Monday, January 8, 2018

அடக்குனா அடங்குற ஆளா நீ: #கேஸ்ட்லெஸ்_கலெக்டிவ் கான்சேர்ட் எனும் குரல்

கல்லூரிக் காலங்களில், “எதுக்குடா கேஸ்ட் பேஸ்ட் ரிசர்வேஷன்? எக்கனாமிக் பேஸ்டா இருந்தாத்தானே நல்லது?” போன்ற கேள்விகளைக் கேட்டு கத்திக் கருவிக் கொண்டிருந்த பலருள் நானும் ஒருவன். பட்டப்படிப்பை முடித்து வேலைசெய்யத் தொடங்கிய பின்னர்தான், என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் பொதிந்திருக்கும் மனிதர்களிடையேயான ஏற்றத்தாழ்வு மெல்லமெல்லப் புலப்படத் தொடங்கியது. வேலை செய்யும் இடத்தில் இருந்த பல்வேறு படிநிலைகள் - நான் சொல்வது மேனேஜர், பாஸ், எம்ப்ளாயீ எனும் படிகளல்ல - சிந்தனையோட்டத்தைச் சற்றே தூண்டிவிட்டது. வேலைபார்க்கும் நிறுவனம் தொடர்பான வேலை செய்பவர்களை ஒரு குழாமாகக் கருதினால், அதற்குக் கீழேயுள்ள படியில் வருபவர்கள், நிறுவனம் தொடர்பான வேலை செய்பவர்களின் வசதிக்காக வேலை செய்பவர்கள், அதற்கும் கீழே இருப்பவர்கள் மேலே சொன்ன இரு படிகளில் இருப்பவர்களின் சக்கைகளாகப் பயன்படுத்தப்படுபவர்கள் (ஒரு சிறிய உதாரணம்: முதல் படி: சாஃப்ட்வேர் தெரிந்த இஞ்சினியர், இரண்டாம் படி: அவரைக் கொண்டுவந்து கூட்டிச்செல்லும் மகிழுந்து ஓட்டுநர், மூன்றாம் படி: இவர்கள் எல்லாம் சாப்பிட்ட தட்டைக் கழுவுபவர்கள், கழிப்பறைகளைச் சுத்தம் செய்பவர்கள்).

இதில் முதல் படியில் இருப்பவர்கள்தாம் இரண்டு மற்றும் மூன்றாம் படியில் இருப்பவர்களை தள்ளுகிறார்கள் என்று பார்த்தால், இரண்டாம் படியில் இருப்பவர்களும் மூன்றாம் படியிலிருப்பவர்களைத் தள்ளுகிறார்கள். இந்த பல்வேறு தட்டுகளைக் கொண்ட சமூகக் கட்டுமானத்தின் பாதாளத்தில் தொங்கிக் கொண்டிருப்பவர்களின் ஒரு எழுச்சிக் கொண்டாட்டமேநீலம் பண்பாட்டு மையம்கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடத்தியகேஸ்ட்லெஸ் கலெக்டிவ்இசை நிகழ்ச்சி.

கீழ்பாக்கம் சி.எஸ்.. பெயின்ஸ் பள்ளி மைதானத்தில் மாலை ஆறு மணிக்கு நிகழ்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 6.05-க்கு உள்ளே சென்ற எனக்கு ஆச்சரியம். நான் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ‘போறோம், சேர்ல உக்காந்து கெத்தா நம்ம சென்னைக் கானா, ராப் எல்லாத்தையும் கேட்டுட்டு வர்றோம்என்ற மிதப்பில் வந்த என்னை அந்த ஆரவாரம் அடக்கியது. எனது கல்லூரியின் கலைவிழாவானடெக்கோஃபெஸ்ஸிற்கு இணையாக மேடை அமைக்கப்படிருந்தது. இறுதி ஒலிப் பரிசோதனைகள் நடந்தேறிக்கொண்டிருந்தன. மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில்கபாலி’, ‘மெட்ராஸ்திரைப்படங்களின் காணொளிக் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.

சரியாக 6.15 மணியளவில் குழுமியிருந்த அனைவரின் தன்னிச்சையான, ஒட்டுமொத்த ஆரவாரக் குரலுக்கு மத்தியில்கோட், சூட்சகிதம் சுமார் இருபது பேர் மேடையேறினர். திறந்தவெளி அரங்கையும் மீறி, அப்பெருமிதக் கூச்சல் காற்றில் கலந்துவிடாமல் அரங்கின் சுற்றுப்புறங்களிலேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்தது போலத் தோன்றியது.

முதலில் சென்னையைப் பற்றிய கானா பாடலில் தொடங்கிய நிகழ்ச்சி, அடுத்தபடியாக வந்த உரிமைகள் குறித்த ராப் பாடலில் சூடுபிடித்தது. “எங்க உரிமை எங்க கையில, நீங்க சொன்னத ஏண்டா செய்யிலஎனும் ஒற்றை வரி ஓட்டுப்போடும் அப்பாவி மக்களின் ஆள்காட்டி விரல் மையிலிருந்து, காலங்காலமாக ஏமாற்றும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது. தொடர்ந்து வந்தது மெதுவான தாள லயத்தில் ஒலித்த ராக் வகையிலானமெட்ராஸின் மகிழ்ச்சிஎனும் பாடல். இம்மண்ணிற்கே உரிய இசையின் தன்மையை லேசாகக் கோடிட்டுக் காட்டுவதாகவும், ‘அந்நிகழ்ச்சி ஏன் நடக்கிறது?’ என்பதற்கான ஒரு மேலோட்டமான பதிலாக அமைந்தது இது. ‘மெட்ராஸின் மகிழ்ச்சி, அது நாம் தானே மச்சி; இது கானா நிகழ்ச்சி, இனி செய்வோம் புரட்சிஎனும் வரிகள் உணர்த்திய கருத்துக்கள் ஏராளம்.

