Thursday, April 19, 2018

இயல்பு நவிற்சி: மாதவ பூவராக மூர்த்தியின் ‘இடம் பொருள் மனிதர்கள்’ நூலை முன்வைத்து


நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள், அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், கடந்த காலத்தின் சுவைமிகு நிகழ்வுகள்/பொருட்கள் போன்றவற்றை/போன்றவர்களைக் கதைக்களம்/கதை மாந்தர்களாக்கி எழுதப்படும் இயல்பான பதிவுகளுக்கான உதாரணங்களாகநிசப்தம்வா.மணிகண்டனின் வலைப்பதிவுகளைச் சொல்வேன். என்னளவிலான வாசிப்பனுபவத்தின் விளைவாக நான் முன்வைக்கும் பரிந்துரை என்றாலும், அதற்கு அவரதுமசால் தோசை 38 ரூபாய்மற்றும்லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்எனும் இரு நூல்களும் கட்டியம் கூறும் (’காமதேனு’வில் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதும் ‘சொட்டாங்கல்’ இங்கு அவசியம் எடுத்துக்காட்டப் படவேண்டிய தொடர்).

இதன் நீட்சியாக சமீபத்தில்இடம் பொருள் மனிதர்கள்என்ற நூலை வாசிக்க நேர்ந்தது. அப்பா பணியாற்றும் வங்கியில் இந்நூலின் ஆசிரியரான மாதவ பூவராக மூர்த்தியும் ஒரு பணியாளர் எனும் முறையில் அப்பாவின் கைக்குச் சிக்கிய இப்புத்தகத்தை அப்பா வழக்கம்போலவே படித்துமுடித்த பின்னர் என்னிடம் ஒப்படைத்தார்.

நூலின் முன்னுரையிலேயே இது மா.பூ.மூர்த்தி அவர்களின் முகநூல் சுவரில் பதிவிடப்பட்ட நிலைதகவல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு என்றறிந்தேன். திருக்குறளின் அறம், பொருள், இன்பம் போலவே இந்நூலும்இடம்’, ‘பொருள்’, ‘மனிதர்கள்என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நூலடக்கத்தைப் பார்க்கும்போதே ஆசிரியரின் தேர்வுகளில் இருக்கும் தெளிவு நன்றாகவே புலப்படுகிறது. இப்புத்தகத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகிறது. மொத்தம் 26 கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பு 5, 11, 10 என்ற எண்ணிக்கையில் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறது.

இடம் எனும் குடையின் கீழ் ஆசிரியர் தேர்வு செய்திருக்கும் ஐந்து கட்டுரைகளுமே தனித்துவமானவை. புழக்கம் குறைந்து கேட்பாரற்றுக் கிடக்கும் ஒரு உணவகத்தைப் பற்றிய பதிவில் தொடங்குகிறது நூல். ‘ஒரு புளியமரத்தின் கதை’யில் அம்மரம் அதைச் சுற்றி நடக்கும் அனைத்து மாற்றங்களுக்கும், நியாய அநியாங்களுக்கும் மௌன சாட்சியாய் இருப்பதைப் போல, இங்கு அந்த டிரைவ்-இன் உணவகமானது பல்வேறு மனிதர்களின் எதிர்காலக் கனவுகளை – குறிப்பாக, திரையுலகில் நுழைய வேண்டும் எனும் இளைஞர்களின் கனவுகளை – வளர்க்கும் சொர்க்கபுரியாய்த் திகழ்கின்றது. பலர் வந்து வணிகப் பேச்சுக்களும், வியாபார ரகசியங்களும், திரைக்கதைகளும் பேசிச் செல்கின்றனர். நேரம் குறித்த பிரக்ஞை இன்றி அவர்களால் அங்கு சுதந்திரமாக உரையாட முடிகின்றது. தற்காலத்தில் இதற்கு ஈடாக ‘கஃபே காஃபீ டே’வை மட்டுமே நினைத்துப் பார்க்க முடிகிறது (’முருகன் இட்லிக் கடை’ போன்ற இடங்களில் ஏதோ அன்னதானச் சாப்பாடு உண்ணும் ஏதிலிகளைப் போல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் அமர்ந்திருந்தால் நம்மைத் துரத்தும் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது). பி.பீ.ஸ்ரீநிவாஸ் அவர்கள் வந்து அமர்ந்து ஏகாந்தமாய்த் தனிமையில் ரசித்த பொழுதுகளை பற்றிய குறிப்புகள் நெஞ்சைக் கனக்கச் செய்கின்றன. அனைத்துப் பதிவிகளிலும் முடிவுப் பத்தியானது நினைவலைகளைப் பின்னோக்கி இழுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு இணையாக, இக்கட்டுரையின் முடிவையே சுட்டிக்காட்டலாம். “பீ.வி.ஆரும், எஸ்கேப்பும் ஜெமினியை ஈடுகட்டலாம். ஆனால், உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்னை ஈடுசெய்ய எதுவுமில்லை”.

