Sunday, January 14, 2018

இன்னாத்துக்கு அண்ணாத்தே எழுதுற?

கடந்த திங்கட்கிழமை - ‘ஒரே வேலை நாளில் எவ்வளவு வலைப்பதிவுகள் எழுத முடியும்?’ எனும் வினாவைச் சுயபோட்டியாக அமைத்துக் கொண்டேன். வாரத்தொடக்க வேலை நாளாதலால், வழக்கமான களைப்பும், கூடுதலான எரிச்சலும் சேர்ந்தே உளைச்சலைக் கூட்டினாலும், அதையே சவாலாக எடுத்துக்கொண்டு எழுதியபோது, நான்கு பதிவுகளை எழுத முடிந்தது.

சமீபத்தில் குறைந்திருந்த சில கேள்விகள் மீண்டும் எழத் தொடங்கின. அவற்றுள் முக்கியமானவை, “ப்ரோ, நீங்க ஏன் ஒரு புக் எழுதக் கூடாது? இல்ல, இதையே புக்கா ஏன் போடக் கூடாது?”, “எப்புடி இவ்ளோ எழுதுறீங்க?” இரண்டுக்குமான விடையளிப்பது அவசியம் என்ற நோக்கில் இதைத் தட்டச்சு செய்கிறேன்.

முதலில் சற்றே குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தஎப்புடி இவ்ளோ எழுதுறீங்க?”-வை அலசுவோம். முத்தாய்ப்பாக, சில எண்ணிக்கைகளை ஆராய்வோம். சென்னைப் போக்குவரத்து என்பது அனைவரும் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு விழுமியமாக இருக்கும் என நினைக்கிறேன். திருவான்மியூரிலிருந்து கோயம்பேடு செல்வதற்கான கால அவகாசம் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் 45 நிமிடங்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம். இக்கால அவகாசத்தையும், கடக்கிற தூரத்தையும் அளவுகோலாக வைத்துக்கொண்டோமெனில், சராசரியாக ஒரு சென்னைவாசி ஒரு நாளைக்கு அரைமணி நேரத்தையேனும் பயணங்களில் செலவு செய்கிறார் என்று கிட்டத்தட்ட அப்படி-இப்படியான ஒரு முடிவிற்கு வரலாம். இதை மனத்தில் வைத்து ஆராய்வது இன்னமும் சுலபம்.

ஆங்கில-தமிழ்த் தட்டச்சு வழிமுறைகள் வந்த பிறகு கணிப்பொறியில் தமிழ் எழுதுவது என்பது எளிதான காரியமாகிவிட்டது. உங்கள் கணினியில் மென்பொருள் இல்லாவிட்டாலும், ‘இங்கிலிஷ் டு தமிழ் ஃபொனிட்டிக் டைப்பிங் ஆன்லைன்என்று கூகுளைக் கேட்டால், இணையத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யச் செய்யத் தமிழ்ச் சொற்களாக மாற்றும் இணைப்புகளைக் காண்பிக்கிறார் ஆண்டவர் (கூகுளாண்டவரைச் சொன்னேன், ஆழ்வார்பேட்டை ஆண்டவரை அல்ல).

இவ்வழிமுறையில் தமிழ்த் தட்டச்சு செய்யும்போது, அறிமுகமில்லாதவர் கூட, நிமிடத்திற்கு 12-லிருந்து 15 சொற்களைத் தட்டச்சு செய்ய முடியும். 12 சொற்கள் * 30 நிமிடங்கள் = 360 சொற்கள். மேலதிகமாக ஒரு பத்து நிமிடங்களைச் செலவிட்டால், சற்றேறக்குறைய 500 வார்த்தைகளைக் கொண்ட ஒரு கச்சிதமான வலைப்பதிவு தயார். என்ன எழுத வேண்டும் என்ற சிந்தனைக்கும், எழுத வேண்டும் என எண்ணும் கதை/கட்டுரை/இப்பதிவைப் போன்ற எதிலும் சேராத ஒரு மொக்கை குறித்த, கையேட்டிலோ, கைப்பேசியிலோ கிறுக்கப்பட் சில குறிப்புகளுக்கும் உபரியாக ஒரு 10 நிமிடங்களைச் சேர்த்து, குற்றம், குறைகளைச் சரிபார்ப்பதற்கு மேலும் ஒரு 10 நிமிடங்களை ஒதுக்கினால், ஒரு மணி நேரத்தில் ஒரு பதிவு முழுமையடைந்து விடும். அதாவது, பேருந்துப் பயண நேரத்தில் பாதிப் பதிவை முடித்திருக்க முடியும்.

எழுதலாம் என்ற எண்ணம் தோன்றினால் மட்டும் போதும், “ஐய்யய்யோ, அவன் நம்ம எழுதுனதப் படிச்சிட்டு கலாய்ப்பானோ?” என்ற எண்ணத்தைத் தூக்கி எறிவது மிக முக்கியமானது. சுமார் 110 பதிவுகளைத் தொட்டிருக்கும் எனது வலைப்பூவின் முதல் பதிவை இன்று வாசித்தால், எனக்கே சிரிப்பாக இருக்கிறது. இப்பதிவை இன்னும் ஒரு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் வாசிக்கும்போதும் சிரிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், அச்சிரிப்பிலும், ஒரு பெருமிதம் தோன்றுகிறதல்லவா? என்னுடைய பழைய எழுத்துகளைப் பார்த்து நான் சிரிக்கிறேன் எனில், எனது தற்போதைய எழுத்தில் முன்னேற்றம் இருக்கிறதென்றுதானே அர்த்தம்?

மேலும், முதன்முதலில் எழுதத் தொடங்கும்போது, நம்மை ஊக்குவிக்கும் சில நபர்களைக் கூடவே வைத்திருப்பது அவசியம். எனக்கு என் பெற்றோர். கழிசடையான ஒரு பதிவிற்குக் கூடக் கைதட்டி ஆதரவளிக்கும் தாய்-தந்தை இருவரும் எனக்கான ஊக்கமருந்து. ஆனால், அவர்கள் செய்யும் மிக முக்கியமான மற்றொரு வேலை, என் எழுத்தை மெருகூட்டுவதற்காக அவ்வப்போது சில கட்டுரைகளையும், கதைகளையும் பரிந்துரைப்பது. அவற்றை வாசிக்கும்போது தோன்றும் சுயவிமர்சனங்களே எனது எழுத்தில் தெரியும் முன்னேற்றதிற்கான காரணம்.

