Monday, March 19, 2018

இனம்புரியா உணர்வுகளும், ஆண்மனக் காமமும் - இமையத்தின் குறுநாவல் ’எங்கதே’

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு .மாதவனின்கிருஷ்ணப் பருந்துஎனும் நாவலைப் படித்தேன். ஒரே ஒரு முக்கியமான கதாபாத்திரத்தையும், அப்பாத்திரத்தைச் சுற்றிய சில மனிதர்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட அந்நாவல் கூறிய ஆண்மனத்தின் காமம் குறித்த உணர்வுகள் மிக முக்கியமானவை. புலனடக்கம் என்பது சொல்வதற்கு எளிதானது என்பதைப் பொட்டிலடித்தாற்போல் புட்டுப்புட்டு வைத்த நூல் அது. தகாத உறவிற்கு ஏங்கும் ஆண், கடைசியில் முறைதவறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அது வேண்டாமென முடிவு செய்வதுடன் நாவல் முடிவடையும். வேண்டாம் என்ற முடிவுடன் கிளைச்செய்தியாக, காமத்தைக் கட்டுக்கடங்காத அளவிற்கு வளரவிடும் உள்மன ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமளவிற்கு அது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்பதும் வாசகர்களுக்குக் கடத்தப்படும். சமீபத்தில் எழுத்தாளர் பாவண்ணனின் வலைதளத்தில் கூட, அவர் தனது நண்பருடன்கிருஷ்ணப் பருந்துகுறித்து உரையாடியதாக ஒரு பதிவைப் படித்தேன் (அவரது வலைப்பூவில் அதைத் தேடி எடுக்க இயலவில்லை).

அலைபாயும் ஆண்மனத்தின் பேராசையையும் (வக்கிரம் எனும் சொல்லைத் தட்டச்சு செய்ய ஏனோ எனது ஆணாதிக்க மனோபாவம் தடுக்கிறது போலும்), ஆசை நிறைவேறாதபோது எழும் விரக்தியையும் மீண்டும் இமையம் எழுதியுள்ளஎங்கதேவில் வாசிக்க நேர்ந்தது. ‘கிருஷ்ணப் பருந்துஅக உணர்வுகளின் எழுச்சியைப் பேசிய அளவிற்கு, ‘எங்கதேபுற விளைவுகளை உரைக்கிறது. சஞ்சலமும், சபலமும், ஏக்கமும் எழும் ஆணின் எண்ணவோட்டங்களை .மாதவன் விவரித்தாரெனில், அவற்றின் விளைவுகளான பொறாமை, சந்தேகம், விரக்தி, கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளை இமையம் எழுதியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

எனக்குள் இருக்கும்கிருஷ்ணப் பருந்துரசிகனா, அல்லது உண்மையிலேயேஎங்கதேவில் அதன் பாதிப்பும், தாக்கமும் அதிகமாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், கதையின் முடிவும் கூட ஒரே இடத்தில் சங்கமிப்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. கூடும் வாய்ப்பு கிடைத்தும் அக்கணநேரத்தில் தனிமையாக இருக்க விரும்பி கதவை மூடும் ஆண்பாத்திரம் போலவே, இங்கே பிளேடால் தான் ஆசைப்பட்ட பெண்ணைக் கொல்லத்துணிந்து பின்னர் பின்வாங்கும் ஆண்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுநாவலில் ரசிக்கத்தக்கவையாக இருப்பவை ஆசிரியர் பயன்படுத்தும் உவமைகள்.