தொடர்ந்து வரும் சர்க்கஸ் குறித்த பதிவும் சுவாரசியமானது. ஆரம்பப் பள்ளிக்காலத்தில் நாம் பார்த்து ரசித்திருக்கக்கூடிய இக்கேளிக்கை குறித்த ஒரு மீள்பதிவாகவே அமைகிறது என்று கூறினால் அது மிகையல்ல.

‘இடம்’ எனும் தலைப்பின் கீழ் இருக்கும் ஐந்தாவது கட்டுரையான ‘வீடு மாற்றம்’ குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பதிவு. ஆசிரியர் வர்ணிக்கும் ஓட்டு வீடும், அதிலிருக்கும் ’முத்த’மும் (’உம்மா’ அல்ல, முத்தம்/முற்றம் என்பது வீட்டின் ஒரு பகுதி), நீண்டு செல்லும் வீட்டில் இருக்கும் பல அறைகளும் அதில் வசிக்கும் தனிகுடித்தனங்களும், கடைசியில் இருக்கும் கிணறும், அதைத் தொடர்ந்து இருக்கும் (திறந்தவெளிக்) கழிப்பறையும் பாட்டி வாழ்ந்த எங்கள் பரம்பரை வீட்டை அச்சுஅசலாகப் பிரதியெடுத்ததைப் போலவே இருந்தது.

நூலில் முக்கியமான அம்சமாக அறுதியிட்டுச் சொல்லவேண்டியது, ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள தலைப்புகள். ‘ஷண்முக விலாஸ் ராமநாதன்’ என்ற தலைப்பைப் பார்த்தவுடன் “மீண்டும் உணவகப் பதிவா?” என்று சலிப்புடன் வாசிக்கத் தொடங்கினால், அது தட்டச்சுப் பயிலகத்தின் பெயராக இருக்கிறது. ‘அப்பரும் நானும்’ என்ற தலைப்பைப் படித்தவுடன் ‘ஆன்மிக அரசிய’லுக்கு மனம் தயாரானால், அது ரயிலில் இருக்கும் ‘அப்பர் பெர்த்’ எனும் மேலடுக்கும், அதனால் ஆசிரியருக்கு விளைந்த தொந்தரவுகளும் என்று விரிகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளும், அதனால் விளையும் ஏமாற்றங்களும், அந்த ஏமாற்றங்களையே தூக்கிச் சாப்பிட்டுவிடும் சுவாரசியாமான எழுத்து நடையுமாகச் சேர்ந்து, வாசகருக்கும் எழுத்தாளருக்குமான மனரீதியான ஒரு உறவை ஏற்படுத்துக்கின்றன.

நாஞ்சில் நாடனுக்கு அடுத்தபடியாக சமையல் காரியங்களை வர்ணிப்பதில் மா.பூ.முர்த்தியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. ’பொருள்’ பகுதியில் இடம்பெற்றுள்ள ‘அப்பாவின் அரிவாள்மனை’யில் வரும் வர்ணனை அபாரமானது.