இப்போது, மிக முக்கியமான கேள்வியானநீங்க ஏன் புக் எழுதக் கூடாது?/இதையே ஏன் புக்காப் போடக் கூடாது?”-க்கு வருவோம். ‘புக்என்று அவர்கள் குறிப்பிடுவது சில இடங்களில் நாவல் எழுதுவதையும், வேறு சில இடங்களில் இதைப் போன்ற குப்பைப் பதிவுகளையுமாக இருக்கும். எனக்கு நாவல் எழுதுவதற்கான பக்குவம் இன்னும் வரவில்லை. ஒரு கதையை எப்படித் தொடங்கி, பல்வேறு நிகழ்வுகளை இணைத்து, சிலவற்றை வர்ணித்து, சிலவற்றைத் தவிர்த்து, கோர்வையாக முடிப்பது எனும் ஆயக்கலை எனக்கு இன்னும் கைவரவில்லை. இதுதான் சத்தியம். உண்மையைத் தவிர வேறில்லை.

இரண்டாவதாக, இதைப் போன்ற பதிவுகளை ஏன் ஒரு புத்தகமாக எழுதக் கூடாது எனும் வினாவிற்கான விடை, இது புத்தகத்திற்கான எழுத்து அல்ல. இது என் யாகமோ, நோக்கமோ, தேடலோ அல்ல. எப்படிச் சிலருக்குத் திரைப்படங்கள் பார்ப்பதும், விளையாட்டு நிகழ்வுகளைப் பார்ப்பதும், வண்டியோ மகிழுந்தோ ஓட்டுவதும், வெளியூர்களுக்குப் பயணம் செய்வதும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தருமோ, அது போல எழுதுதல் எனக்கு அமைதியைத் தருகிறது. என் எண்ணவோட்டங்களை மேம்படுத்துகிறது. புதிதாக யோசிக்க வைக்கிறது. அவ்வளவே.

மூன்றாவதாக, இப்பதிவுகளை ஏன் புத்தகமாக வெளியிடக் கூடாது என்ற கேள்வி. நான் ஒன்றும் ஆசையே அற்ற ஞானி அல்ல. எனக்கும் இது போன்ற ஆசைகள் இருந்திருக்கின்றன. எழுதத் தொடங்கிய காலங்களில்ஃபேமஸ் ஆகணும், மத்தவங்கள கவனிக்க வெக்கணும்என்ற நோக்கத்தில் சில பதிவுகளை எழுதியிருக்கிறேன். அது ஒரு கட்டத்தில் உடைபட்டது. நான் குப்பையான சில புத்தகங்களை வாசித்தபோதுயோவ், பதிப்பகத்துல இதையெல்லாம் படிச்சுப் பாத்துட்டுத் தான் பதிப்பிச்சாங்களா?” என்று தோன்றியிருக்கிறது. அவ்வாறான வெளிப்பாடுகள் என்னுடைய இப்புத்தகத்திற்கு வந்துவிடக் கூடாது எனும் சுயநல எண்ணத்தில்தான் அதைச் செய்வதில்லை.

ஒரு நூல் என்பது ஒரு மொழியின் செழுமைக்கான வெளிப்பாடு. மொழியின் மகத்துவத்தை உணர்த்தும் ஒரு கருவி. அந்த எண்ணம் வந்த பிறகுதான் ஆங்கிலப் பதிவுகள் எழுதுவதை முற்றாகக் குறைத்தேன். அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதும் பழக்கம் விட்டுப் போய்விடக் கூடாது என்பதால் எழுதுவதுண்டு. ஆங்கிலத்தில் நான் பெரிய பருப்பு கிடையாது என்பதுதான் நிதர்சனம். இப்படி இருக்கும்போது என் தமிழ் மொழிக்கு நான் செய்யக்கூடிய ஆகப்பெரிய துரோகம், அவசரகோலத்தில் கண்டதையும் வெட்டி ஒட்டிப் புத்தகமாக வெளிக்கொணர்வதுதான்.

இவற்றையும் தாண்டி, இலக்கியத்தையும், இசையையும், இன்ன பிற கலைகளையும் வணிகப் படுத்துவதோ, எதிர்பாலினத்தைக் கவர்வதற்கான ஒரு உபாயமாகப் பயன்படுத்துவதோ என்னைப் பொருத்தவரையில் கேவலத்தின் உச்சக்கட்டம். அதைவிட மட்டமான செயல் வேறேதுவும் இருக்க முடியாது. எனவே, “ப்ரோ, புக் எழுதலாமே!” எனும் பரிந்துரையை ஏற்கும் நான், “ப்ரோ, புக்கு கிக்கு ஏதாச்சும் போட்டீங்கன்னா ஃபேமஸ் ஆகலாம்ல? பொண்ணுங்க எல்லாம் கவனிப்பாங்கஎனும் வாக்கியம் முடியும் முன்னரே நாபிக்கமலத்திலிருந்து எச்சிலைத் துப்பியிருப்பேன் என்பதையும் புரிந்து கொள்ளவும்.


எழுத்து என்பது கலை அல்ல, அது ஒரு நிலை. ஒரு மனநிலை. இதைப் புரிஞ்சவன்லாம் கிங்கு, மத்தவனுக்கு சங்கு. நன்றி!

Saturday, January 13, 2018

இனியும் தாமரை வெல்லட்டும்!

ஆங்கிலத்தில் ‘கிளிக் பெயிட்’ என்றொரு சொல்லாடல் உண்டு. அதாவது, ஓரிரு வார்த்தைகளையோ, ஒரு புகைப்படத்தையோ பொறியாகப் பயன்படுத்தி, இணையதளத்தில் காண்பிக்கப்படும் இணைப்பைச் சொடுக்க வைப்பதற்கான ஒரு இலகுவான வழிமுறை. ‘வெல்லட்டும்’ எனும் சொல், ‘தாமரை’ எனும் சொல்லைத் தொடர்ந்து வரும்போது இணைப்பைச் சொடுக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

ஆனால், வாசகப் பெருமக்களே, இது இந்தியாவை அடக்கும் - மன்னிக்கவும், ஆளும் - தாமரை பற்றியதன்று. மாறாக, இருபது வருடங்களாகத் தமிழ்த் திரையுலகில் உண்மையான தமிழ்ப் பாடல்களை எழுதி வரும் கவிஞர் தாமரை குறித்த பதிவு இது. எனவே, முழுமையாகப் படிக்காமல் “நீ அவங்க ஆளு தானேடா ****!” என்று கிளம்பாதீர்.