கருவாட்டுக் குழம்பு வைக்கிற ஊட்டோட வாசல்ல காத்திருந்த நாயிதான் நான்

ஒரு புள்ளே பொறந்திட்டா, மொளக்குச்சியில கட்டிப்போட்ட மாடாயிடுவன்

மடப்பள்ளியில கொடுக்கிற பொங்கலுக்காகக் காவக் காத்திருக்கிற பரதேசி ஆயிட்டாரு பாவாட

நானும் கமலாவும் கார்த்திக மாசத்து நாய்களாட்டம் இருந்தம்

“… அந்த வாத்த எம் மனச பயிரு நட ஓட்டிப்போட்ட வயக்காடா ஆக்கிடும்

போன்றவற்றில் நாம் அன்றாடம் சந்திக்கும் விலங்குகளும், நாம் கிட்டத்தட்ட மறந்தே போன விவசாயமும் சார்ந்த சில உவமைகள் அனாயசமாகத் தெறித்து விழுகின்றன.

கதை எனது ஊரான கடலூரைச் சுற்றி நடப்பதாக எழுதப்பட்டுள்ளதால் படிக்கும் ஆர்வம் இயல்பை விட அதிகமாயிருந்தது. குறிப்பாகக் கடலூர் பற்றிய இந்த ஒரு பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது.

அப்ப ஆட்டோ மணிக்கூண்டத் தாண்டி கலெக்டர் ஆபீஸ் கிட்டே போயிக்கிட்டிருந்துச்சி. கலெக்டர் ஆபீஸப் பாத்தன்.

ராபர்ட் கிளைவோட குதிர லாயம்தாம் இப்ப கலெக்டர் சேம்பர். தெரியுமா?”

தெரியும். வெள்ளைக்காரங்க காலத்திலெ தென்னாற்காடு ஜில்லாவோட தலநகரமா இருந்துச்சி.”

வரலாறு நெறஞ்ச ஊரு. சுனாமி வந்தப்ப நெறயா பேரு இங்கத்தான் செத்துப்போனாங்க.”

ஆமாம்.”

கடலூர் தண்ணி உப்பா இருக்கு. காத்தும் அப்பிடித்தான் இருக்கு.”’

படிக்கும்போதே பேருந்தில் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகத் திருப்பாதிரிப்புலியூர் பயணிக்கும் அனுபவத்தை அப்பேச்சுப் பரிமாற்றம் அளித்தது என்று சொல்வது துளியும் மிகையல்ல. வரலாற்றுப் பெருமை நிரம்பிய ஊர் எனும் அத்தாட்சியைத் தொடர்ந்து வரும் சுனாமி குறித்தான வாக்கியத்தை வைத்து என்னால் இரண்டு வெவ்வேறான கண்ணோட்டங்களில் யோசிக்க முடிந்தது.

(1) சுனாமியே கடலூரின் வரலாற்றில் முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது எனும் முகத்திலறையும் உண்மை.

(2) சுனாமியில் செத்த மக்கள் கூட்டத்தைப் போலவே கடலூரின் வரலாற்று அரிச்சுவடிகளும் அழிந்துகொண்டிருக்கின்றனவோ என்பதான கேள்வி.

இரண்டாவது கூற்றை மேலும் முக்கியமானதாக மாற்றுகிறது, “இப்ப எங்க ஊருல தங்க நாற்கர சால இருக்கு. ஆனா புளிய மரம்ன்னு ஒரு செடிகூட இல்லஎனும் வர்ணனை. போகிறபோக்கில் எழுத்தாளர் இதைச் சொல்லிச் சென்றாலும், அவ்வாக்கியம் பின்மண்டையில் சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு உணர்வை நொடிப்பொழுதில் தருகிறது.

கமலாவையும், அவள் குறித்த எண்ணங்களுடன் அவளைப் பின்தொடரும், உடனிருக்கும் ஆண் பாத்திரத்தையும் மையமாக்கியே எழுதப்பட்டிருந்தாலும், 43-ஆவது பக்கத்தில்தான் அந்த ஆணின் பெயர் வாசகர்களுக்குத் தெரிய வருகிறது. என்னதான் தன்விகுதியில் அந்த ஆணே கதை சொல்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், ‘இன்னும் பெயரைச் சொல்லவேயில்லையேஎனும் எண்ணமே எழுவதில்லை (பெயர்: விநாயகம்). அதுதான் ஆச்சர்யம்.