இசைக் கலைஞர்கள் அனைவருமே ஆக்ரோஷமான இசை அம்சங்கள் கூடிய ஒரு பாடலுக்கு நடுவே, சற்றே மிருதுவான ஒலியமைப்புடன் கூடிய பாடல்கள் இடம்பெறுமாறு செய்திருந்தனர் என்பது, நான்காவதாக வந்த சென்னை மக்களின் இழிவைச் சொல்லும் பாடல். ‘ஊருக்குச் சொந்தக்காரன் ஊருக்கு வெளிய நின்னான்; பேருக்குச் சென்னைக்காரன் ஏதேதோ சட்டம் சொன்னான்’ எனும் ஒற்றை வரியில் கண்ணகி நகரின் அவலத்தைப் பேசிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடலின் அடிநாதத்திற்குச் சற்றும் சளைக்காததாக இருந்தது இப்பாடல்.நீ வந்து சென்ற ஊரு டா, நான் இங்கயே பொறந்த வேரு டாஎனும் வரிகள்கருத்தவன்லாம்…’ பாடலின் ரௌத்திரத் தொனியாக இருந்தது.

நிகழ்ச்சியில் பாடிய, இசையமைத்த, மேற்பார்வை செய்த அனைவருமே சிறந்த கலைஞர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென்றபோதிலும், அறிவு (எ) அறிவரசன் எனும் ராப் பாடகர்/கவிஞரின் பாதிப்பு மட்டும் என் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். குடிமைப் பணித் தேர்வுகளுக்காக அவர் படித்துக் கொண்டிருப்பதாக நிகழ்ச்சியின் இறுதிக்கட்டங்களில் இயக்குநர் பா. ரஞ்சித் அறிவித்தது ஒரு காரணம் என்றே வைத்துக்கொண்டாலும் கூட, அறிவு-வின் பாடல்களின் அழுத்தமும், அவரது குரலின் வேகமும், அவ்வேகத்திலும் பிழையற்ற தமிழ் உச்சரிப்பே பிரதானமான காரணமாயிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

நம்ம நாட்டுல ரெண்டு வகையான கொலை நடக்குது; ஒண்ணு, மீனவக் கொலை; இன்னொண்ணு, ஆணவக்கொலை” என்று சீறிய அவர், “தள்ளுபடி செய்யுறாண்டா பணக்காரன் கடன, வெவசாயியத் தள்ளுறாண்டா கெணத்துல உடனே” எனும் வரியில் ஈர்த்தார்.

ஊருக்கு முன்னால பேசுறடா நீதிய, யாருக்குமே தெரியாம கேக்குறடா சாதிய”, “தலமுற தலமுறையாச் சாதி பாக்குற, நான் படிக்க வந்த அதையும் ஏன்னு கேக்குற” எனும் இட ஒதுக்கீட்டையும், அது சார்ந்த அரசியல் படிநிலைகளையும் பேசிய பாடல் மிக முக்கியமான ஒன்று.

ஜெய் பீம்” ராப் சிலிர்ப்பை ஏற்படுத்தியது எனில், தொடர்ந்து வந்த மீனவக்கொலை தொடர்பான பாடல் மற்றும் மனித மலங்களை மனிதரே அள்ளும் அவலம் பற்றிய பாடல் ஆகியவை நெகிழ்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தின.

ஒவ்வொரு பாடலின் ஒவ்வொரு வரியுமே சமூகத்தின் மீதான கேள்விகளை அடுக்கின, சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தாக்கின என்றாலும், மேலே குறிப்பிட்டவை தவிர்த்து சில வரிகள் மிக முக்கியமானவை:

கருவாடு கருவாடு நீ செத்துப் போனாக் கருவாடு
ஒரவாடு நீயும் ஒரவாடு வாழுற வரைக்கும் ஒரவாடு

ஐந்தறிவு உள்ளவரெல்லாம் மிருக ஜாதிடா
ஆறறிவு மனிதருக்கு ஒரே நீதிடா

வடசென்ன எப்புடி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா
உண்மைய எடுத்து சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா

உன் பாட்டனெல்லாம் வெச்சாண்டா என் பாட்டனுக்கு வேட்டு
அதனால தாண்டா தரான் இப்போ கோட்டாவுல சீட்டு

நாங்க ப்ளாட்ஃபாரம் எங்க நெலம எப்ப மாறும்?’ எனும் கடைசிப் பாடலின் மெட்டை அசைபோட்டுக்கோண்டே இதைத் தட்டச்சு செய்கிறேன். இவ்வேளையில், தமிழ்வாணி என்ற பெண் இசைக்கலைஞரை உள்ளடக்கிய (அவரே பேசும்போது சொன்னார், “பொதுவாக கானான்னா ஆம்பளைங்களத்தான் பாத்திருப்பீங்க. இப்போ லேடிஸோட உரிமையப் பேசுறதுக்கு, பாடுறதுக்கு நான் இருக்கேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது) சுமார் இருபது பேர் கொண்ட குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நிகழ்ச்சியின் முழு அவகாசத்திலும் ஒன்றாகவே இருந்தது சொல்லியே ஆக வேண்டிய ஒற்றுமைக்கான குறியீடு.

சுய அறிமுகத்திற்கான நேரத்தில் ஒவ்வொருவரும் தன்னை இசைக்கு அறிமுகப்படுத்தியதாக மற்றொருவரைக் குறிப்பிட்டதும், தாராவியின் குடிசைப் பகுதியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்களைச் சென்னைக் கலைஞர்களுடன் இணைத்த அம்மேடையும் காலத்தின் குரலாக எப்போதும் நினைவுகூறப்படும்.


இறுதியாகப் பேசிய ஒரு இசைக்கலைஞர் கூறிய “இனிமே லுங்கி கட்டின்னு தான் பாடணும்னு எங்கள யாரும் சொல்லக்கூடாது; நாங்களும் கோட், சூட் போட்டுன்னு பாடுவோம்” எனும் அறிவிப்பும், ரஞ்சித் கூறிய கம்பீரமான “இது அரசியல் மேடைதான். இசை எனும் கலையின் வழியே இங்கே அரசியல்தான் பேசப்பட்டது” எனும் கூற்றும் அடக்குமுறை எதிர்ப்பின் குரலாக ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

கனவு மெய்ப்படும் - சத்தியமாக

கல்வி குறித்தும், நம் பள்ளிகளில் பரவலாகியிருக்கும்பயிற்றுவிக்கும் முறை - கற்கும் முறைகுறித்தும் பேசும்போதெல்லாம்குழந்தைகள் கற்கும் வழிமுறையை மாற்ற வேண்டும்”, “பெற்றோரிடம் தம் குழந்தைகளுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்என்ற இரு முதன்மையானவேண்டும்களைத் தாண்டி, “ஆசிரியர்களுக்குக் கற்பிப்பதற்கான சரியான வழிமுறைகளைக் கற்பிக்க வேண்டும்என்பதும் மிக முக்கியமானது.