“பூசணிக்காய் சாம்பார் என்றால் அச்சு வெல்லம் போல் நறுக்கி வைப்பார். கூட்டு என்றால் க்யூபிக் பொல இருக்கும். பாத்திரத்தைப் பார்த்தால் சீராக இருக்கும். பரங்கிக்காய் ஹுலிபல்யம் (எழுத்தாளர் கன்னடத்துக்காரர்) என்றால் மாங்காய் பத்தை பீச்சில் விற்குமே அப்படி பல் பல்லாய் வடிவம் பெறும். கத்திரிக்காய் சாம்பாருக்கு நீட்டு வாக்கில் நீரில் மிதக்கும். பொரியலுக்குக் கட்டம்கட்டமாய் நீரில் மிதக்கும். பிட்லைக்கு (பிட்லை என்பது கிட்டத்தட்ட சாம்பார் போலத்தான்) காய்கள் தட்டில் சீர்பொல வைத்திருப்பார்…..” என்று வளரும் இக்காட்சி எண்ணிப்பார்க்கையிலேயே நாவில் நீர் சொட்ட வைக்கிறது (அசைவ உணவுக்குப் பழகியவர்களுக்கு இவ்வர்ணனை அதே அளவு நீரைச் சொட்ட வைக்குமா என்று தெரியவில்லை).

தலைமுறை இடைவேளைக்குச் சாட்சியாய் ஒரு வரியேனும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெறுகிறது. ‘அப்பாவின் அரிவாள்மனை’யில், வெங்காயம் நறுக்கும் ‘கட்ட’ருக்கும், அரிவாள்மனைக்குமான வேறுபாடு முக்கியமானது. கட்டரில் ஒரே அழுத்தத்தில் நறுக்கப்படும் ஒரே அளவிலான துண்டங்களில் என்ன சுவாரசியம் இருக்க முடியும் என்ற தொனியில் அமையும் ஆசிரியரின் கேள்வி, வாசகராகிய நம்மையும் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது.

‘மனிதர்க’ளில் இடம்பிடித்திருக்கும் ‘கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்’ நம் பள்ளி கேண்டீனையோ, தெருவில் இருக்கும் ‘அண்ணாச்சி கடை’யையோ தவறாமல் நினைவுபடுத்தும். ஊர் உலகத்தில் எங்கேயும் கிடைக்காத சிறுசிறு பொருட்கள் கிடைக்கும் புதையலாகவே விளங்குகிறது கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர். டிபார்டமெண்ட் ஸ்டோர் என்றால் நம் கண்முன் விரியும் ‘எம்டன் மகன்’ திரைப்படத்தில் வருவது போன்ற மிகப் பிரம்மாண்டமான ‘ஜினல் ஜினல் ஒரிஜினல்’ கடையல்ல அது. ஒரு சின்ன பெட்டிக் கடையை ஒத்த அளவுடையது. அவ்வளவே. என் பேனா முனையை உடைத்தபின்னர் அதற்கான புதிய ‘நிப்’ – எந்தப் பெரிய ‘பேப்பர் ஸ்டோர்’ஸிலும் இல்லாதது – கேண்டீனில் வாங்கியது ஞாபகம் வந்தது. அதை வைத்துத்தான் பொதுத்தேர்வின் இரு தேர்வுகளை எழுதினேன் என்பதும் சொல்லியே ஆக வேண்டிய தகவல்கள். இவ்வாறு படிக்கும்போது எண்ணங்களைப் பின்னோக்கிச் சுழற்றிப் பெருமூச்சையோ, புன்சிரிப்பையோ வரவழைப்பதில் ஆசிரியரின் வெற்றி இருக்கிறது.

ரஷ்ய எழுத்தாளர்களைக் கொண்டாடிக் கூத்தாடும் எழுத்தாளர்களின் எழுத்துப் பாணியைப் பார்த்துப் பார்த்துப் புளித்துச் சலித்த எனக்கு, நிச்சயமாக இந்த இயல்பான எழுத்து ஒரு புத்துணர்சியை அளித்தது என்று சொல்வேன். ‘பெஸ்ட் செல்லர்’ வரலாற்றில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும் – அது தமிழிற்குக் கிடைத்த மிகப்பெரிய ‘வரம்’ (!?) – காலத்தின் கண்ணாடியாக விளங்குகிறது ‘இடம் பொருள் மனிதர்கள்’.