நூல் ஆணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஆணுக்கு ஒரு நொடி கூடவா அப்பெண் மீது ஒரு நற்சிந்தனை வராது எனும் கேள்வியும் எழாமலில்லை. நூல் முழுவதுமே கமலா குறித்தான தவறான எண்ணம் மட்டுமே விநாயகத்திற்கு இருக்கிறது என்பதுஅப்யூசிவ் ரிலேஷன்ஷிப்’, ‘ஆணாதிக்கம்போன்ற சொல்லாடல்களைத் தாண்டிய ஒரு அரக்கத்தனமாயிருக்கிறது. ‘ஏன் கமலாவிற்கு விநாயகத்தின் துணை தேவைப்படுகிறது?’, ‘ஏன் அவள் அவனை வாழ்க்கைத் துணையாக நினைக்கவில்லை?’, ‘எப்படி அவளது உயரதிகாரி மீது திடீரென்று அவளுக்கு அப்படியொரு உணர்வு வருகிறது; அதற்கான அக மற்றும் புறக் காரணிகள் என்ன?’ போன்ற எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதாக இக்குறுநாவல் அமையவில்லை. ‘அப்படி அது இருந்திருக்க வேண்டிய அவசியமில்லைஎனும் சமாதானம் ஏற்புடையதாக இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

கிருஷ்ணப் பருந்துஒரு அமைதியான சுனை எனில், ‘எங்கதேஒரு ஆக்ரோஷமான அருவி. சொற்பிரயோகங்களும் அதற்கேற்ற வகையில் இரைச்சலாகவே இருக்கின்றன. ஆனால் ஒருவகையில் அது இந்நூலுக்கு மிகவும் தேவையாகவே இருந்திருக்கிறது என்று சொல்லலாம். ‘ஆனந்த விகடன் தடம்’ பத்திரிக்கையின் நவம்பர் இதழில் ஆதவன் தீட்சண்யா இடதுசாரிக் கவிதைகளில் இருக்கும் ‘இரைச்சல்’ குறித்து இப்படிச் சொல்கிறார்: “சொற்களைத் திருகி, சொல்ல வந்ததைப் பூடகப்படுத்தி, நேஷனல் ஜியோகரபி சேனலில் காட்டும் நிலப்பரப்பைத் தமதென்று உருவகித்துக்கொண்டு அமேசான் காட்டுத் தாவரங்களுக்கிடையில் மறைந்தொளிந்து ரகசியம்போல் கீச்சுக்குரலில் அப்படி என்ன அதி உன்னத அரசியலை அமைதியாக எழுதி இருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன். அவ்வளவு நசுக்கி விடுவதற்கு அதென்ன குசுவா இல்லை கவிதையா?”
ஒருவகையில் இது ‘எங்கதே’விற்கும் பொருந்திப்போகிறது.

நூல்: எங்கதே
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்
பக்கம்: 110
விலை: 125


நைஸ் டூ ஈ-மீட் யூ. ஸப்?

மச்சி, எதுக்குடா கேட்டுக்கிட்டு? கூகிள் மேப்ஸ்ல பாத்துக்கலாம் விடுஎன்ற பதில் நண்பர்களிடமிருந்து வருவது மிகச் சாதாரணமாகி விட்டது. பொதுவாகப் புது இடங்களிலோ, ஊர்களிலோ கூகிளாண்டவரை வழிபடுவது எனக்கு உவப்பானதாக எப்போதுமே இருந்ததில்லை. பக்கத்தில் இருக்கும் டீக்கடை அண்ணாச்சி தரும் சுவாரசியமான கொசுறுச் செய்திகள், கூகிளில் கிடைக்காமல் போய்விடும். கூடவே சில ஊர்களில், “ஊருக்குப் புதுசா தம்பூ(பி)?” என்று கேட்டுவிட்டு, கொடுக்கும் காசுக்கு அதிகமாக ஒரு பஜ்ஜியோ, போண்டாவோ தரும் கருணைமிகு கனவான்களைச் சந்தித்திருக்கிறேன். இவற்றையும் தாண்டி நான் வைத்திருக்கும் சீனத்து கைப்பேசி (லெனொவோ சீனத்துச் சரக்குதானே?) அவ்வப்போது மக்கர் செய்யும். அதன் தகுதிக்கு மீறி நான் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு தகவல்களும், புகைப்படங்களும் அதனை அவ்வபோதுகோமாவிற்குத் தள்ளிவிடுகின்றன. செயல்படாமல் மயக்க நிலையிலேயே இருக்கும் பல செயலிகளில் ஒன்று, ‘கூகிள் மேப்ஸ்’. எனவே வாய்தான் எனக்கு மேப்ஸ், அட்லஸ் எல்லாமும்.