ஆனால், குழந்தைகளையும், வழிமுறையையும், பெற்றோர்களையும் பற்றிப் பேசும் நாம், ஆசிரியர்களைப் பற்றிய ஒரு கீழ்மையான கண்ணோட்டத்தையே கொண்டிருக்கிறோம். “அவங்க எங்க சார் நடத்தப் போறாங்க?”, “அவங்களையெல்லாம் திருத்தவே முடியாதுஎன்ற ரீதியில் நாம் பேசுவதற்கான காரணிகள் பலவாக இருந்தாலும், ‘வேண்டும்களிலும், ‘முடியும்களிலும் ஆசிரியர்களை நாம் சேர்ப்பதே இல்லை என்பதே நிதர்சனம்.

= குறியீட்டிற்கு இடப்புறம் குழந்தைகள், பெற்றோர்கள் போன்றவர்களை வைக்கும் நாம், வலப்புறம் ஆசிரியர்களை வைத்தால்தானே சமன்பாடு முற்றுப்பெறும்? இக்கண்ணோட்டத்தில், ‘ஆசெஃபா ஃபௌண்டேஷன்எனப்படும் வினோபா பாவேயால் தொடங்கப்பட்ட அமைப்பு நடத்தும் கடலூர் கண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும்சர்வ சேவ பள்ளியில், ‘டீச் ஃபார் இந்தியாஎனும் அமைப்பு நடத்திய மூன்று நாள் நிகழ்வே (திசம்பர் 28, 29, 30) ‘கனவு கேம்ப்’.

சுமார் 54 ஆசிரியர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளையும் ஒன்று திரட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்வு, ‘கிண்டர் கார்டென்என்று சொல்லப்படும் பிஞ்சுப் பருவக் குழந்தைகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரையிலான பருவம் வரையிலான அனைவருக்குமான கல்வி எவ்வாறு கற்பிக்கப் படவேண்டும் என்பதான ஒற்றைப் புள்ளியில் சங்கமித்தது. மிகுந்த ஆச்சரியத்தை உண்டு செய்த விஷயம், கலந்துகொண்ட 54 ஆசிரியர்களும், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளைப் போலவே வசதி, வாய்ப்புகளின்றித் தவிக்கும் மக்கள்தாம் எனும் உண்மைதான். ஆனால், அவர்கள் அனைவரும் - ஒருவர் விடாமல் - மூன்று முழு நாத்களும் குழந்தைகளாகவே மாறிக் கற்றனர் என்பது புதியதொரு சிந்தனைத் திறப்பாக இருந்தது.

ஒருகார்ப்பொரேட்நிறுவனத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் மேலாண்மை, கூட்டுமுயற்சி போன்ற அனைத்தும் அங்கேடீச் ஃபார் இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் அனாயசமாக வெளிப்பட்டது. அதை அவர்கள் கற்க வந்திருந்த ஆசிரியர்களிடமும் கடத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

நான் பார்த்து வியந்து, சிந்தித்த இரு முக்கியமான அம்சங்கள் ஜாலி ஃபானிக்ஸ் என்று சொல்லக்கூடிய எழுத்துக்களின் ஒலிவடிவங்களின் மூலமாக மொழியைக் கற்பிக்கும் வழிமுறை, மற்றும் லேர்னிங் சர்கிள் என்று அழைக்கப்பட்ட அமர்வு (ஆசிரியர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சிறிய விளையாட்டுகளின் மூலம் அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களைப் புரிய வைக்கும் வழிமுறை).

“குழந்தை முதலில் சொல்வது ‘அம்மா’ எனும் சொல்லைத்தான், ‘அ’ எனும் எழுத்தை அல்ல; எனவே, ‘அஆஇஈ’யோ, ‘ஏபிசிடி’யோ ஒரு குழந்தைக்கு ஐந்து வயதில் சரியாக எழுத வரவில்லையென்றால் தவறு அவர்களிடம் இல்லை, நம்மிடம் இருக்கிறது; நாம் கற்பிக்கும் தலைகீழான முறையில் இருக்கிறது” என்று தொடங்கிய ‘ஜாலி ஃபானிக்ஸ்’ நேரம் மொழியை எவ்வாறு கற்பிக்க வேண்டும்/கற்க வேண்டும் என்பதற்கான ஒரு கட்டுமானம். ‘பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்டு வீக்கு’ என்ற குறையே ஏற்படாதவாறு மொழிக்கல்வியை முழுமையாக்கும் இம்முறை அனைத்து ‘பேஸ்மெண்டு’களுக்கும் தேவை என்றே தோன்றியது.

“’ஏபிசிடி’ என்ற வரிசையே குழந்தை கற்பதற்கான முறையல்ல; ‘எஸ், ஏ, டி, ஐ, பி, என்’ என்ற ஆறு எழுத்துக்களைத்தாம் பாலர்கள் முதலில் கற்க வேண்டும். ஏனெனில் இந்த ஆறு எழுத்துக்களின் பல்வேறு கலவைகளில்தான் அதிகபட்சமான இரண்டெழுத்து ஆங்கிலச் சொற்கள் உருவாகின்றன. ஓரெழுத்துச் சொற்களிலும், ஈரெழுத்துச் சொற்களிலும்தான் ஒரு குழந்தைக்கான மொழிக்கல்வி தொடங்க வேண்டும்” என்ற கூற்று, நாம் எத்தகைய தவறான முறையில் ஊறியிருக்கிறோம் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.

“த ஸ்னேக் இஸ் இன் த க்ராஸ், த ஸ்னேக் இஸ் இன் த க்ராஸ், ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் த ஸ்னேக் இஸ் இன் த க்ராஸ்” என்று ஒரு பாம்பு புற்களுக்கிடையே மறைந்திருக்கிறது எனும் எளிமையான வரியைக் கொண்ட பாடலின் மூலம், ‘ஸ்ஸ்ஸ்’ என்ற ‘எஸ்’ எழுத்திற்கான ஓசை வெளிக்கொணரப்பட்டது புதுமையான முறையாக இருந்தது.

