல்கள்.

2)    “எங்க உங்க பெரியவன் வரலையா? சின்னவன் வந்துட்டானா?என்று வம்புக்குத் தயாராகும் அண்டை அயலார் பெருமக்கள்.

பொங்கல் என்று வந்துவிட்டால் இவ்விரண்டு விஷயங்களும் ஒருபடி மேலே சென்று முற்றிய நிலைமையை எட்டிவிடும். வகைதொகையின்றி புதிய படங்களை மாற்றிமாற்றி ஒளிபரப்பி மார்தட்டுவது தமிழர் பண்பாடு அல்லவா? கலாச்சாரக் காவலர்களான சிவகார்த்திகேயனும், சிம்புவும்தான் நம் வீட்டில் பொங்கல் பானை கழுவிவைப்பது போல, ‘உங்களை மகிழ்விக்கும் பணியில்என்ற பின்குறிப்புடன் சில சேனல்கள் இவர்களது திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள்.

எனினும், நம் பேசுபொருள் இதுவல்ல. வரிசையில் இரண்டாவதாக இருக்கும் வம்படிச் செய்திகளே இங்கு பிரதான இடம் பெருகின்றது. பின்வரும் மக்கள் அனைவரும் இப்பதிவைப் படிக்கவிருக்கும்/படித்துக்கொண்டிருக்கும் அனைவராலும் எதிர்கொள்ளப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.

1)    அநியாய ஆச்சரியம் அம்புஜம் மாமி: முந்தைய நாள் நள்ளிரவு சொந்த ஊருக்கு வந்து, அலைச்சல் அசதியில் அடுத்த நாள் மதியம் ஒரு மணிக்குக் கொட்டாவி விட்டு எழுந்து, சோம்பல் முறித்து, பல்விளக்கியோ விளக்கிக்கொண்டோ வாசலுக்குச் சென்றால், “டேய்... எப்போ வந்த? சொல்லவேயில்ல. ஒவ்வொரு தடவையும் வந்துட்டு இப்படித்தான் சொல்லிக்காமலே ஓடிப்போயிடுறஎன்று புதிதாக வந்த 2000 ரூபாய்த் தாளைக் கட்டாகப் பார்த்த ரீதியில் ஆச்சரியப்படும் மாமியைச் சமாதானப்படுத்துவது, ஏ.டி.எம். வரிசையில் நிற்பதைக் காட்டிலும் கடினமான காரியம்.

”இல்லைங்க, நான் நேத்து ராத்திரிதான்...என்று சொல்லி முடிக்கக்கூட விடாமல், தொடர்ச்சியாகப் பேசி ஆர்.ஜே.பாலாஜிக்கே சவால் விடும் இவர்களது வாய்ஜாலத்தில் கேட்பவருக்குத் தொண்டை வறண்டு, தண்ணீர் தாகம் தவிக்கும்.

ஒருவழியாகப் பேசிமுடித்து, “நீ என்னமோ சொல்ல வந்த?என்று அவர்கள் கேட்கும்போது, நமக்கு மறந்திருக்கும். மூளையைக் குடைந்து, ‘என்னாச்சு?என்று மனதிற்குள் ஒரு சிறிய நினைவலையை ஓடவிட்டு யோசித்துப் பார்த்தால் கூட ‘நேத்து ராத்திரிஎன்னும் இரண்டு வார்த்தைகள் மட்டும் நினைவுக்கு வந்து, அவ்வாக்கியத்தை முடிக்க முடியாமல் திணறும். ‘நேத்து ராத்திரி யம்மா...என்று பாடிக்கொண்டே வந்துவிட வேண்டியதுதான்.

