Thursday, June 25, 2015

புலம்பல்

     நான் யாரு என்னன்றதெல்லாம் இப்ப முக்கியம் இல்ல. நான் பாட்டுக்கு இந்தப் போலிஸ் ஸ்டேஷன் பக்கத்துல சின்னதா ஒரு வீடு கட்டியிருந்தேன். நான்னா நான் மட்டும் இல்ல. எங்க ஆளுங்க எல்லாமே இந்தச் சுத்துவட்டாரத்துலதான் வாழ்ந்துட்டிருக்கோம். ஒரு நோட்டீஸ் கூடக் குடுக்கல, படுபாவிப் பசங்க; அவனுங்க பாட்டுக்கு வந்து இடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டானுங்க. பெரிய புல்டோசரெல்லாம் தேவப்படல, சார். கை, கால் வெச்சு எத்துனா செதறிப் போற சாதாரண வீடு எங்களோடது. ஏதோ கட்டடத்த விரிவுபடுத்தப் போறாங்களாம்.

     எங்க பாட்டன், முப்பாட்டன் எல்லாரும் வாழ்ந்த எடம் சார் இது. நாங்க பாட்டுக்குக் கெடச்சதச் சாப்புட்டு, நிம்மதியா இருந்தோம். நிம்மதியான்னா, சோம்பேறியா இல்ல; இங்க இருக்குற ஒவ்வொருத்தரும் அவ்ளோ சுறுசுறுப்பானவங்க சார். ஏதாச்சும் வேல செஞ்சுக்கிட்டேதான் இருப்பாங்க. பத்து வயசுலயே கண்ணாடி போட்ற பசங்களப் பாக்கவே முடியாது; கைத்தடி ஊனிக்கிட்டுத் தள்ளாடற பெரியவங்களும் இங்க இல்ல. சாகுறவரையில தெம்பா இருந்துட்டுச் சாவுற நல்லவங்க சார் நாங்க. ஏதோ மலைவாழ் கிராமங்கள்ல எல்லாம் கூட இப்படித்தான் நடக்குதாமே. நமக்கு எங்க சார் இதெல்லாம் தெரியும்? அப்பப்ப டீக்கடையில பெருசுங்க பேசிக்குங்க. திக்குத்தெரியாத எங்கள மாதிரி அப்பாவிங்கள கட்டடம் கட்டணும், தொழிற்சாலை கட்டணும், அணு உலை கட்டணும்னு இப்டியே சொந்த எடத்த வுட்டுப் போக சொன்னா எங்க சார் போவறது?

     நேரடியாச் சொல்லியும் கேக்கலன்னா என்னா பண்ணுவாங்கனு எனக்கு ஒரு தெனாவட்டு இருந்துச்சு சார். அதுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் இருக்கு. அதான் இப்ப விவசாயிங்களுக்கெல்லாம் ஏதோ நெலத்தோட மதிப்பவிட அதிகமா காசு தந்து, ஆசை காட்டியே புடுங்கிடுறாங்களாமே; அந்த எடத்த கார் தயாரிக்குறதுக்கு, மின்சாரம் உற்பத்தி பண்றதுக்குனு மாத்திடுறாங்களாம். ஏன் சார், நான் தெரியாமதான் கேக்குறேன்; திங்கிற சோத்துக்கு வழியில்லன்னா எதக்கொண்டு வயித்த நெரப்புறது? காரையும், செல்ஃபோனையும் அரைச்சு மாவாத் தின்றதுக்கு ஏதாச்சும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கணும் சார். பின்ன என்ன? நாட்டுல இது ரெண்டும்தான் பெருகிக் கெடக்கு.

     இந்த போலீஸ் ஸ்டேஷன்ல வேல செய்யுற போலீஸ்காரங்களவிட இங்க நிக்குற காருங்களோட எண்ணிக்கதான் அதிகமா இருக்கு. இதுகூடப் பரவாயில்லங்க; ஒருத்தன் ஒருத்தன் கையிலயும் கொறஞ்சபட்சம் ரெண்டு ஃபோனாச்சும் இருக்கு.

     என்னது, கம்பிளெயிண்ட் குடுக்கறதா? அங்கதானே சிக்கலே; இங்க இருக்குற எந்த வீட்டுக்கும் பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு எதுவும் கெடையாது. இது என்ன மாடமாளிகை, கூடகோபுரமா சார், பதிவெல்லாம் பண்ணி வைக்க? பரம்பரை, பரம்பரையா இருக்குற இடம்; எங்க மண்ணுக்கு உரிமை கொண்டாடுறதுக்கு எதுக்கு சார் பத்திரம் எல்லாம்? இது எங்க எடம் மட்டும் இல்ல; எங்க சந்தோஷ துக்கங்களைப் பகிர்ந்துக்கிட்ட தெய்வீக்க்கோயில் சார். அதிகாரம் இருக்குங்கறதுக்காக ஏன் சார் எளியவங்களச் சித்திரவதை பண்றாங்க?