கதை -> ஓசை -> பாடல் -> காற்றில் எழுதுதல் -> தரையில் (அல்லது உள்ளங்கையில் எழுதுதல்) -> அவ்வெழுத்தின் ஓசையை வெளிப்படுத்தும் பிற வார்த்தைகள்

இவ்வரிசைப்படிதான் ஒரு குழந்தைக்கு எழுத்துக்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நம்மில் எத்தனை பெற்றோருக்கும் (ஏன் நமக்கும் கூட), ஆசிரியர்களுக்கும் தெரியும்? குழந்தை மனம் கதை கேட்க இயல்பாகவே ஆர்வமடையும் என்பதனால் கதையில் தொடங்கி, அக்கதையின் ஓரங்கமாக அவ்வெழுத்தின் ஓசையை உள்ளடக்கி, அதனைப் பாடலின் மூலமாக மீட்டுருவாக்கம் செய்து, பின்னர் எழுத்தின் வடிவத்தை காற்றில் வரைந்து (அல்லது, உள்ளங்கையிலோ, தரையிலோ வரைந்து), இறுதியாக அவ்வெழுத்து தொடர்பான மற்ற வார்த்தைகளைக் (சிறுசிறு சொற்கள்) அறிமுகப்படுத்த வேண்டும் எனும் ஒரு வடிவமே சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

இன்னொரு பக்கம் வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்களில் வரும் ‘பஞ்சாயத்து அமைப்பு முறை’யை விளக்குவதற்கு, வகுப்பறையிலேயே ஒரு மாதிரித் தேர்தலை நடத்துவது மாணவர்களுக்கு பாடத்தின் கருவை எளிதாகக் கொண்டு சேர்க்கும் என்பதும், அவர்கள் பார்க்கும், கேட்கும், அறியும் விஷயங்களினூடே பாடங்களை விளக்குவதுதான் சிறந்த முறை என்பதும் ‘நெற்றிக்கண்’ திறந்த நிஜங்கள்.

‘மார்ஷ்மாலோ சேலஞ்ச்’ எனும் விளையாட்டின் (வேலைக்குச் சேர்ந்த பிதிதில் ‘டிரெய்னிங்’ காலத்தின் போது எங்களையும் இவ்விளையாட்டு விளையாடச் சொன்னதும், நாங்கள் ‘ஈகோ’ வினால் சொதப்பியதும் நினைவுக்கு வந்தது) மூலமாகக் குழு மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற விழுமியங்களை விளக்கிய ஏற்பாட்டாளர்கள், குழு என்றால் பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியர்கள் அடங்கிய ஒரு குழாம் என்றும், சிற்சில போதாமைகளை நாம் ஏற்று அதன்வழி புதிதாகக் கற்பிப்பதற்கான வழிமுறைகளை கண்டறியலாம் என்றும் கூறியபோது, கற்பித்தலைக் கற்க வந்திருந்த அனைத்து ஆசிரியர்களின் கண்களிலும் விவரிக்க முடியாத பிரகாசம். “என் குழந்தைகளுக்கு, என் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு நான் சொல்லித்தர இவ்வளவு இருக்கிறது; இதை நான் செவ்வனே செய்வேன்” எனும் ஒரு ஆர்வம் தென்பட்டது.

கடலூர்க்காரன் என்ற முறையில் 2015-ல் செய்த மழைப்பாதிப்பு உதவிப்பணிகளை விட, இம்மூன்று நாட்கள் அங்கிருந்து செய்த, கற்ற பல்வேறு விஷயங்கள் மனத்திற்கு நிறைவைத் தருவதாக அமைந்தன. “நீங்க இந்தூரேவா தம்பி? எந்த ஏரியா? எங்க ஸ்கூல் படிச்சீங்க?” என்று வந்திருந்த ஆசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மற்ற ஏற்பாட்டாளர்கள் பார்க்கிறார்களா என்ற ‘மைனர்’ பெருமை வேறு சொல்லி மாளவில்லை.


மூன்று நாட்களின் முடிவில், ஆசிரியர்கள் அனைவரும் ஏகோபித்த குரலில், “அப்பப்போ இந்த மாதிரி வந்து எங்களுக்குச் சொல்லிக்குடுத்துட்டுப் போங்க” என்று சொன்னது, தவறு நம் மனத்தில் தான், ஆசிரியர்களிடத்தில் இல்லை என்பதைப் பொடனியில் அடித்து உருவேற்றியது. ‘கனவு கேம்ப்’ இரண்டு உண்மைகளைத் தெளிவாக உணர்த்தியது: 1) கனவு மெய்ப்படும் - நிச்சயமாக, சத்தியமாக. கல்லியிலிருந்தே அது தொடங்க முடியும்/வேண்டும். 2) வாய்ப்பு கிடைத்தால் யாரும் கனவை நனவாக்க முடியும்.

அதாகப்பட்டது…

என்ன ப்ரோ, நியூ இயர் ரெசொல்யூஷனெல்லாம் எடுத்தாச்சா?” என்று ஆரம்பித்து, “ஆமா, அவன் கிழிச்சான். போன வருஷம் கூடக் கெட்ட வார்த்தையே பேச மாட்டேன்னு ரெசொல்யூஷன் எடுத்தான்; பத்து நாள்ல காத்தோட போச்சு. அவன் கெடக்குறான் கபோதிஎன்பது வரை எனது புத்தாண்டு உறுதிமொழிக்கான வம்புதும்பு செய்திகளுக்குக் குறைவில்லை. சிலர் கொடுத்த காசுக்கு மீறிக் கூவுகின்றவர்களாக, “ப்ரோ, இதை வெச்சு எதாச்சும் எழுதவேண்டியதுதானே?” என்று கிளப்பிவிட்டனர்.

நமக்குத்தான் சும்மாவே கை அரிக்குமே? “சர்தான் களுத, அதையும் எளுதித் தொலையுவோம்என்ற எண்ணத்தில் இக்காவியத்தை இங்கு இனிதே தொடங்குகிறேன்.

முதலில் ஃபிளாஷ்பேக். கொஞ்சம் பெரிய்ய்ய்ய ஃபிளாஷ்பேக். என்னங்க செய்வது? தமிழ்ப்படம் பார்த்துப் பார்த்து வளர்ந்த கோலிவுட்டின் குழந்தை நான் (தாங்கள் எடுக்கும் படங்களையேகுழந்தைகள்எனும் வகைமைக்குள் கொண்டுவரும் இயக்குநர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். அதற்குள் இப்போது மூக்கையோ, நாக்கையோ நுழைக்க வேண்டாம். மூத்திரச் சந்தில் வைத்துக் கும்மினாலும் கும்மிவிடுவார்கள்நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிநடத்தி, நடிகர் சங்கக் கட்டடத்திற்கு நிதி திரட்டும் ஏழைகள். * ஆம்பள ஆம்பள ஆஆஆ ஆம்பள *).