பரத்வாஜ் ரங்கனின் சமீபத்திய பதிவைப் படித்த பின்னரே, தாமரை எனும் கவிச்சுடர் திரையுலகில் நுழைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன எனும் உண்மையை அறிந்தேன். தாமரை என்றாலே கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் பாடல்கள் இயற்றுபவர் எனும் என் எண்ணத்தை உடைத்த திரைப்படம் ‘நானும் ரௌடிதான்’. ஆனால், ‘நந்தா’, ‘தெனாலி’ என்று அவரது பயணம் எப்போதோ தொடங்கியிருக்கிறது என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது (‘தெனாலி’யில் இடம்பெறும் ‘இஞ்சேருங்கோ’ என்ற பாடல் இவர் எழுதியதுதான்).

தாமரையின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிப் பேசுவதன்று இப்பதிவின் நோக்கம். தாமரை எனும் பாடலாசிரியரின் - கவிஞர் என்று குறிப்பிட்டால் திருவாளர் ஜெயமோகனும், அவரது பக்தாளும் என்னைப் பந்தாடுவார்கள் - ரசிகன்/விசிறி எனும் முறையில், அவரது பாடல்களின் சில தனித்துவமான நுணுக்கங்களைப் பேசுவதே விழைவு.

ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, அனிருத் ஆகியோரின் இசையைத் தாண்டி, தாமரை அவர்களின் பாடல்கள் மனத்தில் பதிவதற்கும், மீண்டும் மீண்டும் முணுமுணுக்கப்படுவதற்குமான காரணங்கள் மிகுதி. அவற்றையும், என் சிற்றறிவிற்கெட்டிய வரை, நான் கவனித்த சிலவற்றையும் எழுத ஆசைப்படுகிறேன். இப்பதிவு கோனார்த் தமிழுரையின் நெடுவினா போன்ற உணர்வைத் தருமாயின் அது என்னுடைய மொண்ணையான எழுத்துத் திறமேயன்றி, வேறில்லை.

அகவுணர்வுகளின் பேரெழுச்சி:

‘இதயம் துடித்தது’, ‘கண்கள் வியர்த்தன’ என்பது போன்ற வரிகளைக் கவிஞர் பலரும் காதல் கணங்களை விவரிக்கப் பயன்படுத்துவர் (நாம் கண்ணதாசனின் காலம் குறித்துப் பேசவில்லை. தற்போதைய - அதாவது, 2000க்குப் பிறகான - திரையுலகப் பாடல்கள் குறித்தே பேசுகிறோம்). புற உணர்வுகளுக்கும், புறச் சூழ்நிலைக்குமான விவரணைகளாகவே அமையும் அப்பாடல்கள் கேட்கக் கேட்கச் சலிப்பை ஏற்படுத்தக் கூடியவை; இவ்வகையான பாடல்கள் புறத்தின் மூலமாக அகவயத்தை அணுக முற்படுபவை. இத்தகைய பாடல்களில் வெகு சில, இசையமைப்பாளரின் மேதைமையால், காலம் கடந்து நிற்கும் பேறு பெற வாய்ப்புண்டு.

ஆனால், தாமரையின் பாடல்கள் அகவுணர்வுகளின் எழுச்சியால் புற உலகின் நிகழ்வுகளை அணுகுபவை. ‘நில்லாமல் வீசிடும் பேரலை, நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை’, ‘பார்த்த முதல் நாளே, காட்சி பிழை போலே’ போன்ற வரிகளில் தொனிக்கும் தனித்துவமே தாமரை எனும் கவிஞரின் (ஜெயமோகனை அலட்சியம் செய்கிறேன், ‘கெடக்குது களுத’ என்ற எக்காளத்துடன்) ஆற்றல்.

இவை தாண்டி, முதல் வரியிலேயே கேட்போரை வசீகரிக்கும் இனம்புரியாத ஏக்க உணர்வு தாமரையின் பாடல்களை அடையாளம் காண்பதற்கான எளிதான வழிமுறை. ‘ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே’ (‘ஹோசன்னா’ - விண்ணைத் தாண்டி வருவாயா), ‘நீயின்றி நானும் இல்லை, என் காதல் பொய்யும் இல்லை’ (வாரணம் ஆயிரம்) போன்ற வரிகள் அவற்றைத் தொடர்ந்து வரும் வரிகளுக்கான முத்தாய்ப்பாக அமைந்து, ரசிகரை உள்ளிழுக்கும் தன்மைகள் நிறைந்தவை.

வானம், மழை, முகில், மேகம்:

வானம் எனும் எல்லையற்ற பரப்பைக் கவித்துவம் நிறைந்த வரிகளில் வடிக்கும் தாமரையின் மகத்துவம், அழகியம் நிறந்த ஒன்று.

தொடுவானம் சிவந்து போகும்
தொலைதூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
(‘ஓ சாந்தி சாந்தி’ (அ) ‘நீயின்றி நானும் இல்லை’ - வாரணம் ஆயிரம்)

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
போகப் போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே
(‘நீயும் நானும்’ - நானும் ரௌடிதான்)

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில்தோகை போலவே என் மீது ஊறுதே;
எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே
(‘அடியே கொல்லுதே’ - வாரணம் ஆயிரம்)

வண்ணம் நீயே, வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
(‘கண்கள் நீயே’ - முப்பொழுதும் உன் கற்பனைகள்)

போன்ற வரிகளில் தென்படும் வானம் சார்ந்த வர்ணனைகள் அனைத்துமே மனம் சார்ந்த உணர்வுகளையும், காலம் கடந்த தவிப்பின் விழுமியங்களையுமே விவரிக்கின்றன.