நூல்: இடம் பொருள் மனிதர்கள்
ஆசிரியர்: மாதவ பூவராக மூர்த்தி
வெளியீடு: விருட்சம் பதிப்பகம்
பக்கங்கள்:156
விலை: 130

தம்பி


ரஜினியின் ‘படிக்காதவன்’ தொடங்கி தனுஷின் ‘வேலையில்லாப் பட்டதாரி’ வரை அண்ணன் எனும் உறவைத் தெய்வத்தினும் மிகைப்படுத்தியாயிற்று. அல்லாவை வணங்கும் அனைவரும் தீவிரவாதிகள் என்றும், பட்டை நாமம் போட்டவன் எல்லோரும் சாதி-மதம் பார்ப்பவர்கள் என்றும் பதிந்துவிட்ட எழுதப்படாத விதி போல, அண்ணன் என்றால் தியாகி, தம்பி என்றால் ஊமைக் குசும்பன் என்றும் ஒரு நியதியை நிலைநாட்டிவிட்டோம். (இது ஒருபுறமென்றால் கல்லூரியில், “அண்ணங்கடா, தம்பிங்கடா” என்றும், “தங்கச்சி, நல்லாயிருக்கியாம்மா?” என்றும் வெளியில் பேசிவிட்டு உள்ளே கூத்தடிக்கும் கும்பல்கள் மறுபுறம். அவற்றைப் பற்றிப் பேச இது நேரமல்ல.)

உண்மையில் குழந்தை வளர்ப்பும் அனுபவத்தில் மிளிரும் ஒரு கலையே. எனவே மூத்த வாரிசுக்கில்லாத சில வாய்ப்புகள் இளையவர்களுக்குக் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் சற்றே அதிகம். அவ்வளவே. அதற்காக ஒரேயடியாக மாடிக்குச் சென்று சாராயத்தைக் குடித்துவிட்டு, ‘ஊதுங்கடா சங்கு’ என்று ஆடும் அண்ணன்கள் எல்லாம் “தியாகிடா” என்று வசனம் பேச முடியாது. உளவியல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் ஒரு கண்ணோட்டம் இது.

பார்த்திபன் நடித்திருந்த ‘கண்ணாடிப் பூக்கள்’ என்ற திரைப்படம் இதன் உச்சக்கட்டம். கண்டுகொள்ளப்படாமல் விடப்படும் ஒரு சிறுவன் (மூத்த மகன்), இளைய வாரிசுக்குக் (கைகுழந்தை) கிட்டும் அன்பையும், அரவணைப்பையும் கண்டு வெதும்பி வன்மம் கொள்வதாகச் சித்தரிக்கும் இத்திரைப்படத்தைப் போல, உண்மையான குடும்பங்கள் இருக்குமா எனும் கேள்வியை ஆராய வேண்டியிருக்கிறது.

சரி, அப்படி என்ன இந்த அண்ணன்கள் தியாகங்கள் செய்துவிட்டனர் என்றுதான் பார்ப்போமே! ’தாமரை’க் கட்சிக்குப் பிடித்தமான புராணங்களில் (புருடாக்களில்) ஒன்றான இராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இராமர் சீதையுடன் காட்டுக்குச் சென்றார் என்பதற்காக உடன் இலக்குவன் செல்கிறான் என்றால் யார் தியாகி? ‘டூயட்’டும், ‘கிளைமாக்ஸ்’ ஹீரொயிஸமும் இராமருக்குத்தான் என்றால், எதற்கு இப்படி ஒரு அல்லக்கைக் கதாபாத்திரம்? (உடனே பொங்கியெழுந்து ‘கம்பராமாயண’த்திலிருந்து “இலக்குவனும் ஹீரோதான்” என்பதற்கான சான்றுகளை முன்வைக்கும் முன்பாக மனசாட்சியைத் தொட்டுச் சிந்தியுங்கள். இலக்குவன் எனும் தம்பி ‘செகண்ட் ஃபிடில்’ தானே?)

அட, புராணங்களை விடுங்க! தினசரி சம்பவங்களையே பார்ப்போம். அப்பா, அம்மா இல்லாத நேரத்தில் வரும் விருந்தினர்கள் கூட, “அண்ணன் கிட்ட சொல்லிட்டுப் போறோம்” என்று தம்பிகளைப் பொருட்டாகவே மதித்ததாக ‘எஸ்.டி.டி.’ இல்லை. அவர்கள் கையில் வைத்திருக்கும் பழங்கள், இனிப்பு வகைகளைக் கூட்த் தப்பித்தவறித் தரமாட்டார்கள். அவ்வளவு இளக்காரம்!