கல்லூரி இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். மூன்றாவது செமஸ்டர். முதல் வருடத்தில் விடுதியறையில் தங்கியிருந்த நால்வரில் மூவர் இரண்டாமாண்டிலும் அறைவாசிகளாயிருந்தோம் (எங்கள் அலப்பறை தாங்காமல் நான்காவது ஆள் தலைதெறிக்க ஓடியதும், புதிதாக வந்த நான்காவது நபர் அறையில் தங்கவேயில்லை என்பதும் தனிக்கதை). வார நாட்களில் முதல் வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு நிதானமாக எழுந்து பல்துலக்கிக் குளித்து (சில நாட்கள் பல் மட்டும் துலக்கி) ‘மெஸ்சில் டிஃபன் சாப்பிடும் எனதருமை அறைவாசிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் அலாரம் வைத்து விடியற்காலை 8:30 மணியளவில் எழுந்து அவசரமாகப் பல்துலக்கிவிட்டு ஓடுவார்கள். அன்று காலையுணவு தோசை. இருப்பதில் சற்றே உண்ணுமளவிற்கு இருக்கும். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையல்லவா?

வார நாட்களில் வில்லிலிருந்து புறப்படும் அம்பாக வகுப்பிற்குக் கிளம்பும் நான், வாரக் கடைசியில் வெண்கலச் சொம்பாகச் சோம்பல் முறித்து எழுவதற்குள் மணி பத்தோ, பதினொன்றோ கடந்திருக்கும். இந்த லட்சணத்தில் ஒன்பது மணிக்கு ஒருமுறை, ஒன்பதரைக்கு ஒருமுறை அலாரம் வேறு அடிக்கும். உச்சக்கட்டமாகவெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே, விடியும் பூமி அமைதிக்காக விடியவேஎன்று அதற்குத் தோதாகப் பாடல் வேறு.

அப்படிப்பட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான் அது நிகழ்ந்தது. கட்டிலை விட்டு எழுந்து காலைக் கீழே வைத்தபோது வலதுகால் சற்றே சுரணையற்றிருப்பது போலத் தோன்றியது. உதாசீனப் படுத்தியபடி எழுந்து நடக்க முயன்றபோதுதான் விபரீதம் புரிந்தது. வலதுகால் முற்றிலுமாக உணர்வை இழந்திருந்தது. முருங்கைக்காயைப் போல வளைந்து, நெளிந்தது. நிலையாக நிற்க முடியவில்லை. மேலும் ஓரடி எடுத்து வைத்தபோது கீழே விழுந்துவிட்டேன். விழுதல் என்றால் தடுக்கி விழுந்து, விழுப்புண்கள் பெறும் அளவிற்கான விழுதல் அல்ல; ‘பப்பரப்பாஎன்று தடுமாறி தரையில் ஒருமாதிரி உட்கார்ந்துவிட்டேன். ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. காலைத் தடவிக் கொடுத்தேன். பாதத்தில் உள்ளங்கையை வைத்து வேகமாகத் தேய்த்தேன், சூடு பரவினால் சொரணை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்போடு. மெல்லக் கையைத் தரையில் ஊன்றி, மீண்டும் எழுந்து நிற்க முற்பட்டபோதுஉடலின் மொத்த எடையும் இடதுகாலினால் தாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறதுஎன்ற உண்மை முகத்தை வெளிறச் செய்தது.

கட்டிலில் சாய்ந்துவிட்டேன்; உலகம் இருட்டிக்கொண்டுவருவதைப் போலிருந்தது. கண்ணை மூட முயற்சி செய்தாலும், அவ்விருளிலும் விதவிதமான ஊதாவிலும், பச்சையிலும் ஏதேதோ உருவங்கள் மூடிய இமைகளுக்கும், விழிகளுக்கும் இடையே நடனமாடின. மீண்டும் எழுந்தமர்ந்தேன். சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தேன். இரண்டு, மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். தொடையில் ஏதோ ஒட்டுவது போலிருந்தது; சிறுநீர் கழித்திருந்தேன் என்னையறியாமல். இப்போது பயம் பல மடங்காகியது. ‘அதுவும் சொரணையற்றுப் போயிருந்தது.

நண்பர்கள் வருவதற்கு முன்பாகக் கால்சட்டையை மாற்றிவிடலாம் என்ற என் எண்ணத்தில் மண்ணையள்ளிப் போட்டான், அறைவாசி இக்பால். “என்ன மச்சான் நொண்டுற?” என்று எக்களித்துச் சிரித்த அவனுக்கும் என் நிலைமை புரிய வெகுநேரம் ஆகவில்லை. வித்யாசாகரும், இக்பாலும் தம் தோள்மீது என் கையைச் சாய்க்கச் செய்து, என்னை விடுதிப் படிக்கட்டின் வழியே தரைத்தளத்திற்கு அழைத்துச் சென்று, ஆட்டோவில் ஏற்றியது நன்றாக நினைவில் இருக்கிறது. முதலில் கல்லூரிக்கருகில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, ‘தவறான பழக்கத்தால் விளைந்த விளைவாக இருக்கலாம் என்று அவர் சொன்னது நினைவிருக்கிறது. ‘ஆண்மைக்குறைவுஎனும் பிரச்சனை பற்றி அவர் கூறியதை, அவசரமாகக் கடலூரிலிருந்து சென்னைக்கு விரைந்து வந்திருந்த அம்மாவிடம் - அவரை அழைத்து வந்திருந்த தி.நகர் பெரியம்மாவிடமும் - சொல்லாமல் விட்டது நினைவிருக்கிறது.

மிகவும் பிரயத்தனப்பட்டு என்னைக் கடலூருக்கு அழைத்து வந்து வீட்டுப் படுக்கையறையில் அம்மாவும், அப்பாவும் கைத்தாங்கலாகப் படுக்க வைத்தது நினைவிருக்கிறது. அவர்கள் இருக்கும் நேரம், “ம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்லம்மாஎன்று சமாளித்துச் சிரித்து, அவர்கள் அறையை விட்டு அகன்றதும், ‘ஆண்மைக்குறைவாக இருக்குமோ?’ என்ற கேள்வியால் துளைக்கப்பட்டு குப்புறப் படுத்து அழுதது நினைவிருக்கிறது (அழுகையின் விளைவாய் நான் தலை புதைத்திருந்த தலையணையும், அதன் விளைவாக அதனில் அழுந்தியிருந்த என் முகமும் அனலாகக் கொதித்தது நினைவிருக்கிறது).