     நீங்களே யோசிச்சுப் பாருங்க. நீங்க வேலபாக்குற எடத்துல உங்கள இடமாற்றல் பண்றதாச் சொன்னாக்கூட கொஞ்சம் அவகாசம் கேக்குறீங்கல்ல? பையனுக்கு நல்ல ஸ்கூல் பாக்கணும், பாட்டிக்குக் கோயில் பக்கத்துலயே இருக்கணும்னு இவ்ளோ யோசிச்சுச் சரியா வராதுன்னு தோணுச்சுன்னா வேணாம்னு சொல்றீங்கல்ல? முடியாதவங்கள மட்டும் ஏன் சார் தொரத்துறாங்க? அவங்கள எதிர்க்க முடியாதுன்ற திமிரா?


     என்ன சார் கேட்டுட்டே இருக்கேன், பதில் சொல்ல மாட்டேன்றீங்க? என்னது... தேங்க் யூவா? இங்க நான் பொலம்பிட்டிருக்கேன்... எனக்கு எதுக்கு சார் இதெல்லாம் சொல்லிக்கிட்டு? ஹ்ம்ம்ம்... என்னதிது? ஆங்... ஃபோனு. அடப்பாவி, அப்போ கம்பிளெயிண்ட் குடுன்னு சொன்னது, இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருந்தது எல்லாமே அந்தப் பாழாப்போன ஃபோன்லதானா? அதுசரி.. என் பேச்சக் கேக்க யாரு இருக்கா இந்த உலகத்துலஎன்று புலம்பியபடியே ஊர்ந்து சென்றது எறும்பு.

உணர்வெனும் சங்கிலி

            மாலையில் அலுவலக வேலைகளை அவசரமாக முடித்துவிட்டு ரயிலேறுவது வாடிக்கையாகவே மாறிவிட்டது அவளுக்கு. மணிரத்னத்துக்கடுத்தபடியாக ரயில் பயணங்களை ரசிப்பவள் அவள். உண்மையில், பணிமாற்றத்தால் பயணம் அவளுக்கு உற்ற தோழியாக மாறியிருந்தது. காலையில் கடைசி நேரப் பரபரப்பில் கிளம்பினாலும் ரயிலின் ‘தடக் தடக்இசையினூடே ‘தி இந்துபடிப்பது ஏகாந்த அனுபவமாயிருந்தது. சொந்த ஊரில் வேலைசெய்தபோதுகூட இல்லாத மன அமைதி, தண்டவாளங்களும், ரயிலும் சேர்ந்து பாடும் தாலாட்டில் கிட்டியது. மகனுக்கு நொறுக்குகள் வாங்குவதற்கென்று, புதிய இடத்திலும் கடையொன்றைக் கண்டுபிடித்துவிட்டாள்.

     அன்று ரயிலில் பெரிதாகக் கூட்டமில்லை. நெற்றியில் படிந்த வியர்வைத்துளிகளை ஒற்றியபடி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். மொத்தமே நான்கு பேர் மட்டுமே இருந்த அப்பெட்டியில் மற்ற மூவருமே வியாபாரிகள். ரயிலில் தினம்தினம் சுண்டல், போளி, பலாச்சுளைகள் விற்கும் அன்றாடங்காய்ச்சிகள். சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து சோர்வு மிகுந்த ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஆண், முதுமையின் அடையாளங்கள் தெளிவாகத் தென்பட்ட ஒரு மூதாட்டி, 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் – மூன்று தலைமுறைகள் வறுமை என்னும் நேர்க்கோட்டில் சந்தித்திருந்தனர் அவர்களையறியாமலேயே.

     ஆனந்த விகடனைப் படித்துவிட்டதால் பொழுதுபோக்க வழி தெரியாமல் வந்தவள், அவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள். “இந்த ட்ரெயின்லதாம்மா தெனம் வியாபாரம் பண்ணுவேன். சுண்டல், கடலை, போளி இப்டி ஒரு ஒரு நாளைக்கு ஒண்ணொண்ணுஎன்றான் அந்த திடகாத்திரமான மனிதன். கூடையில் மீதமிருந்த சுண்டலைப் பற்றிக் கேட்டபோது, “அவ்ளோதாம்மா. இன்னிக்குக் குடுத்து வெச்சது அம்புட்டுதேன். காலைல எடுத்துட்டு வர்றது. சில நாள் ரெண்டு கிலோ கூட மிஞ்சிப்போயிடும். அதெல்லாம் மாட்டுக்குதான். சாயங்காலம் அஞ்சு மணி, ஆறு மணி தாண்டுனா சுண்டல் நமுத்துப்போயிடும். அப்புறம் விக்கமுடியாது.