ஒரே பள்ளியில் இருவரும் படித்தால் யாரும் “இவனோட அண்ணன் அவன்” என்று சொன்னதில்லை. அண்ணன் படித்தவன், படிக்காதவன் எவனாயிருந்தாலும் தம்பியாகப் பட்டவன் “அவனோட தம்பி”தான். நல்லதோ கெட்டதோ, “உங்க அண்ணன் அப்படியெல்லாம் இருந்தான், செய்தான்” என்று முதலில் சொல்லிவிட்டுத்தான் ஆசிரியர்கள் தம்பியான என் போன்றவர்கள் குறித்துப் பேசுவார்கள். பேச்சின் ஆரம்பம், முதன்மைப் பாத்திரம் அனைத்தும் அண்ணன்களாகவே இருப்பர்.

தம்பி என்பவன் ஒரு காரியத்தில் தோல்வியுற்றால், “உங்க அண்ணன் அப்படி செஞ்சான்” என்று தோற்றவனைத் தேற்றாமல், வென்றவனைப் புகழ்வார்கள். அதே தம்பி அக்காரியத்தில் வெற்றி பெற்றாலும், “உனக்கென்னப்பா? செல்லப்பிள்ளை நீ! உனக்குக் கெடைச்ச பல விஷயம் உங்க அண்ணனுக்குக் கிடைச்சதில்லை” என்று எளிதாகக் கடந்துவிடுவார்கள். உண்மையில் ‘திறமை’ எனும் சொல்லுக்கான அர்த்தம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அப்பாவி தம்பி மட்டும்தான். மகிழ்ச்சியான ஒரு வெற்றி கிட்டினால் கூட, “உண்மைலயே இது நம்ப தெறமையாலதான் கெடைச்சுச்சா? இல்ல, அம்மா-அப்பா நமக்குச் கொஞ்சம் அதிகமா செல்லம் குடுத்ததுனால வந்ததா இதெல்லாம்?” என்று தொடங்கி, “நமக்குத் தெறமையே இல்லையோ? உண்மைலயே நாம எதுக்கும் லாயக்கு இல்லதான் போல” என்பது வரை சிந்தித்து மைண்ட்வாய்ஸிலேயே சோகப் பாட்டுக்களை ஓடவிட்டுக் குமுறுவது தம்பி மட்டும்தான்.

குடும்பத் தலைவராகப்பட்டவர் கல்யாணம், காட்சி என்று எதற்கேனும் போகமுடியாத சமயங்களில் அண்ணன் சென்றால், “தலைச்சன் வந்துட்டான்” என்று மெச்சும் சமூகம், தம்பி சென்றால் “அண்ணன் எங்கப்பா? நீ மட்டும் வந்துருக்க?” என்றுதான் வினவும். அந்தக் கேள்வியோடு விட்டால் பரவாயில்லை. “சின்னப்புள்ளைய அனுப்பி அவமரியாத பண்ணிட்டாங்க” என்று வீறுகொண்டெழுந்து, உறவைப் பகைத்துக்கொண்ட ‘கலாச்சாரக் காவலர்க’ளைப் பார்த்த அனுபவம் எனக்குண்டு. தம்பியாகப்பட்டவன் நசையாக உணரும் தருணங்கள் இவை. “*த்தா, என்னையெல்லாம் பாத்தா மனுஷனாத் தெரியலயா?” என்று அடிவயிற்றிலிருந்து கிளம்பும் புகை வாயடைப்பினால், காது வழியே வெளியேறும்.

தம்பிக்கு முன்பாகவே படிப்பை முடிக்கும் அண்ணன், வேலைக்குச் சென்றுவிட்டால், “அய்யய்யோ… நாமளும் சாத்திட்டு ஒழுங்காப் படிச்சு வேலைக்குப் போகணும்” என்ற நடுத்தர வர்க்க அழுத்தம் தானாக உள்சென்றுவிடும். மாறாக அண்ணன் என்பவனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் “அய்ய்ய்யோ… அம்மா அப்பா சீக்கிரம் ரிட்டையர் ஆயிடுவாங்க. நாம ஒழுங்கா வேலைக்குப் போயிடணும் கடவுளே” எனும் பாரமும் தம்பியுடையதுதான். இதையெல்லாம் சொல்ல எந்த வி.ஐ.பி.யும் சிகரெட் புகையை ஊதிக்கொண்டு வரமாட்டார்கள்.