பின்னர், கடலூரில் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் ஒருவரிடம் சென்றதும், அவர்உங்கள் உயரத்திற்கும், எடைக்குமான சமநிலை பிசகியிருப்பதால் வந்த கோளாறுதான் இது; இதுக்கும் ஸ்டெரிலிட்டிக்கும் சம்மந்தமே இல்லைஎன்று சொன்னது நினைவிருக்கிறது. எக்கோ, எக்ஸ்-ரே போன்ற பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, ‘சையாட்டிக்நரம்பு - முதுகெலும்புக்கும், கால்களுக்கும் பாலமாகச் செயல்படுகிற நரம்பு - எனது உயரத்திற்கேற்ற எடையில்லாததால் வலுவிழந்து அவ்வப்போது வீங்குகிறது என்ற முடிவை உறுதி செய்தது நினைவிருக்கிறது. அதற்குப் பின்பான ஒருமாத கால ஓய்வு நினைவிருக்கிறது. அப்போது வேறு வழியேயின்றி நான் படித்தஉயிர்மை’, ‘காலச்சுவடு’, ‘உயிர் எழுத்துபோன்ற இதழ்கள் நினைவிருக்கின்றன (இப்போது அவை (உயிர்மை தவிர்த்து) வழக்கமாகப் படிக்கும் இதழ்களாக மாறியிருப்பது நற்செய்தி).

அந்த ஒன்றரைமாத காலம் என் எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் ஏற்படுத்திய மாற்றம் சொற்களால் விவரிக்க முடியாதது. முதுகெலும்பின் நுனியில் இருக்கும் ஒரு சிறிய நரம்பு, என் எடை-உயரச்சமத்துவமின்மையைப் (நாட்டின் பெரிய பிரச்சனை நம் உடலில்தான் தொடங்குகிறது என்பது இதனூடே நான் சொல்ல வரும் உபகருத்து, ஹாஹா) பதினெட்டு ஆண்டுகளாகத் தாங்கியிருந்திருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. கூடவே, அவ்வளவு ஆண்டுகாலம் என்னைத் தாங்கிப் பிடித்திருந்த ஒரு நரம்பு ஒரே நாளில் வேலையைக் காட்டிவிட்டது என்பது இன்னும் யோசிக்க வைத்தது. ‘என்ன வாழ்க்க டா இது?’ என்பதான சிந்தனை அது.

அப்போது எடுத்த முடிவு கல்லூரி இறுதியாண்டு வரை என்னைச் சுறுசுறுப்பாகவே வைத்திருந்தது; இப்போதும் வைத்திருக்கிறது. “எதாச்சும் செய்யணும்ணேஎன்ற நினைப்பே அது. பல்வேறு பொறுப்புகளை இழுத்துப்போட்டு வேலை செய்திருக்கிறேன். நண்பர்களுக்கு உதவ வேண்டும், முடிந்த வரையில் ஏதேனும் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. ஏனெனில் என் முதுகுப் பிரச்சனையின்போதும், அதிலிருந்து மெதுமெதுவே மீண்டு வந்த பின்பும் உதவி செய்த நிறைய நண்பர்கள் எந்த எதிர்பார்ப்புமின்றிச் செய்தனர் என்பதே உண்மை.

சீக்கிரம் எதாச்சும் பெருசா செஞ்சுடணும். அடுத்த தடவ எப்போ கால் சைடு வாங்கும்னு தெரியல. இப்போ நல்லாத்தானே இருக்கோம்? புதுசா எதாச்சும் பண்ணுவோம், தெரிஞ்சிப்போம், முயற்சி பண்ணுவோம்என்ற எண்ணம் ஒவ்வொரு நாளையும் உயிர்ப்பாக மாற்றுகிறது. ஏனென்றால் மரபணு ரீதியாகவே சிலர் ஒல்லியாய் இருப்பதும், சிலர் அளவிற்கு மீறிய எடையுடன் இருப்பதும் மாற்றவியலாத விஷயங்கள். நம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைத் தானே தலைவா மாற்ற முடியும்?

எனவேஆகஅதாகப்பட்டதுநான் சொல்வது என்னவென்றால்ஓரிரு வருடங்களோ, ஐந்து வருடங்களோ ஏதேனும் உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. குடும்பம், குட்டி, வேலை, வாழ்க்கை என்று வருவதற்கு முன்பாக மட்டுமாவது, நாற்பது வருடங்களுக்குப் பின் நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்குமளவிற்கான சிற்சில மனிதக் கடமைகளை (உதவிகள் என்று சொல்லி ஏதோ நாம் ஞானியாக வேண்டியதில்லை; மனிதராகப் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் மற்றவரிடம் கையேந்திதான் நிற்கிறோம்) ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.


காசு பணம் துட்டு மணி மணிஎன்ற அழுத்தம் பிற்காலத்தில் வரும்போது, கல்லூரி நினைவுகள் முழுமையாகக் கலைந்திராத இப்பருவத்தில் சொல்லிக்கொள்ளும்படியான செயல்கள் எதையுமே செய்யவில்லையே என்று தோன்றிவிடக் கூடாது என்ற பயம் இருக்கிறது. இவைகள்தாம் நான் பெற்ற கல்வி (‘கற்ற கல்விஎன்று சொல்லிக்கொளுமளவிற்கு இன்னும் வளரவில்லை) - என் பள்ளிகளும், என் கல்லூரியும் - எனக்கு அளித்த பெருங்கொடை என்று கருதுகிறேன்; இச்சிந்தனை. பெற்றோர், நண்பர்கள், உற்றார், உறவினர் புரிந்துகொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால், இதாங்க என்னோடநியூ இயர் ரெசொல்யூஷன்’.