2)    விவகாரமாய் விசாரிக்கும்வீரப்பன் மாமா:
இவர் கொஞ்சம் சிக்கலான நபர். தொலைபேசியை எடுத்தால் ‘ஹலோஎன்றும், நேரில் பார்த்தால் ‘சௌக்கியமா?என்றும் கேட்க வேண்டும் என்ற விருந்தோம்பல் தோன்றாக்காலத்தில் வாழும் விந்தையான மனிதர். ‘வந்துட்டான்யா வைப்ரேஷனுஎன்று பெரும்பாலான நேரங்களில் சுதாரித்துத் தப்பிவிட்டாலும், தப்பித்தவறி முகத்தில் முழித்தால், “என்னப்பா, அடுத்தது எம்.பி.ஏ-வா, இல்ல எம்.எஸ்.-ஆ? என் சொந்தக்காரப் பையன்கூட ‘கேட்பரிட்சை எல்லாம் எழுதினான். கெடைக்கவே இல்ல. ‘கேம்பஸ் இண்டர்வியூவை நம்பி இருக்காத தம்பிஎன்று நீட்டி முழக்குவார். வாழ்வின் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்துச் சோர்ந்த விளைவுகளைச் சில நிமிடங்களில் கொடுத்துவிட்டு, முத்தாய்ப்பாக, “உனக்கு ஒண்ணும் சொல்லத் தேவையில்ல. நீ உலகம் தெரிஞ்ச பையன். பாத்துக்கோஎன்று பீடிகை போட்டுச்செல்வார்.

அவர் சென்றவுடன் நேர்மறையான அனைத்து நம்பிக்கைகளும் கரைந்து, நமக்கு நாமே ‘உதவாக்கரைப் பட்டம் கொடுத்துக்கொள்ளும் அளவிற்குச் சந்தேகப்படத் தொடங்குவோம்.யாருய்யா இவன்? அவனா வர்றான், அவனா போறான்என்று பின்னர் இவரைப் பற்றிய தெளிவு பிறக்கும்; இருந்தாலும், அவநம்பிக்கையை விதைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

3)    நலம் விசாரித்து நரசூஸ் காபி குடிக்கும்நடராஜன் மாமா:
கல்யாணம் – காட்சி, துக்கம் – துயரம் என எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாமல், “இவங்க வீட்டுக்கு எப்படிப் போலாம்?என்று யோசித்துக் கொண்டிருக்கும் இவருக்கு, வகையாக வந்து சிக்கிக்கொள்வது ஊரிலிருந்து வரும் மண்ணின் மைந்தர்களான நாம்தான். சூரியன் எழுவதற்கு முன்பாகக் கல்லூரிப் பையன் எழுந்திருக்க மாட்டான் என்பது தெரிந்தும், பையன் வந்திருக்கான்னு கேள்விப்பட்டேன் (அவரே பார்த்திருந்தால் கூட, ‘கேள்விப்பட்டேன்என்றுதான் சொல்லுவார், ‘அப்படியே கேஷுவலா லுக் விடுடாஎன்று அறிவுறுத்தும் சந்தானம் போல); அதான் பாத்துட்டுப் போலாமேன்னுஎன்று அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் தோரணையில் அம்மாவிற்குத் தெரிந்துவிடும் அவரது எதிர்பார்ப்பு.

அம்மா: ஏதாவது சாப்பிடுறீங்களா?
அவர்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ங்க.
அம்மா: குடிக்க ஏதாவது தரவா?
அவர்: சூடாத் தண்ணி மட்டும் போதும்.
அம்மா: (உள்ளுக்குள் கறுவிக்கொண்டே) இருங்க, காபி போட்டுத்தரேன்.

காபி வரும்வரை ‘தினமணியின் ஒரே பக்கத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பார்; இத்தனைக்கும் அதில் காஜல் அகர்வால் விளம்பரம் கூட இருக்காது.

அம்மாவும் என்னதான் உள்ளுக்குள் திட்டினாலும், நல்ல காபியாகப் போட்டுவிடுவார். அதை உறிஞ்சி உறிஞ்சிக் கடலலையின் ஆரவாரத்தைப் போன்ற சத்தத்துடன் குடித்துவிட்டு, “சரிங்க. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு. பையன் எழுந்த உடனே நான் விசாரிச்சேன்னு சொல்லுங்கஎன்று வாசலை நோக்கி நடப்பார்.

அத்துடன் போய்விட்டால் பரவாயில்லை. வாயிற்கதவருகே நின்று வாங்கிக்கட்டிக்கொள்வார்.

அவர்: ஆமாம், பையன் எங்க வேலை செய்யுறான்?
அப்பா: சார், அவன் இப்போதான் காலேஜ் படிச்சிட்டிருக்கான்.
அவர்: ஓ (திணறிச் சமாளிக்கிறார்) கரெக்ட். நான் அன்னிக்கு ரமேஷ் வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க பையனையும் உங்க பையனையும் கொழப்பிக்கிட்டேன்.
அப்பா: ஓ சரி சரி.
(உள்ளுக்குள்) வழியாத, போய்த் தொலை.