தாமரையின் தாமரை:

தாமரை எழுதும் நீர் அல்லது மழை குறித்த காட்சிகள் அனைத்திலும் தவறாமல் இடம்பெறும் அங்கம், தாமரை. பல்வேறு இடங்களில் தாமரையின் இயல்புகளை விளக்குவது, தன் பெயர் மேல் கொண்ட காதலா, மழையின் மீது கொண்ட அன்பா அல்லது இரண்டும் கலந்த விவரிக்க முடியாத உணர்வா என்பது கவிஞர் கூற வேண்டிய பதில். ஆனால், விளம்பரமாகத் தெரியாத அளவிற்கு அர்த்தம் பொதிந்த, ரசனை மிகுந்த வரிகள் அவை.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
(வாரணம் ஆயிரம்)

தாமரை இலைநீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
(‘கருகரு விழிகளால்’ - பச்சைக்கிளி முத்துச்சரம்)

ஒரு தாமரை நீரினில் இல்லாமல் இங்கே ஏன்
இரு மேகலைப் பாதங்கள் மண்மீது புண்ணாவதேன்
(‘நான் பிழைப்பேனோ’ - எனை நோக்கிப் பாயும் தோட்டா)

என்று எழுதும் அவர், உதடுகளை மலரிதழ்களுடன் ஒப்புநோக்கும் வரிகள் மேலும் அழகானவை.

இதழென்னும் மலர்கொண்டு கடிதங்கள் வரைந்தாய்(‘மறுவார்த்தை பேசாதே’ - எனை நோக்கிப் பாயும் தோட்டா)

இருவர் இதழும் மலரெனும் முள்தானே’ (‘தள்ளிப் போகாதே’ - அச்சம் என்பது மடமையடா)

அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாக அமுதம் ஊற்றெடுப்பது போலவே, தாமரையின் கவிதைகள் பெருகி வருகின்றன.

முதல் நீ, முடிவும் நீ; அலர் நீ, அகிலம் நீஎனும் வரிகளை ஆதிப் பெருவெடிப்பு நிகழ்ந்த காட்சியுடன் சேர்த்துப் பலமுறை சிந்தித்திருக்கிறேன். ஆதியும் அந்தமுமாய்ப் பெருவெடிப்பு நிகழ்ந்த அந்நொடியில் மலர் விரிவதைப் போல் சிதறி, பூமி எனும் கோளம் பிறப்பதான காட்சியின் உருவகமாகவே நான் இக்காதல் வரிகளைக் கருதுகிறேன்.

கேள்விகளும், எதிர்ப்பதச் சொற்களும்:

சற்றே கவனித்துப் பார்த்தால் தாமரையின் பாடல்களின் முதல்வரியிலோ, பாடலின் பெயரிலோ ஆசைகள் அல்லது நிறைவேறாத ஏக்கங்கள் ஆகியவையும், அவை சார்ந்த துடிப்புகள் தெளிவாகத் தென்படும். அவற்றின் வெளிப்பாடாக வரும் எதிர்ப்பதச் சொற்கள் கவித்துவத்தின் உச்சம்.

தள்ளிப் போகாதே - எனையும்
தள்ளிப் போக சொல்லாதே
(அச்சம் என்பது மடமையடா)

மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
(எனை நோக்கிப் பாயும் தோட்டா)

மறுபக்கம், கேள்விகளாக வெளிப்படும் பல்வேறு உணர்வுகளும் ரசிக்கத் தூண்டுபவை.

ராசாளி பந்தயமா?
நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம்
(அச்சம் என்பது மடமையடா)

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே?
(‘ஹொசன்னா’ - விண்ணைத்தாண்டி வருவாயா)

நொடிப்பொழுதில் தோன்றிய சில பாடல்களின் வரிகளில் பிடிபட்ட பொருட்களையும், அழகையும் வைத்து மட்டுமே இப்பதிவை எழுதியிருக்கிறேன். முனைவர் பட்டம் பெறும் ஒருவரின் ஆராய்ச்சி மனோபாவத்துடன் அலசினால், இன்னும் பல்வேறு ஆச்சரியப்பட வைக்கும் புதையல்கள் சிக்கும் என்பதில் ஐயமில்லை.

சில நாட்களுக்கு முன்பு வரை, ‘திரைத்துறையில் பணியாற்றும் ஒரு பெண்ணைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாரைச் சந்திக்க ஆசைப்படுவாய்?’ எனும் சுய கேள்விக்கு நயன்தாரா, பார்வதி மேனன், அனு வர்தன் போன்றோரை மட்டுமே விடையாக வைத்திருந்தேன். தாமரையை விட்டுவிட்டதில் வருத்தமடைகிறேன் என்று சொல்லும் அதே இடத்தில், தரவரிசைப் பட்டியல் மறுசீரமைக்கப்பட்டு, தாமரை எனும் பெண் அதில் இப்போது முதலிடம் பெறுகிறார் என்று சொல்லவும் விழைகிறேன்.

தாமரையின் பாடல்கள் ஆழ்ந்த அமைதியை விதைக்கக் கூடியவை. அவரது பாடல்களின் பெருமைக்கும், அவை ஏற்படுத்தும் உள்ளமைதிக்கும் தலைவணங்கி, அவரது வரிகளையே அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்.


நீ வேண்டுமே, இந்த பிறவியைக் கடந்திட நீ போதுமே!

Monday, January 8, 2018

அடக்குனா அடங்குற ஆளா நீ: #கேஸ்ட்லெஸ்_கலெக்டிவ் கான்சேர்ட் எனும் குரல்

கல்லூரிக் காலங்களில், “எதுக்குடா கேஸ்ட் பேஸ்ட் ரிசர்வேஷன்? எக்கனாமிக் பேஸ்டா இருந்தாத்தானே நல்லது?” போன்ற கேள்விகளைக் கேட்டு கத்திக் கருவிக் கொண்டிருந்த பலருள் நானும் ஒருவன். பட்டப்படிப்பை முடித்து வேலைசெய்யத் தொடங்கிய பின்னர்தான், என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் பொதிந்திருக்கும் மனிதர்களிடையேயான ஏற்றத்தாழ்வு மெல்லமெல்லப் புலப்படத் தொடங்கியது. வேலை செய்யும் இடத்தில் இருந்த பல்வேறு படிநிலைகள் - நான் சொல்வது மேனேஜர், பாஸ், எம்ப்ளாயீ எனும் படிகளல்ல - சிந்தனையோட்டத்தைச் சற்றே தூண்டிவிட்டது. வேலைபார்க்கும் நிறுவனம் தொடர்பான வேலை செய்பவர்களை ஒரு குழாமாகக் கருதினால், அதற்குக் கீழேயுள்ள படியில் வருபவர்கள், நிறுவனம் தொடர்பான வேலை செய்பவர்களின் வசதிக்காக வேலை செய்பவர்கள், அதற்கும் கீழே இருப்பவர்கள் மேலே சொன்ன இரு படிகளில் இருப்பவர்களின் சக்கைகளாகப் பயன்படுத்தப்படுபவர்கள் (ஒரு சிறிய உதாரணம்: முதல் படி: சாஃப்ட்வேர் தெரிந்த இஞ்சினியர், இரண்டாம் படி: அவரைக் கொண்டுவந்து கூட்டிச்செல்லும் மகிழுந்து ஓட்டுநர், மூன்றாம் படி: இவர்கள் எல்லாம் சாப்பிட்ட தட்டைக் கழுவுபவர்கள், கழிப்பறைகளைச் சுத்தம் செய்பவர்கள்).