இந்த வரைபடப் பைத்தியங்கள் ஒருபுறம் என்றால், ‘வாட்ஸப் வளவள கோஷ்டிகள்மறுபுறம். புதிதாக வேலைக்குச் சேரும் இடமாகட்டும், வேறொரு வாசகர் வட்டம் போன்ற அமைப்பாகட்டும், ஒரு வாட்ஸப் குழுமம் இவையனைத்திற்கும் இருக்கும். அடுத்த வாரம் நடக்கவிருக்கும் சந்திப்பு ஒன்றுக்காக நான் ஆவலாகக் காத்திருந்தால், “ஹேய், திஸ் இஸ் _____. அடுத்த வாரம் எல்லாரும் மீட் பண்ணும்போது ஸ்ட்ரேஞ்சர்ஸா இருக்கக்கூடாதுன்னுதான் இப்போவே பிங் பண்றேன். நைஸ் டூ -மீட் யூ. ஸப்?” என்று ஸ்டைலாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆர்வக்கோளாறுகளை எப்படித் திருத்துவது என்றே தெரியவில்லை. இத்தகைய மூன்று, நான்கு முந்திரிக்கொட்டைகளைக் கடந்த ஒரு மாதத்தில்-மீட்செய்துவிட்டேன்.

எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிவதேயில்லை. அனைவரும் தெரிந்தவர்களாக இருக்க/மாற வேண்டும் என்ற மனப்போக்கை, ஒரு பிறழ்வு நிலையாகவே பார்க்க வேண்டியுள்ளது. புதிதாக இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் முதலாவது முறையாக நேராகச் சந்தித்துப் பேசுவது முக்கியமான நிகழ்வு. முன் தீர்மானங்களும், தவறான முடிவுகளும் இல்லாத அந்த முதல் சில நிமிடங்கள் மனிதருக்கிடையேயான உறவுகளைத் தீர்மானிக்கிறது. பொதுவான விஷயங்களை அறிந்துகொள்ள ஒரு வாயிலாக அமைகிறது. சில நேரங்களில் இருவருக்குமான பொதுவான நண்பர்களோ, உறவினரோ, கல்லூரியோ, பள்ளியோ இடம்பெறும்போது அது ஒரு மறக்கமுடியாத சிலாகிப்பனுபவமாக மாற்றம் அடைகிறது. நம்மையறியாமல் உருவாகும் செய்திப் பகிர்வும், நேரலையான பேச்சுவார்த்தைகளும் அலைகடலாக உருமாற்றம் அடைந்து, கரைக்கு வந்துசேரும்போது எழும் இன்பம் அலாதியானது. இந்த ஒரு பரிமாணத்தை-மீட்களும், ‘பிங்களும் சிதறடித்துவிடுகின்றன. அதன் விளைவாகக் கைகுலுக்குதலில் தொடரும் இறுக்கம், முகத்திலும், பேச்சிலும் தொடர்கின்றது.