     பரிதாப உணர்ச்சி மேலிட 5 ரூபாய்க்குச் சுண்டல் கேட்டாள். பெரிய பொட்டலமாகத் தந்தான். 20 ரூபாய் பெறும். “இப்போ ரெண்டு மாசமா லீவு வுட்ருந்தாங்கல்ல? சரியான சேல்ஸ். ஒரு நாளைக்கு 1000 ரூபாய் கூட சம்பாதிச்சுருக்கேன். ரயிலுக்குள்ள விக்கணும்னா 10 நாளைக்கு 1000 ரூபா கட்டி ரசீது வாங்கணும். ஆனா ஸ்குவாட் வந்தாங்கன்னா பிரச்சனையாயிரும். 250 ரூபா ஃபைன் போட்டுடுவாங்க. இப்ப இருக்குற ஒரு அதிகாரி நல்லவரு. அவங்க வந்தாக்க, முந்தினயே ஃபோன் பண்ணிடுவாரு; எறங்கிடுவோம்”, என்றவனிடம், “இவ்ளோ சிரமம் இருக்குல்ல, வேற ஏதாச்சும் தொழில் பாக்கலாம்ல? கடைல எதுவும் வேல செஞ்சாக்கூட நல்ல சம்பளம் கெடைக்குமே”, என்றாள்.

     வேற வேல எதுவும் தெரியாதும்மா. இது பழகிடுச்சு. கூட்டிக் கழிச்சுப் பாத்தாத் தண்டல் போக ஒரு நாளைக்கு எப்புடியும் 300 ரூபா நிக்கும்.அவனது தொழில்பக்தி, பணத்திற்காகவே வேலைசெய்யும் தனது நடுத்தர வர்க்க மனநிலையைச் சம்மட்டியால் அடித்தது போலவே உணர்ந்தாள். “அதுசரி! மத்தவங்க பண்றாங்கன்றதுக்காகப் பிள்ளைகள இஞ்சினியருக்குத்தான் படிக்க வைப்பேன், டாக்டருக்குத்தான் படிக்க வைப்பேன் என்று நாம் பிடிவாதம் பிடிக்கும்போது, பணம் கெடச்சாலும் மத்த வேலைக்குப் போகமாட்டேன்னு சொல்ற அவனோட பிடிவாதமும் நியாயம்தான்”, என்று உள்ளுணர்வு எகத்தாளம் செய்தது.

     பலாச்சொள சாப்படறியாம்மா? மீதமிருந்தவற்றை ஆளுக்கொன்றாகக் கொடுத்தாள் கிழவி. பல்லில்லாத வாயில் வைத்து அவள் மென்றுகொண்டே வந்தது சிரிப்பாகத்தான் இருந்தது. திடிரெனச் சத்தமாக இருமினாள்; புரையேறியிருக்கக்கூடும்.
“ஆயா? உங்கள யாரோ நெனைக்கறாங்க போல.
அட, இந்த வயசான கெழவிய யாருமா நெனக்கப் போறாங்க?

                                                            ***************

     இரவு புதிதாக அரைத்திருந்த மிளகாய்ப்பொடியுடன் தோசை சாப்பிடுவது அருமையாயிருந்தது. காரம் சற்று அதிகமாகவே இருந்தபடியால், இருமல் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருந்தது. தண்ணீர்க் குவளையை நீட்டிய மகன், “என்னம்மா, உன்ன யாரோ நெனைக்கறாங்க போல?என்றான். சட்டெனக் கிழவியின் நினைப்பு வந்தது அவளுக்கு. கூடவே அவளுடைய கேள்வியும்: “இந்த வயசான கெழவிய யாருமா நெனக்கப் போறாங்க?

     நினைப்பு என்பதும், மறத்தல் என்பதும் ஒருவரின் உடல்ரீதியான இருப்பு சம்பந்தப்பட்டது அல்ல; நினைப்பு என்பது ஒருவர் ஏற்படுத்திய உணர்வுகளின் நீட்சி; அந்த யாரோ ஒருவர் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பின் சங்கிலித்தொடர்பு. பரஸ்பரம் இருக்கும் எண்ண ஓட்டங்களின் சங்கமம். இல்லையேல், அரைமணி நேரம் மட்டுமே உடனிருந்த அக்கிழவியின் நினைப்பு ஏன் அந்நேரத்தில் வரவேண்டும்?