இதில் முதல் படியில் இருப்பவர்கள்தாம் இரண்டு மற்றும் மூன்றாம் படியில் இருப்பவர்களை தள்ளுகிறார்கள் என்று பார்த்தால், இரண்டாம் படியில் இருப்பவர்களும் மூன்றாம் படியிலிருப்பவர்களைத் தள்ளுகிறார்கள். இந்த பல்வேறு தட்டுகளைக் கொண்ட சமூகக் கட்டுமானத்தின் பாதாளத்தில் தொங்கிக் கொண்டிருப்பவர்களின் ஒரு எழுச்சிக் கொண்டாட்டமேநீலம் பண்பாட்டு மையம்கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடத்தியகேஸ்ட்லெஸ் கலெக்டிவ்இசை நிகழ்ச்சி.

கீழ்பாக்கம் சி.எஸ்.. பெயின்ஸ் பள்ளி மைதானத்தில் மாலை ஆறு மணிக்கு நிகழ்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 6.05-க்கு உள்ளே சென்ற எனக்கு ஆச்சரியம். நான் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ‘போறோம், சேர்ல உக்காந்து கெத்தா நம்ம சென்னைக் கானா, ராப் எல்லாத்தையும் கேட்டுட்டு வர்றோம்என்ற மிதப்பில் வந்த என்னை அந்த ஆரவாரம் அடக்கியது. எனது கல்லூரியின் கலைவிழாவானடெக்கோஃபெஸ்ஸிற்கு இணையாக மேடை அமைக்கப்படிருந்தது. இறுதி ஒலிப் பரிசோதனைகள் நடந்தேறிக்கொண்டிருந்தன. மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில்கபாலி’, ‘மெட்ராஸ்திரைப்படங்களின் காணொளிக் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.

சரியாக 6.15 மணியளவில் குழுமியிருந்த அனைவரின் தன்னிச்சையான, ஒட்டுமொத்த ஆரவாரக் குரலுக்கு மத்தியில்கோட், சூட்சகிதம் சுமார் இருபது பேர் மேடையேறினர். திறந்தவெளி அரங்கையும் மீறி, அப்பெருமிதக் கூச்சல் காற்றில் கலந்துவிடாமல் அரங்கின் சுற்றுப்புறங்களிலேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்தது போலத் தோன்றியது.

முதலில் சென்னையைப் பற்றிய கானா பாடலில் தொடங்கிய நிகழ்ச்சி, அடுத்தபடியாக வந்த உரிமைகள் குறித்த ராப் பாடலில் சூடுபிடித்தது. “எங்க உரிமை எங்க கையில, நீங்க சொன்னத ஏண்டா செய்யிலஎனும் ஒற்றை வரி ஓட்டுப்போடும் அப்பாவி மக்களின் ஆள்காட்டி விரல் மையிலிருந்து, காலங்காலமாக ஏமாற்றும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது. தொடர்ந்து வந்தது மெதுவான தாள லயத்தில் ஒலித்த ராக் வகையிலானமெட்ராஸின் மகிழ்ச்சிஎனும் பாடல். இம்மண்ணிற்கே உரிய இசையின் தன்மையை லேசாகக் கோடிட்டுக் காட்டுவதாகவும், ‘அந்நிகழ்ச்சி ஏன் நடக்கிறது?’ என்பதற்கான ஒரு மேலோட்டமான பதிலாக அமைந்தது இது. ‘மெட்ராஸின் மகிழ்ச்சி, அது நாம் தானே மச்சி; இது கானா நிகழ்ச்சி, இனி செய்வோம் புரட்சிஎனும் வரிகள் உணர்த்திய கருத்துக்கள் ஏராளம்.

இசைக் கலைஞர்கள் அனைவருமே ஆக்ரோஷமான இசை அம்சங்கள் கூடிய ஒரு பாடலுக்கு நடுவே, சற்றே மிருதுவான ஒலியமைப்புடன் கூடிய பாடல்கள் இடம்பெறுமாறு செய்திருந்தனர் என்பது, நான்காவதாக வந்த சென்னை மக்களின் இழிவைச் சொல்லும் பாடல். ‘ஊருக்குச் சொந்தக்காரன் ஊருக்கு வெளிய நின்னான்; பேருக்குச் சென்னைக்காரன் ஏதேதோ சட்டம் சொன்னான்’ எனும் ஒற்றை வரியில் கண்ணகி நகரின் அவலத்தைப் பேசிய ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடலின் அடிநாதத்திற்குச் சற்றும் சளைக்காததாக இருந்தது இப்பாடல்.நீ வந்து சென்ற ஊரு டா, நான் இங்கயே பொறந்த வேரு டாஎனும் வரிகள்கருத்தவன்லாம்…’ பாடலின் ரௌத்திரத் தொனியாக இருந்தது.