அண்ணன் மேற்படிப்புப் படித்தால், “அவன் அவ்ளோ படிச்சிருக்கான்; நீயும் படி” என்றொரு பரிந்துரையையும், அவன் மேற்படிப்பு வேண்டாம் என்று முடிவெடுத்தால், “அவன் படிக்கலை, நீ படி” என்ற கிறுக்குத்தனத்தையும் பக்கத்துவீட்டு வம்பு மாமியிடமும், எதிர்வீட்டுப் பென்ஷன் தாத்தாவிடமும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் எதிர்கொள்வது தம்பிதான்.

’அடையாளம்’, ‘தனித்தன்மை’ என்றெல்லாம் பெனாத்திக்கொண்டிருக்கிறார்களே இந்தத் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் எனும் கொள்ளைக்கூட்டம்… அந்தக் கும்பலில் தம்பியாக ஒரே ஒருவர் பிறந்திருந்தால் கூட, இந்த தனித்தன்மையை ஏற்படுத்திக்கொள்வது எவ்வளவு பெரிய வேலை என்பது தெரிந்திருக்கும்.

கடமைக்குத் ‘தம்பியுடையான் படைக்கஞ்சான்’ என்று பழமொழியை மட்டும் வைத்துக்கொண்டு தம்பி எனும் உறவைப் பெருமைப்படுத்திவிட்டோம் என்று எவனாவது மார்தட்டினால், அவனது பொடனியில் அடித்து முதலில், “சீ… மூடிட்டு உக்காரு” என்று சொல்லவேண்டும். அரிதினும் அரிது மானிரடாய்ப் பிறத்தல்! அதனினும் அரிது தம்பியாய்ப் பிறத்தல்! அதனினும் அரிது சொந்தமாய் ஓர் அடையாளம் ஏற்படுத்துதல்!

Wednesday, April 18, 2018

கதை கதையாம், காரணமாம்!


கல்வியை மேம்படுத்த வந்த ‘கல்வித் தந்தைகள்’ பெருகிவிட்ட இன்றைய சூழலில், கற்றலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளாக விஷுவல் லேர்னிங், ஆக்டிவிட்டி-பேஸ்டு லேர்னிங் என்று புதிய சொலவடைகள் ஆங்கிலத்தில் பிறந்துவிட்டன. முறை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; அதில் எதைக் கற்பிக்கிறோம் என்பதையும் ஆராயாமல் இருக்க முடியாது. நேராக ‘வாட் இஸ் யுவர் நேம்?’ என்று பரங்கியர் வேடம் அணிவதில் ஏனோ நமக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

தமிழையே ஒழுங்காகக் கற்றிராத குழந்தைகளிடம் ஆங்கிலத்தைத் திணிப்பதும் ஒரு வன்முறைதான். என்னதான் ஆங்கிலம் கற்றாலும் நம்மால் வெள்ளையர்களைப் போல் பேசவும், எழுதவும் முடியாது எனும் நிதர்சனத்தை உணர்தல் நலம். இதனால், தமிழின் அரிச்சுவட்டினையும் அறியாமல், ஆங்கிலத்தையும் அரைகுறையாகப் படித்த அரைவேக்காட்டு மாணவர்களையே உருவாக்க முடிகிறது.

அதை விடுங்கள். சிஸ்டத்தை மாற்றத்தான் தமிழகத்தில் ஒருவர் அரசியலில் பகுதிநேரமாகக் குதித்திருக்கிறாரே! கற்றல் தொடர்பான மேற்கண்ட பத்திகளை எழுதக் காரணம் அவரல்ல, என் பாட்டிதான்.