பிரம்மகத்தி

நான் பள்ளிப்பருவத்தின் கடைசி கட்டத்தை நெருங்கும் வரை, எங்கள் வீட்டில் இரண்டு பாட்டிகள் இருந்ததுண்டு. இப்படிச் சொன்னவுடன், “ஓஹோ, அம்மாவோட அம்மா, அப்பாவோட அம்மா ரெண்டு பேருமா?” என்று எண்ணங்கள் தானாக முன்தீர்மானம் செய்கிறதல்லவா? வீட்டிற்குப் புதிதாக வரும் விருந்தினர்களும் அவ்வாறே கேட்பதுண்டு. அந்தப் பாட்டிகள் இருவரும் அப்பாவுக்கு அத்தைகள்; அதாவது அப்பப்பாவின் (அப்பாவின் அப்பா = அப்பப்பா = தாத்தா) சகோதரிகள்.

இரண்டு பேரும் டாம்&ஜெர்ரியின் மனித உதாரணங்கள். பல்வேறு தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் பரம்பரைப் பகையுள்ள இரு மனிதர்கள் சந்தித்தால் என்ன மாதிரியான முகபாவங்கள் இருவரது முகத்திலும், கண்களிலும் தோன்றுமோ, அப்படி ஒரு காட்சியை தினந்தினம் நேரில் நான் பார்த்திருக்கிறேன் (தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் பார்க்கும் மக்களுக்கு இக்காட்சியைக் கற்பனை செய்வது சிரமமாயிருக்காது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை). ஆனால், உண்மையில் இருவருக்கும் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அவருக்கு இவர் பணம் கொடுப்பதும், இவருக்கு அவர் சாப்பாடு பரிமாறுவதுமாக ஒரேஎங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைஎமோஷன்கள். எனினும் வெளியில் மட்டும் கெத்தாகஇஞ்சி தின்ன குரங்கு போல்இருவரும் முகத்தைச் சுழிப்பதும், கண்ணை அகலத் திறந்து முறைப்பதும், உதட்டைப் பிதுக்கிக் கையை அசைப்பதும், தோளில் கன்னத்தை இடிப்பதுமாக சைகையில் காதல் மொழி போலச் சைகையில் சண்டை மொழியை உருவாக்கியவர்கள் (டால்கியென் அடுத்து ஏதேனும் புதிய மொழி உருவாக்குவதென்றால் என்னிடம் உதவி கேட்கலாம்; சரி, அவரை விடுங்கள்; நம் மதன் கார்க்கியாவது ஏதேனும் கேட்கட்டும்).

நிற்க. சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிட்டேனே! பெரியத்தை (அப்பாவுக்கு அத்தை எனக்கு அத்தைப் பாட்டி என்றாலும், இருவரையும்அத்தைஎன்றே கூப்பிட்டுப் பழகிவிட்டேன்) சின்னத்தையை ஏசப் பயன்படுத்தும் தலையாய வார்த்தை, ‘பிரம்மகத்தி’. நாஞ்சில் நாடனிடம் கேட்டுத்தான் பொருளறிய வேண்டும். “கக்கூஸுக்குப் போகணும்; செத்த வந்து கையப் புடிச்சு அழைச்சிட்டுப் போறாளா பாரு, பிரம்மகத்தி!”, “பசிக்கும்போது சாப்பாடு போடாம எங்க போய்த் தொலைஞ்சாளோ, பிரம்மகத்தி” என்று நமக்கு ‘ஓத்தா’ போல பெரியத்தைக்கு ‘பிரம்மகத்தி’. வாக்கியத்தின் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து விதமான பிரயோகங்களிலும் பொருந்தக்கூடிய ஒரு மாயச்சொல்.

இந்த ‘ஞாபகம் வருதே’ நினைவுகளுக்குக் காரணம் சமீபத்தில் நண்பர்கள் பலரும் எனது சில பதிவுகளைப் படித்துக் கூறிய பொதுவான குற்றச்சாட்டு. “நல்லாத்தான் எழுதுற” என்று அவர்கள் சொல்லும்போது பெருமிதத்தில் துடிக்கும் இதயம், அந்த ‘ற; என்ற இழுப்பில் சற்றே வாடி, “ஆனா, கெட்ட வார்த்தை நெறைய வருதேப்பா” என்று முடிக்கும்போது ஒரு மூலையில் போய் முடங்கியிருக்கும். “கெட்ட வார்த்தைக்குப் பதிலாக **** பயன்படுத்தலாமே”, “சில இடங்களில் வலிந்து திணித்தது போலிருக்கிறதே, அதை குறைக்கலாமே” என்ற அக்கறையான சில கரிசனங்களுக்கும் குறைவில்லை.

இவையனைத்தும் சேர்ந்து என்னை ஒரு முக்கியமான கேள்விக்கு இட்டுச் செல்கிறது. எது கெட்ட வார்த்தை? ‘முத்து’ திரைப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சி இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. ‘பட்டி’ என்ற சொல்லுக்கான அர்த்தம் புரியாமல் அல்லாடும் அரசியல் கிழவர் ரஜினிகாந்த் படும்பாடு ஒரு முக்கியமான அம்சத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. கெட்ட வார்த்தைகள் மொழியாலும், சூழ்நிலைகளாலும், இன்ன பிற இதர காரணிகளாலும் அந்தந்த நேரத்தில், அந்தந்த இடத்தில் வரையறுக்கப்படுகின்றவை. ‘டாய்லெட்’ எனும் சொல்லை நாம்தான் கழிவறைக்கான சொல்லாடலாக வரையறுத்துவிட்டோம். உண்மையில், அது மனிதர்கள் குளித்து, உடைமாற்றிப் புத்துணர்வோடு வரும் ஒரு இடத்தைக் குறிக்கும் சொல். ‘லூ’ அல்லது ‘லேவடரி’ என்ற சொல்தான் கழிவறையைக் குறிக்கப் பயன்படுத்தப் படும் சொல்.