நிகழ்ச்சியில் பாடிய, இசையமைத்த, மேற்பார்வை செய்த அனைவருமே சிறந்த கலைஞர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லையென்றபோதிலும், அறிவு (எ) அறிவரசன் எனும் ராப் பாடகர்/கவிஞரின் பாதிப்பு மட்டும் என் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். குடிமைப் பணித் தேர்வுகளுக்காக அவர் படித்துக் கொண்டிருப்பதாக நிகழ்ச்சியின் இறுதிக்கட்டங்களில் இயக்குநர் பா. ரஞ்சித் அறிவித்தது ஒரு காரணம் என்றே வைத்துக்கொண்டாலும் கூட, அறிவு-வின் பாடல்களின் அழுத்தமும், அவரது குரலின் வேகமும், அவ்வேகத்திலும் பிழையற்ற தமிழ் உச்சரிப்பே பிரதானமான காரணமாயிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

நம்ம நாட்டுல ரெண்டு வகையான கொலை நடக்குது; ஒண்ணு, மீனவக் கொலை; இன்னொண்ணு, ஆணவக்கொலை” என்று சீறிய அவர், “தள்ளுபடி செய்யுறாண்டா பணக்காரன் கடன, வெவசாயியத் தள்ளுறாண்டா கெணத்துல உடனே” எனும் வரியில் ஈர்த்தார்.

ஊருக்கு முன்னால பேசுறடா நீதிய, யாருக்குமே தெரியாம கேக்குறடா சாதிய”, “தலமுற தலமுறையாச் சாதி பாக்குற, நான் படிக்க வந்த அதையும் ஏன்னு கேக்குற” எனும் இட ஒதுக்கீட்டையும், அது சார்ந்த அரசியல் படிநிலைகளையும் பேசிய பாடல் மிக முக்கியமான ஒன்று.

ஜெய் பீம்” ராப் சிலிர்ப்பை ஏற்படுத்தியது எனில், தொடர்ந்து வந்த மீனவக்கொலை தொடர்பான பாடல் மற்றும் மனித மலங்களை மனிதரே அள்ளும் அவலம் பற்றிய பாடல் ஆகியவை நெகிழ்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தின.

ஒவ்வொரு பாடலின் ஒவ்வொரு வரியுமே சமூகத்தின் மீதான கேள்விகளை அடுக்கின, சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தாக்கின என்றாலும், மேலே குறிப்பிட்டவை தவிர்த்து சில வரிகள் மிக முக்கியமானவை:

கருவாடு கருவாடு நீ செத்துப் போனாக் கருவாடு
ஒரவாடு நீயும் ஒரவாடு வாழுற வரைக்கும் ஒரவாடு

ஐந்தறிவு உள்ளவரெல்லாம் மிருக ஜாதிடா
ஆறறிவு மனிதருக்கு ஒரே நீதிடா

வடசென்ன எப்புடி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா
உண்மைய எடுத்து சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா

உன் பாட்டனெல்லாம் வெச்சாண்டா என் பாட்டனுக்கு வேட்டு
அதனால தாண்டா தரான் இப்போ கோட்டாவுல சீட்டு

நாங்க ப்ளாட்ஃபாரம் எங்க நெலம எப்ப மாறும்?’ எனும் கடைசிப் பாடலின் மெட்டை அசைபோட்டுக்கோண்டே இதைத் தட்டச்சு செய்கிறேன். இவ்வேளையில், தமிழ்வாணி என்ற பெண் இசைக்கலைஞரை உள்ளடக்கிய (அவரே பேசும்போது சொன்னார், “பொதுவாக கானான்னா ஆம்பளைங்களத்தான் பாத்திருப்பீங்க. இப்போ லேடிஸோட உரிமையப் பேசுறதுக்கு, பாடுறதுக்கு நான் இருக்கேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது) சுமார் இருபது பேர் கொண்ட குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நிகழ்ச்சியின் முழு அவகாசத்திலும் ஒன்றாகவே இருந்தது சொல்லியே ஆக வேண்டிய ஒற்றுமைக்கான குறியீடு.

சுய அறிமுகத்திற்கான நேரத்தில் ஒவ்வொருவரும் தன்னை இசைக்கு அறிமுகப்படுத்தியதாக மற்றொருவரைக் குறிப்பிட்டதும், தாராவியின் குடிசைப் பகுதியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்களைச் சென்னைக் கலைஞர்களுடன் இணைத்த அம்மேடையும் காலத்தின் குரலாக எப்போதும் நினைவுகூறப்படும்.


இறுதியாகப் பேசிய ஒரு இசைக்கலைஞர் கூறிய “இனிமே லுங்கி கட்டின்னு தான் பாடணும்னு எங்கள யாரும் சொல்லக்கூடாது; நாங்களும் கோட், சூட் போட்டுன்னு பாடுவோம்” எனும் அறிவிப்பும், ரஞ்சித் கூறிய கம்பீரமான “இது அரசியல் மேடைதான். இசை எனும் கலையின் வழியே இங்கே அரசியல்தான் பேசப்பட்டது” எனும் கூற்றும் அடக்குமுறை எதிர்ப்பின் குரலாக ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

கனவு மெய்ப்படும் - சத்தியமாக

கல்வி குறித்தும், நம் பள்ளிகளில் பரவலாகியிருக்கும்பயிற்றுவிக்கும் முறை - கற்கும் முறைகுறித்தும் பேசும்போதெல்லாம்குழந்தைகள் கற்கும் வழிமுறையை மாற்ற வேண்டும்”, “பெற்றோரிடம் தம் குழந்தைகளுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்என்ற இரு முதன்மையானவேண்டும்களைத் தாண்டி, “ஆசிரியர்களுக்குக் கற்பிப்பதற்கான சரியான வழிமுறைகளைக் கற்பிக்க வேண்டும்என்பதும் மிக முக்கியமானது.

ஆனால், குழந்தைகளையும், வழிமுறையையும், பெற்றோர்களையும் பற்றிப் பேசும் நாம், ஆசிரியர்களைப் பற்றிய ஒரு கீழ்மையான கண்ணோட்டத்தையே கொண்டிருக்கிறோம். “அவங்க எங்க சார் நடத்தப் போறாங்க?”, “அவங்களையெல்லாம் திருத்தவே முடியாதுஎன்ற ரீதியில் நாம் பேசுவதற்கான காரணிகள் பலவாக இருந்தாலும், ‘வேண்டும்களிலும், ‘முடியும்களிலும் ஆசிரியர்களை நாம் சேர்ப்பதே இல்லை என்பதே நிதர்சனம்.