4)    உண்டி கொடுத்து உயிர் எடுக்கும்ஊர்வசி மாமி:
இவர் படுத்தும்பாட்டில் பல்வேறு அம்சத்திட்டங்கள் உண்டு. முதல்நாள் உண்மையிலேயே அக்கறையாகத் தன் பையனுக்கோ, பேரனுக்கோ கொடுக்கும் அதே பாசத்துடன் சுவையான கூட்டு, அவியல் என்று அள்ளி இறைப்பார். சுவையில் மயங்கி, ‘ஆஹா, ஓஹோஎன்று புகழ்ந்துவிட்டால் போதும்; அடுத்த நாள் தெரியாத்தனமாக அதிகமாய் வடித்த அரைவேக்காட்டு அரிசியை எடுத்துவந்து, “கொழந்தைக்குப் பிடிக்குமேன்னு எடுத்துண்டு வந்தேன்என்று வெள்ளந்தியாகச் சிரிப்பார். மறுக்க முடியாமல், அரைமனதோடு வாங்கி, முழுமனதோடு சாப்பிட்ட பின்னர்தான் ‘விளைவுகள்தெரிய ஆரம்பிக்கும்.
(இப்பதிவை எழுதத் தொடங்கிய பின், மூன்று ‘இடைவேளைகள்எடுக்க வேண்டியதாயிற்று.)

‘எதுக்குடா அவங்க குடுக்குறாங்கன்னு எல்லாத்தையும் சாப்பிடுற?என்ற கேள்வி உங்கள் மனத்தில் உதிப்பது தவிர்க்க முடியாத நியதி. மூன்று காரணங்கள் உள்ளன.

1)    உருவத்திற்கும், தின்னும் சோற்றின் அளவிற்கும் சம்பந்தம் இல்லாத அபூர்வப் பிறவி நான்.
2)    எல்லாம் கார்போஹைட்ரேட் தானே?என்று என்றோ வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றும் அப்பாவி ஜீவன் நான்.
3)    ஒருமுறை, பக்கத்துவீட்டில் கொடுத்த பாயசத்தை மாட்டுக்குக் கொட்டுவதைப் பார்த்து, அந்தப் பாட்டி உதிர்த்த பழங்காலத்து வசவுச்சொற்கள் இன்றும் செவிகளில் தேனாய்ப் பாய்கிறது. ‘ஆறாதே நாவினால் சுட்ட வடு’ எனும் குறளின் வாழும் உதாரணம் நான்.

இப்படி ஆயிரம் தொல்லைகள் இருந்தாலும், ஒவ்வொரு பண்டிகைக்கும், அடித்துப்பிடித்துப் பேருந்தில் பயணம் செய்து பெருமையுடன் சொந்த ஊருக்கு வரும் அனுபவமும், வீட்டில் தங்கும் நாட்களும் அலாதியானவை.

ஏனெனில்,
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
இதுதான் என் ஊரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
நீ மோதிப் பாரு

Saturday, January 14, 2017

தங்கல் விமர்சனம்

(’காப்பீட்டு ஊழியர்’ எனும் இதழிற்காக எழுதியது; வெட்டித் தொகுக்கப்பட்டு, வெளியான விமர்சனம் இறுதியில் காண்பிக்கப் பட்டுள்ளது.)

திரையரங்கில் திரைப்படத்திற்கு முன்பாக இசைக்கப்படும் தேசியகீதம் ஒலித்தது; சுணங்கி, முனகி, எழுந்து நின்று அனைவரும்தேசிய ஒருமைப்பாட்டைவெளிப்படுத்தியாயிற்று. இதை இங்கு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ‘தங்கல்திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் இந்தியாவிற்காக மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வெல்கிறார் கீதாகுமாரி ஃபோகாத். காமன்வெல்த் பதக்க மேடையில் இந்திய தேசியகீதம் ஒலிக்கிறது. ‘எழுந்துநில்’, ‘அமைதியாய் இருஎன்று யாரும் அறிவிக்கவில்லை; ஆனால், மொத்தத் திரையரங்கும் அமைதியாகச் சலனமின்றி நிற்கிறது. இவ்வெளிப்பாடே தேசிய உணர்வு, அதுவே தங்கலின் வெற்றியும்கூட.