பாட்டியின் ஒவ்வொரு நாளும் கண்டிப்பான நேர நிர்ணயங்கள் கொண்டவை. காலையில் நான் பதினொரு மணிக்குச் சாப்பிட்டாலும் மதியம் ஒரு மணிக்குச் சரியாக “சாதம் பெசையட்டா?” என்ற கேள்வி திண்ணையிலிருந்து வரும். திண்ணையில்தான் பன்னிரண்டு மணியிலிருந்து ஒரு மணி வரை அமர்ந்து செய்தித்தாளை விரித்துவைத்துக்கொண்டு தலைப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக்கொண்டிருப்பார். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரைச் சிறிய எழுத்துக்களையும் படிக்க முடிந்த அவரால் இன்றைக்கு அதெல்லாம் முடிவதில்லை. இதன் விளைவாகத் தலைப்பை மட்டும் அரைகுறையாகப் படித்துவிட்டு வந்து, “இன்னிக்கு பேங்க் எல்லாம் ஸ்ட்ரைக்காமே? உங்க அப்பா ஆஃபீஸ் போகலதானே?” என்றும், “ரேஷன் அரிசியில் முறைகேடுன்னு போட்டிருக்கான், நேத்திக்கு நீ வாங்கிண்டு வந்த சக்கரையில என்ன இருக்கோ?” என்றும் புலம்புவார் (முன்னது முந்தைய நாள் நடந்த வேலைநிறுத்தத்தைப் பற்றிய செய்தி எனவும், பின்னது புதுச்சேரியிலோ, சிதம்பரத்திலோ, விழுப்புரத்திலோ ஏதோ ஒரு நியாயவிலைக் கடையில் நடந்த சம்பவம் எனவும் நாம்தான் விவரித்துக் கூற வேண்டியிருக்கும்).

கிரிக்கெட்டும், சினிமாச் செய்திகளும் பாட்டியின் வாசிப்பில் முக்கியமான பக்கங்கள். முன்னரெல்லாம் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என்றும் சச்சின் என்றும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தவருக்கு இன்று த்ரிஷா, தனுஷா (தனுஷைத் தனுஷா என்றுதான் சொல்வார்), கோலி, தோனி என்று தெரிவதற்கு அவரது பரந்துபட்ட வாசிப்பனுபவம் (!?) மிக முக்கியமான காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

பாட்டியின் செய்தித்தாள் வாசிப்பில் நுணுக்கமான சில அம்சங்கள் உள்ளன:
தரையில் இருக்கும் செய்தித்தாளுக்குச் சமமாக இவரும் ’நமாஸ்’ செய்வது போல் தலையைக் குனிந்திருந்தால் மிகவும் உன்னிப்பாக ஒரு செய்தியை வாசிக்கிறார் என்று அர்த்தம். பெரும்பாலும் அது மாத ஓய்வூதியம் தொடர்பான செய்திகளாயிருக்கும்.
படிக்கும்போது வாய்விட்டுப் படிப்பது அவரது வழக்கமில்லை. என்றேனும் ஒரு நாள் வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினாரென்றால், அது ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம். நம்மிடம் ஏதோ சொல்ல விழைகிறார் என்று இடம் சுட்டிப் பொருளுணர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்க வேண்டும் (நரேந்திர மோடியின் பாட்டி இதையெல்லாம் செய்திருந்தால் மோடிக்கும் கவன ஈர்ப்புப் போராட்டம் குறித்த புரிதல் இருந்திருக்கும்; விவசாயிகளைக் கண்டுகொள்ளாத அரக்கருக்கு அவரது பாட்டி கூட ஒரு காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை). பொதுவாக இப்பேச்சுக்கள் ஒரு செய்தி தொடர்பானதாகத் தொடங்கி, பின்னர் பல்வேறு கதைகளுக்கும், பின்னோக்கு நிகழ்வுகளுக்கும் வழிவகுக்கும்.

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதுதான் நேற்று இரண்டு அந்தாதிக் க(வி)தைகளைச் சொன்னார். பள்ளிப்பருவத்தில் அவற்றைக் கேட்டிருந்தாலும் நினைவில் நின்றதில்லை. ஏனோ தெரியவில்லை, நேற்று அவர் சொன்னது அப்படியே மனப்பாடமாக இருக்கிறது. அவை பின்வருமாறு:

(உண்ணாமல் கனைக்காமல் மௌனமாயிருக்கும் கழுதையின் தியானத்தை உடைக்க)
கொய கொய கன்னே!
கன்னுந் தாயே!
மாடு மேய்க்குற ஆயா!
ஆயன் கை கோலே!
கோலிருக்கும் கொடிமரமே!
கொடிமரத்திலிருக்கும் கொக்கே!
கொக்கு நீராடும் குளமே!
குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலையா!
வலையன் கை சட்டியே!
சட்டி செய்யும் குயவா!
குயவன் கை மண்ணே!
மண் மேல் இருக்கும் புல்லே!
புல்லைத் தின்னும் கழுதையே!
உன் பேரென்ன?
(இதைக் கேட்டவுடன் கழுதை தன் பெயரைச் சொல்வதற்காக ‘இஹிஹி’ என்று இளித்துவிட்டதாம்)
-----
கதை கதையாம், காரணமாம்!
காரணத்துல ஒரு தோரணமாம்!
தோரணத்துல ஓரொழக்காம்!
ஓரொழக்குல புல்லு மொளச்சிதாம்!
புல்லப் பிடுங்கி மாட்டுக்குப் போட்டாளாம்!
மாடு பால் தந்ததாம்!
பாலைக் கொண்டுபோய் பாட்டி கிட்டக் குடுத்தாளாம்!
பாட்டி பட்சணம் தந்தாளாம்!
பட்சணத்தைக் காக்காய்க்குப் போட்டாளாம்!
காக்கா கரி தந்ததாம்!
கரியை கொண்டுபோய்க் கண்ணான் கிட்ட குடுத்தாளாம்!
கண்ணான் குடம் குடுத்தானாம்!
குடத்தை எடுத்துக் கெணத்துல போட்டாளாம்!
கெணறு தண்ணி குடுத்துதாம்!
தண்ணியச் செடிக்கு ஊத்தினாளாம்!
செடி பூ தந்ததாம்!
பூவைப் பிள்ளையாருக்குப் போட்டாளாம்!
பிள்ளையார் கொழுக்கட்டை குடுத்தாராம்!
கொழுக்கட்டையைக் கோமாளிகிட்ட குடுத்தாளாம்!
கோமாளி ‘சைங் சைங்’ என்று கூத்தாடினானாம்!
(இதன் இன்னொரு வடிவம்:
…..
…..
பூவைப் பிள்ளையாருக்குப் போட்டாளாம்!
பிள்ளையார் புத்தி குடுத்தாராம்!
---
(ஓர்+ஒ(உ)ழக்கு; உழக்கு என்பது உணவின் அளவைக் கணக்கிடும் ஒரு முறை;
கண்ணான் – பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழில் செய்பவராம்;
‘சைங் சைங்’ என்று சொல்லும்போது இரு கைகளையும் இடுப்பில் வைத்து ஆட வேண்டும்)

இதைப்போல ‘ஃபுட் செயின்’ என்று சொல்லப்படும் உணவுச் சங்கிலி குறித்த பாடங்களை எளிதாக விளக்கலாம். இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தையால் கூட எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பாடல் முறையை வைத்துக் கணிதம், அறிவியல் என்று எதையும் விவரிக்க முடியும். சற்றே சிரத்தையெடுத்துச் சொல்லிக்கொடுத்தால், குழந்தைகளின் கற்பனாசக்தியையும், புரிந்துகொள்ளும் திறனையும் பல மடங்கு உயர்த்துவதற்குத் துணைபுரியும் இம்முறை, அவர்களது சுற்றுவட்டாரத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது (’கண்ணான் என்றால் யார்?’, ‘ஒழக்கு என்றால் என்ன?’ போன்ற கேள்விகள் குழந்தைகளிடம் எழுவது நிச்சயம்).

அதைவிட்டு விட்டு, ஓ ஃபார் ஓயஸிஸ் (O For Oasis) என்று ஒரு காணொலியைக் காண்பித்துவிட்டால் அக்குழந்தைக்குப் புரிந்துவிடும் என்று நம்புவது நகைப்பிற்குரியது. ‘விஷுவல் லேர்னிங்’ போன்ற முறைகள் மிகவும் பயனுள்ளவைதாம். ஆனால், ‘டீ.ஏ.வி.’ குழந்தைகளுக்கான அளவுகோலிலேயே நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். சாதாரண, சாமானியரின் குழந்தைக்குப் புரிய வைப்பதில்தான் இருக்கிறது தாய்மொழியின் உதவி.