= குறியீட்டிற்கு இடப்புறம் குழந்தைகள், பெற்றோர்கள் போன்றவர்களை வைக்கும் நாம், வலப்புறம் ஆசிரியர்களை வைத்தால்தானே சமன்பாடு முற்றுப்பெறும்? இக்கண்ணோட்டத்தில், ‘ஆசெஃபா ஃபௌண்டேஷன்எனப்படும் வினோபா பாவேயால் தொடங்கப்பட்ட அமைப்பு நடத்தும் கடலூர் கண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும்சர்வ சேவ பள்ளியில், ‘டீச் ஃபார் இந்தியாஎனும் அமைப்பு நடத்திய மூன்று நாள் நிகழ்வே (திசம்பர் 28, 29, 30) ‘கனவு கேம்ப்’.

சுமார் 54 ஆசிரியர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளையும் ஒன்று திரட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்வு, ‘கிண்டர் கார்டென்என்று சொல்லப்படும் பிஞ்சுப் பருவக் குழந்தைகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரையிலான பருவம் வரையிலான அனைவருக்குமான கல்வி எவ்வாறு கற்பிக்கப் படவேண்டும் என்பதான ஒற்றைப் புள்ளியில் சங்கமித்தது. மிகுந்த ஆச்சரியத்தை உண்டு செய்த விஷயம், கலந்துகொண்ட 54 ஆசிரியர்களும், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளைப் போலவே வசதி, வாய்ப்புகளின்றித் தவிக்கும் மக்கள்தாம் எனும் உண்மைதான். ஆனால், அவர்கள் அனைவரும் - ஒருவர் விடாமல் - மூன்று முழு நாத்களும் குழந்தைகளாகவே மாறிக் கற்றனர் என்பது புதியதொரு சிந்தனைத் திறப்பாக இருந்தது.

ஒருகார்ப்பொரேட்நிறுவனத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் மேலாண்மை, கூட்டுமுயற்சி போன்ற அனைத்தும் அங்கேடீச் ஃபார் இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் அனாயசமாக வெளிப்பட்டது. அதை அவர்கள் கற்க வந்திருந்த ஆசிரியர்களிடமும் கடத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

நான் பார்த்து வியந்து, சிந்தித்த இரு முக்கியமான அம்சங்கள் ஜாலி ஃபானிக்ஸ் என்று சொல்லக்கூடிய எழுத்துக்களின் ஒலிவடிவங்களின் மூலமாக மொழியைக் கற்பிக்கும் வழிமுறை, மற்றும் லேர்னிங் சர்கிள் என்று அழைக்கப்பட்ட அமர்வு (ஆசிரியர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சிறிய விளையாட்டுகளின் மூலம் அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களைப் புரிய வைக்கும் வழிமுறை).

“குழந்தை முதலில் சொல்வது ‘அம்மா’ எனும் சொல்லைத்தான், ‘அ’ எனும் எழுத்தை அல்ல; எனவே, ‘அஆஇஈ’யோ, ‘ஏபிசிடி’யோ ஒரு குழந்தைக்கு ஐந்து வயதில் சரியாக எழுத வரவில்லையென்றால் தவறு அவர்களிடம் இல்லை, நம்மிடம் இருக்கிறது; நாம் கற்பிக்கும் தலைகீழான முறையில் இருக்கிறது” என்று தொடங்கிய ‘ஜாலி ஃபானிக்ஸ்’ நேரம் மொழியை எவ்வாறு கற்பிக்க வேண்டும்/கற்க வேண்டும் என்பதற்கான ஒரு கட்டுமானம். ‘பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்டு வீக்கு’ என்ற குறையே ஏற்படாதவாறு மொழிக்கல்வியை முழுமையாக்கும் இம்முறை அனைத்து ‘பேஸ்மெண்டு’களுக்கும் தேவை என்றே தோன்றியது.

“’ஏபிசிடி’ என்ற வரிசையே குழந்தை கற்பதற்கான முறையல்ல; ‘எஸ், ஏ, டி, ஐ, பி, என்’ என்ற ஆறு எழுத்துக்களைத்தாம் பாலர்கள் முதலில் கற்க வேண்டும். ஏனெனில் இந்த ஆறு எழுத்துக்களின் பல்வேறு கலவைகளில்தான் அதிகபட்சமான இரண்டெழுத்து ஆங்கிலச் சொற்கள் உருவாகின்றன. ஓரெழுத்துச் சொற்களிலும், ஈரெழுத்துச் சொற்களிலும்தான் ஒரு குழந்தைக்கான மொழிக்கல்வி தொடங்க வேண்டும்” என்ற கூற்று, நாம் எத்தகைய தவறான முறையில் ஊறியிருக்கிறோம் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.

“த ஸ்னேக் இஸ் இன் த க்ராஸ், த ஸ்னேக் இஸ் இன் த க்ராஸ், ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் த ஸ்னேக் இஸ் இன் த க்ராஸ்” என்று ஒரு பாம்பு புற்களுக்கிடையே மறைந்திருக்கிறது எனும் எளிமையான வரியைக் கொண்ட பாடலின் மூலம், ‘ஸ்ஸ்ஸ்’ என்ற ‘எஸ்’ எழுத்திற்கான ஓசை வெளிக்கொணரப்பட்டது புதுமையான முறையாக இருந்தது.

கதை -> ஓசை -> பாடல் -> காற்றில் எழுதுதல் -> தரையில் (அல்லது உள்ளங்கையில் எழுதுதல்) -> அவ்வெழுத்தின் ஓசையை வெளிப்படுத்தும் பிற வார்த்தைகள்

இவ்வரிசைப்படிதான் ஒரு குழந்தைக்கு எழுத்துக்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நம்மில் எத்தனை பெற்றோருக்கும் (ஏன் நமக்கும் கூட), ஆசிரியர்களுக்கும் தெரியும்? குழந்தை மனம் கதை கேட்க இயல்பாகவே ஆர்வமடையும் என்பதனால் கதையில் தொடங்கி, அக்கதையின் ஓரங்கமாக அவ்வெழுத்தின் ஓசையை உள்ளடக்கி, அதனைப் பாடலின் மூலமாக மீட்டுருவாக்கம் செய்து, பின்னர் எழுத்தின் வடிவத்தை காற்றில் வரைந்து (அல்லது, உள்ளங்கையிலோ, தரையிலோ வரைந்து), இறுதியாக அவ்வெழுத்து தொடர்பான மற்ற வார்த்தைகளைக் (சிறுசிறு சொற்கள்) அறிமுகப்படுத்த வேண்டும் எனும் ஒரு வடிவமே சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

இன்னொரு பக்கம் வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்களில் வரும் ‘பஞ்சாயத்து அமைப்பு முறை’யை விளக்குவதற்கு, வகுப்பறையிலேயே ஒரு மாதிரித் தேர்தலை நடத்துவது மாணவர்களுக்கு பாடத்தின் கருவை எளிதாகக் கொண்டு சேர்க்கும் என்பதும், அவர்கள் பார்க்கும், கேட்கும், அறியும் விஷயங்களினூடே பாடங்களை விளக்குவதுதான் சிறந்த முறை என்பதும் ‘நெற்றிக்கண்’ திறந்த நிஜங்கள்.