இந்த வாட்ஸப் ஆர்வக்கோளாறுகள் செய்வதற்குப் பெயர்தான்நெட்வொர்க்கிங்காம். அந்தமேப்ஸ்பார்க்கும் மேதாவிகள் செய்வதற்குப் பெயர்தான்செல்ஃப்-சஃபிஷியன்ஸியாம். இந்தக் கிறுக்குத்தனத்தை வைத்துத்தான் லாரி பேஜும், மார்க்கும், ஜெஃப் பெஸோஸும் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்கள் சிலர் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்போது, பல நேரங்களில் நான்திருதிருவென விழித்துக்கொண்டிருப்பதைச் சாப்பாட்டு மேசைகளிலும், திரையரங்குகளிலும் சமீபத்தில் உணர்கிறேன். காரணம், அவர்கள் பேசுவதுட்ரெண்டிங்கான விவகாரங்கள். நான் உன்குழாயைப் (‘யூட்யூப்எனும் சொல்லுக்கான தமிழ் வடிவம். நன்றி: மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் (சீமானைக் கலாய்த்து அவர்கள் வெளியிட்ட ஒரு காணொலியில் அச்சொல்லைக் கேட்க நேர்ந்தது. பாருங்கள், ‘ட்ரெண்டிங்வியாதிக்கு நானும் அவ்வப்போது பலியாகிக்கொண்டுதான் இருக்கிறேன்) பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. “டேய், இந்த நியூஸ் தெரியாதா உனக்கு? என்னடா நீ?” என்ற கேள்விகளைத் தினமும் ஒருமுறை எதிர்கொள்கிறேன். முதலில் அவமானமாக இருந்தபோதும், “அய்யய்யோ, நமக்கு ஒண்ணுமே தெரியல போல” என்பதான ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றியபோதும், நாட்போக்கில், “ஆமாம், தெரியாது. இப்ப அதுக்கு என்ன?” என்று கேட்கும்/உள்ளூற நினைக்கும் தெனாவட்டு நிலைக்கு வந்திருக்கிறேன்.

நான் கல்லூரி முதலாமாண்டு முடிக்கும்வரையில் கூட, இந்த பைத்தியக்காரத்தனம் பரவலாக இருந்ததில்லை. இன்னும் நினைவில் இருக்கின்றன, கோயமுத்தூரிலிருந்து, கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மாறி வந்தபோது புதிய நண்பர்களை நேரில் சந்தித்த நாள். பெட்டி, படுக்கையோடு நானும், அப்பாவும் விடுதியறைக்கு முதன்முறையாகச் சென்றபோது அறைவாசி காற்சட்டையுடன் குப்புறப் படுத்துக்கொண்டுசிலபல சுகானுபவக் காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தது அப்படியே பதிந்துவிட்டது. அதற்கு முன்பாக ஆறாம் வகுப்பில் புதிய பள்ளிக்குச் சென்றபோது முதல்நாளில் பயமுறுத்திய சூழல் பசுமரத்தாணியாக இருக்கிறது. பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்த தனிப்பயிற்சி வகுப்புகளும், அவற்றின் முதல் வகுப்புகளும் - தனசு சாரும், சகாயம் சாரும், ஜே.பி. சாரும் - நெஞ்சாங்கூட்டில் நிறைவாய் நிற்கின்றன(ர்).

இணையத்திலேயே செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை வந்த பிறகு, வலிந்து சில நாட்கள் புத்தகம் படிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது. சில நாட்கள் வேண்டுமென்றே செய்திகள் எதையும் பார்க்காமல், படிக்காமல் இருந்துவிடுகிறேன்; அவ்வப்போது எனக்கு நானே செய்துகொள்ளும் மனச்சோர்வு நீக்கும் வலிநிவாரணி இதுதான். செய்தித்தாள் படிப்பதும், நம்மைச் சுற்றி நடக்கும் அரசியலைத் தெரிந்துகொள்வதும், ‘நெட்வொர்க்கிங்செய்வதும் நன்று; அதனினும் நன்று நாம் நாமாக இருத்தல்; அதனினும் நன்று, நமக்குப் பிடித்தவற்றைச் செய்தல்.


ஒண்ணும் சொல்றதுக்கில்ல! என்ன நாஞ்சொல்றது?