பெருமாள் முருகனின் நூல்களில் கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் புழங்கும். நாஞ்சில் நாடனின் படைப்பான ‘கும்பமுனி’ எனும் கதாபாத்திரம் பேசாத கெட்ட வார்த்தையே இல்லை. இன்னும் சொல்லப் போனால், ‘குண்டி’ என்ற சொல்லற்ற கும்பமுனி கதைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி, கோனார் தமிழுரையின் சிறுவினா போன்ற ஒரு உரையைப் பார்த்தாயிற்று. இப்போது, ‘அதுக்கும் மேல’ நெடுவினா அளவிற்கு எடுத்துச் செல்வோம். என் வீட்டில் நான் ‘சூத்து’ என்று சொன்னால் அது கெட்ட வார்த்தை; ஆனால், கல்லூரியில் ‘சூத்த மூட்றியா?’ என்பது சர்வசாதாரணமாக நக்கலாகச் சொல்லப்படும் வாக்கியம். ‘ஓத்தா’ எனும் சொல் மட்டும் எத்தனை எத்தனை வெவ்வேறு பயன்பாடுகளில் பிரயோகிக்கப்படுகிறது? (ஆங்கிலத்தில் இந்த அளவிற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல், ‘ஃபக்’). பெண் சார்ந்த வார்த்தைகள் என்ற வகைமைக்குள் செல்ல வேண்டாம்; இப்பதிவின் நோக்கம் அதுவல்ல. மகிழ்ச்சி, கோபம், துக்கம், வெறுப்பு, பொறாமை, ஆனந்தம், இன்பம் என மனித மனத்தின் எல்லா உணர்ச்சிகளுக்குமான ஒரே வெளிப்பாடு ‘ஓத்தா’ என்று நான் சொன்னால் இதைப் படிக்கும் எவராவது மறுக்க முடியுமா? ஆண், பெண் பாகுபாடின்றிப் பயன்படுத்தப்படும் இவ்வார்த்தை ஒரு பாலினத்தை, ஒரு தெய்வத்துக்குச் சமமான உறவைக் குறிக்கிறது என்பதைத் தாண்டி, அவ்வார்த்தை வாயிலிருந்து வெளிவரும்போதும், வெளிவந்த பின்னரும் மனதடையும் ஒரு உள்ளமைதியை யாரேனும் உணர்ந்திருக்கிறோமா? அடுத்த முறை முயன்று பாருங்கள்.

நீங்கள் உண்மையிலேயே கோபமான மனநிலையில் “ஓத்தா, சரியான லூசுக் கூதிடா அவன்” என்று ஒருவரைச் சொன்ன நொடியில் - ஒரு கணப்பொழுதில் - உங்கள் கோபம் சற்றேனும் தணிவதை உணர முடியும். இவ்விளைவு ‘சூத்து’, ‘சுண்ணி’, ‘கூதி’ போன்ற பல சொற்களிலும் விளையும் விஞ்ஞானம். இதைச் சற்றே ஆராய்ந்தால், ஒரு எளிமையான உண்மை புலப்படும். பெரும்பாலான - 85%, 90% என்று எண்ணிக்கைகளைக் குறிப்பிட விரும்பவில்லை - கெட்ட வார்த்தைகளில் உச்சரிப்பிற்கான அழுத்தம் இருப்பதே காரணம். ‘த’கரம், ‘ண’கரம், ‘ட’கரம் எல்லாம் சற்றேறக்குறைய அனைத்துக் கெட்ட வார்த்தைகளிலும் இருக்கின்றன.

அப்படி இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? அதையும் சற்றே அலசுவோம். வயது பேதமற்று ஒரு மனிதனுக்குக் கோபம் வந்தால் என்ன செய்கிறோம்? கெட்ட வார்த்தைகள் பேசுவோம் என்பது சரியான பதிலல்ல. குழந்தைகளுக்குக் கெட்ட வார்த்தைகள் தெரியாது. பல்லைக் கடிப்பதோ, அல்லது பல், நாக்கு சார்ந்த தசைகளை முறுக்குவதுதான் நாம் செய்யும் முதல் அனிச்சைச் செயலாக இருக்கும். அடுத்த இடத்தை வகிப்பது முஷ்டி முறுக்குவது. ஏதேனும் ஒரு வகையில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவ்வேலையைத்தான் கெட்ட வார்த்தைகள் செய்கின்றன. அழுத்தமாகப் பேசும்போது கோபம் தானாகக் குறைகிறது (விஞ்ஞானப் பூர்வமான தரவுகளெதுவும் என்னிடம் இல்லை. நான் அனுபவித்த சில உணர்வுகளை எழுதுகிறேன்; அவ்வளவே).

தனியாக இருக்கும்போது பெரும்பாலும் நாம் கோபத்தை வெற்றுச் சத்தத்தின் மூலமே வெளிப்படுத்துகிறோம். ‘ஆ’ என்று தொண்டை கிழியக் கத்துகிறோம் (பல்லில்லாத குழந்தையின் ஒரே வெளிப்பாடு சத்தம் மட்டும்தான்). அப்போது என்ன நடக்கிறது? பின் நாக்கின் தசைகளில் எரிச்சலோ, வலியோ உண்டாகிறது. சிறிதுசிறிதாகக் கோபம் குறைகிறது. அது சரி, ஏன் தனியாக இருக்கும்போது கெட்ட வார்த்தைகள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை? எவ்வாறு வெற்றுக்கூச்சல் தனிமையில் கெட்ட வார்த்தைகளைத் தாண்டி முதலிடம் வகிக்கிறது? இதற்கான எளிமையான விளக்கம் கெட்ட வார்த்தைகள் என்பவை சொற்களேயன்றி வேறல்ல. சொல் என்பது மொழி சார்ந்தது. மொழி உரையாடலுக்கோ, கருத்துப் பரிமாற்றத்திற்கோதான் தேவைப்படுகிறது. ஒரு கூட்டத்திலோ, இருவருக்கிடையிலோதான் சொல்மொழி தேவையாக இருக்கிறது. அதன் தேவை இல்லாதபோது வெரும் ஓசைகளே போதுமானவையாக இருக்கின்றன.

கெட்ட வார்த்தைகளுகென்ற ஒரு அழகியல் இருக்கிறது. அதைச் சொல்லும்போது ஆழ்மனம் அடையும் சிறிய அமைதி இருக்கிறது. எனவே, ‘மயிரு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் எனது ‘அவுசாரித்தன’த்தைக் கேள்வி கேட்காதீர். ஏனெனில், மனித குணத்தின் ஒரு இயற்கையான வெளிப்பாட்டைத்தான் நான் சொற்களாக எழுதுகிறேன். இப்படிக்குத் தங்கள் பிரம்மகத்தி.


(இன்று யாரேனும் பிரம்மகத்தி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்களா எனத் தெரியவில்லை. என்னையெல்லாம் யாராவது அச்சொல் பயன்படுத்தித் திட்டினால், சொற்பொருளை ஆராயாமல், மானசீகமாகப் புன்னகைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.)