Thursday, October 11, 2018

ஏதிலி

அடையாளங்களால் நிறைந்து வழியும் குப்பைக் கிடங்கில்
அடியெடுத்து வைத்தே நடக்கிறான்
அடையும் இடம் தெரியா மானுட வேட்கை கொண்ட மிருகம்

சிற்சில குப்பை மலைகளாய்க் குவிந்து
சிதறியே ஓடுகின்றன
கவைக்குதவா அடையாளக் குப்பைகள்

காலவெளியெனும் மணல்பரப்பில் குப்பைக்கிடங்கில்
கால்வைத்தே நடக்கையில்
காணும் அனைத்தையும் மிதிக்கிறான்

மிதிபடும் அடையாளங்களில்தாம் எத்துணை எத்துணை வகை?
"நீங்க என்ன ஆளுங்கப்பா?"வில் தொடங்கி
"வாட்ச்மேன்" என்றதட்டும் குரலில் எழும்பி
"ஹலோ, ஒலாவாண்ணா?" எனும் வினாவில் தொக்கி
"நான் மதுரக்காரன்டா"வில் தொடர்ந்து
"ஐ அம் ஆன் ஐ.ஐ.டி. அலும்ன"ஸில் படர்ந்து
"ஐ வாண்ட் டு பிகம் ய கலெக்ட"ரில் ஊர்ந்து
இடறிச் சிதறி ஓடுகின்றன
அனாதையான அடையாளங்கள்
பின்னர் மிதிபடுகின்றன.

மலையே மலைக்கும் குப்பை மலையாய்
எண்ணிக்கையினாலான அடையாளங்கள்
"இருபத்தஞ்சு வயசுதான் ஆகுது" என்ற கல்யாணப் பொய்;
"வருஷத்துக்கு அஞ்சு லட்சம் சம்பளம்" எனும் எலும்புத் துண்டு;
இவ்வாறாகத் தொடங்கி
நால்வருணம்
ஐந்திணை
அவை சார்ந்த மக்கள்
அவர்தம் தொழில், சமூகம்
இத்யாதி இத்யாதி!

கிடங்கின் நடுவில்
குட்டைத் தண்ணீராய்த் தேங்கி
நெடி வீசுகின்றன
பெயர் அடையாளங்கள்;
"மஹாதேவன் ஐயர்" எனவும்,
"முத்தையாத் தேவர்" எனவும்,
"மாரிமுத்துப் படையாச்சி" எனவும்,
"சரவணக் கவுண்டர்" எனவும்
குட்டையில் மிதக்கின்றன
மக்கி அழியாத சாதி ஞெகிழிகள்;
மொய்க்கின்றன
குடலைப் புரட்டி வயிற்றைக் குமட்டும் கிருமிகள்.

கொளுத்தப்படும் குப்பைகள் கருகிச்
சாம்பலாய்ப் போகும் நேரத்திலே
திசைகளற்ற கரும்புகையாய் ஏதிலியாய்ப்
பரபரப்பாய்ப் பறக்கிறது
"நான் யார்?" எனும் கேள்வி

பதிலில்லையோ வானின் எல்லையே?
அண்ட சராசரமே!
பராபரமே!