மேரிகோம்’, ‘இறுதிச்சுற்று’, ‘சுல்தான்என்று குத்துச்சண்டையும், மல்யுத்தமும் இந்தியத் திரையுலகிற்குப் புதிதல்ல. எனினும் இவையனைத்தையும் தாண்டி, ‘தங்கல்ஒருபடி மேலே நிற்கிறது என்றால், அதற்கு முக்கியமான காரணம் இத்திரைப்படத்தில் மிகக்குறைந்த அளவில் வெளிப்பட்டிருக்கும் சினிமாத்தனமேயாகும்.

வெறும் வசனங்களால் மட்டுமே படத்தை நிரப்பாமல், நிசப்தத்திற்கும், இசைக்கும், மௌனத்திற்கும், உணர்வுகளுக்கும் தகுந்த இடத்தையும், மதிப்பையும் அளித்து, இக்கதையைத் திரைக்கதை ஆக்கிய இயக்குநர் நிதேஷ் திவாரி பாராட்டுக்குரியவர். உண்மைக்கதையையோ, அச்சம்பவங்களை மையமாகவோ வைத்துத் திரைப்படத்தை எடுக்க நினைக்கும்போது, தொடக்கத்தில் பிரகாசமாகத் தோன்றினாலும், முழுநீளத் திரைக்கதையாக எழுதும்போதுதான் அதிலுள்ள சிக்கல்கள் பிடிபடத் தொடங்கும். ஆனால், தொய்வின்றி இரண்டரை மணிநேரப் படமாகக் கொடுத்த விதத்தில் மிளிர்கிறார் இயக்குநர்.

சில காட்சியமைப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். தன் மல்யுத்தக் கனவுகளை நிறைவேற்ற ஆண்வாரிசு வேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் மஹாவீர்சிங் ஃபோகாத் (ஆமீர்கான்) நான்கு பெண் குழந்தைகள் பிறந்தவுடன், விரக்தியில் தன் பதக்கங்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு மூடுகிறார்; கனவுகள் மூடப்படும் அத்தருணத்தின் படிமம் அருமையாகக் கையாளப்பட்டிருக்கிறது.

அதேபோல், தந்தையிடம் பயிற்சிபெற்ற கீதாகுமாரி, ‘தேசிய விளையாட்டு முகாமில்பயிற்சிபெறும்போது, பயிற்சி முறைகள் மாறுகின்றன. ஒருமுறை ஊருக்கு வரும்போது தந்தைக்கும், மகளுக்கும் அது தொடர்பாக ஒரு மல்யுத்தப்போட்டி நடைபெறுகிறது. திரையில் இரு பயிற்சிமுறைகளுக்கு இடையிலான போட்டியாகத் தோன்றும் அக்காட்சி, முதுமையை இளமை வெல்வது தவிர்க்க இயலாத நியதி எனும் செய்தியைச் சொல்கிறது; தாய்மகள் உணர்வுப்போராட்டங்களும் சொல்லப்படுகின்றன. அவ்விடத்தில் கையறுநிலையில், உடலில் தெம்புமின்றி, தான் தோற்றுக்கொண்டிருப்பதை நொடிநொடியாய் வெளிப்படுத்தும் ஆமீர்கானின் நடிப்பு, படத்தின் மிகப்பெரிய வரப்பிரசாதம்.

பின்பு, புதிய பயிற்சி முறைகளால் உலகளவுப்போட்டிகளில் தொடர்தோல்விகளைச் சந்திக்கும் கீதா, பட்டியாலாவிலிருந்து தந்தைக்குத் தொலைபேசும் காட்சி உருக்கத்தின் உச்சம். தொலைபேசியின் இரு முனைகளிலும் தந்தையும், மகளும் விசும்புகின்றனர்; ஒருவர் சொல்ல வரும் விஷயம் என்னவென்று மற்றவருக்கு நன்றாகத் தெரியும். இவையனைத்தும் கண்ணீரினூடே புரியவைக்கப்படுகிறது. ஒரு சோகத்தருணத்தின்போது மனிதமனம் அழத்தான் செய்யுமே தவிர, புலம்பாது. அதை அருமையாகப் படமாக்கியிருக்கும் விதத்தில் பேசுகிறது படக்குழுவின் தெளிவு.

ஒரு இரக்கமற்ற பயிற்சியாளராக, பாசமிகு தந்தையாக, கொள்கைப்பிடிப்பு கொண்ட விளையாட்டு உணர்வுள்ளவராக என அனைத்து அவதாரங்களிலும் ஆமீர்கான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கீதா மற்றும் பபிதாவின் குழந்தைப்பருவ பாத்திரங்களாக நடித்த இரு சிறுமிகளும்நடிப்புஎன்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்துகின்றனர்; ‘காக்காமுட்டையில் வரும் இரு சிறுவர்களின் இயல்பான நடிப்பை இத்துடன் ஒப்பிட முடியும்.

இரு பெண்களின் வாழ்க்கைதான் மையக்கரு என்றாலும், இரண்டாம் பாதியில் கீதாவின் முன்னேற்றமே திரையில் காண்பிக்கப்படுகின்றன. அதனால், வளர்ந்த பபிதாவாக வரும் பாத்திரத்திற்குப் பெரியளவில் படத்தில் நடிக்க இடமில்லை; எனினும், பாசமிகு தங்கையாகத் தன் சகோதரியின் வெற்றிக்குப் பின் இருக்கிறார். அவரது பாத்திரத்திற்கும் கடைசிவரை சமமான முக்கியத்துவம் தந்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது. படத்தொகுப்பாளரின் மேதைமை இக்காட்சிகளில் வெளிப்படுகிறது; கச்சிதமாக, சுமார் 155 நிமிடங்களில் தரமான படைப்பைத் தருவதில் இவரது பங்கு அலாதியானது.

ப்ரீதமின் இசையில் பாடல்கள் அனைத்தும் உணர்வுகளைப்பார்வையாளர்களிடம் எளிதாகக்கடத்துகிறன. ‘யுத்தம் யுத்தம்’(‘தங்கல் தங்கல்’) பாடல் தனித்துத் தெரிகிறது. பின்னணி இசை, தனியாக ஒரு கதாபாத்திரம்போல் இழைகிறது. பஞ்சாபி நாட்டுப்புற இசையும், தேசிய உணர்வைத் தூண்டும் ரசமுமாகப் படத்தின் பக்கபலமாய் நிற்பது இசை. போட்டியின் முக்கியமான நொடிகளின்போது பிற ஒலிகள் எதுவும் இன்றி, வீராங்கனைகளின் மூச்சுச்சத்தம் மட்டுமேகேட்கும் அளவிற்குச் செதுக்கியிருக்கிறார் ப்ரீதம். சப்த(ஸ்வர)த்திற்கும், நிசப்தத்திற்குமான மெல்லிய இடைவெளியை லாவகமாகக் கடந்துசெல்கிறார்.

வசனங்கள் கூர்வாளைப்போல் அளவாக ஆனால் அருமையாக இருக்கின்றன. “நாளைக்கு நீ கனவுகளைத் தொலைத்த அனைத்துப் பெண்களுக்கான அடையாளமாய் விளையாட வேண்டும்”, “கீதாபபிதா ரெண்டு பேரும் என் செல்லங்கள்தான், ஆனால் என் கனவை அவங்களால நிறைவேத்த முடியாதுபோன்ற வசனங்கள் சிலிர்க்க வைக்கின்றன.

மஹாவீரின் தம்பி மகனான ஓம்கரின் பார்வையில் படத்தை நகர்த்தியிருப்பது புதுமையான கண்ணோட்டம். தேசியப்பயிற்சியாளராக வரும் ஒருவர் கடைசிவரை பயிற்சியளிப்பதை வாய்ப்பாடமாகவே நடத்துவதும், அவர் சொல்வது அனைத்துமே தவறு என்பதுபோலும் இருக்கும் சில காட்சிகள் சினிமாத்தனமானவையாகஎம். குமரன்திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றன. இறுதிப்போட்டியின் உண்மையான நிகழ்வுகள் மாற்றப்பட்டிருக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டு படம் வெளியானதிலிருந்தே தொடர்ந்துவருகிறது. எனினும் இத்தகைய சிறிய குறைகளை மறந்து, பெண் முன்னேற்றத்தைப் பாசாங்கில்லாமல், பிரச்சாரமில்லாமல் சொன்ன இப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

ஆண், பெண் வேறுபாடின்றிநம் சமூகம் பெண்களை எந்த இடத்தில் வைக்கிறது?’ எனும் அகக்கேள்வியை அனைவரது மனத்திலும் எழுப்பும் வகையில் தங்கல் ஒரு வெற்றிப்படைப்பு என்றே அறுதியிட்டுச் சொல்லலாம்.