‘மார்ஷ்மாலோ சேலஞ்ச்’ எனும் விளையாட்டின் (வேலைக்குச் சேர்ந்த பிதிதில் ‘டிரெய்னிங்’ காலத்தின் போது எங்களையும் இவ்விளையாட்டு விளையாடச் சொன்னதும், நாங்கள் ‘ஈகோ’ வினால் சொதப்பியதும் நினைவுக்கு வந்தது) மூலமாகக் குழு மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற விழுமியங்களை விளக்கிய ஏற்பாட்டாளர்கள், குழு என்றால் பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியர்கள் அடங்கிய ஒரு குழாம் என்றும், சிற்சில போதாமைகளை நாம் ஏற்று அதன்வழி புதிதாகக் கற்பிப்பதற்கான வழிமுறைகளை கண்டறியலாம் என்றும் கூறியபோது, கற்பித்தலைக் கற்க வந்திருந்த அனைத்து ஆசிரியர்களின் கண்களிலும் விவரிக்க முடியாத பிரகாசம். “என் குழந்தைகளுக்கு, என் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு நான் சொல்லித்தர இவ்வளவு இருக்கிறது; இதை நான் செவ்வனே செய்வேன்” எனும் ஒரு ஆர்வம் தென்பட்டது.

கடலூர்க்காரன் என்ற முறையில் 2015-ல் செய்த மழைப்பாதிப்பு உதவிப்பணிகளை விட, இம்மூன்று நாட்கள் அங்கிருந்து செய்த, கற்ற பல்வேறு விஷயங்கள் மனத்திற்கு நிறைவைத் தருவதாக அமைந்தன. “நீங்க இந்தூரேவா தம்பி? எந்த ஏரியா? எங்க ஸ்கூல் படிச்சீங்க?” என்று வந்திருந்த ஆசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் மற்ற ஏற்பாட்டாளர்கள் பார்க்கிறார்களா என்ற ‘மைனர்’ பெருமை வேறு சொல்லி மாளவில்லை.


மூன்று நாட்களின் முடிவில், ஆசிரியர்கள் அனைவரும் ஏகோபித்த குரலில், “அப்பப்போ இந்த மாதிரி வந்து எங்களுக்குச் சொல்லிக்குடுத்துட்டுப் போங்க” என்று சொன்னது, தவறு நம் மனத்தில் தான், ஆசிரியர்களிடத்தில் இல்லை என்பதைப் பொடனியில் அடித்து உருவேற்றியது. ‘கனவு கேம்ப்’ இரண்டு உண்மைகளைத் தெளிவாக உணர்த்தியது: 1) கனவு மெய்ப்படும் - நிச்சயமாக, சத்தியமாக. கல்லியிலிருந்தே அது தொடங்க முடியும்/வேண்டும். 2) வாய்ப்பு கிடைத்தால் யாரும் கனவை நனவாக்க முடியும்.

அதாகப்பட்டது…

என்ன ப்ரோ, நியூ இயர் ரெசொல்யூஷனெல்லாம் எடுத்தாச்சா?” என்று ஆரம்பித்து, “ஆமா, அவன் கிழிச்சான். போன வருஷம் கூடக் கெட்ட வார்த்தையே பேச மாட்டேன்னு ரெசொல்யூஷன் எடுத்தான்; பத்து நாள்ல காத்தோட போச்சு. அவன் கெடக்குறான் கபோதிஎன்பது வரை எனது புத்தாண்டு உறுதிமொழிக்கான வம்புதும்பு செய்திகளுக்குக் குறைவில்லை. சிலர் கொடுத்த காசுக்கு மீறிக் கூவுகின்றவர்களாக, “ப்ரோ, இதை வெச்சு எதாச்சும் எழுதவேண்டியதுதானே?” என்று கிளப்பிவிட்டனர்.

நமக்குத்தான் சும்மாவே கை அரிக்குமே? “சர்தான் களுத, அதையும் எளுதித் தொலையுவோம்என்ற எண்ணத்தில் இக்காவியத்தை இங்கு இனிதே தொடங்குகிறேன்.

முதலில் ஃபிளாஷ்பேக். கொஞ்சம் பெரிய்ய்ய்ய ஃபிளாஷ்பேக். என்னங்க செய்வது? தமிழ்ப்படம் பார்த்துப் பார்த்து வளர்ந்த கோலிவுட்டின் குழந்தை நான் (தாங்கள் எடுக்கும் படங்களையேகுழந்தைகள்எனும் வகைமைக்குள் கொண்டுவரும் இயக்குநர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள். அதற்குள் இப்போது மூக்கையோ, நாக்கையோ நுழைக்க வேண்டாம். மூத்திரச் சந்தில் வைத்துக் கும்மினாலும் கும்மிவிடுவார்கள்நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிநடத்தி, நடிகர் சங்கக் கட்டடத்திற்கு நிதி திரட்டும் ஏழைகள். * ஆம்பள ஆம்பள ஆஆஆ ஆம்பள *).

கல்லூரி இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். மூன்றாவது செமஸ்டர். முதல் வருடத்தில் விடுதியறையில் தங்கியிருந்த நால்வரில் மூவர் இரண்டாமாண்டிலும் அறைவாசிகளாயிருந்தோம் (எங்கள் அலப்பறை தாங்காமல் நான்காவது ஆள் தலைதெறிக்க ஓடியதும், புதிதாக வந்த நான்காவது நபர் அறையில் தங்கவேயில்லை என்பதும் தனிக்கதை). வார நாட்களில் முதல் வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு நிதானமாக எழுந்து பல்துலக்கிக் குளித்து (சில நாட்கள் பல் மட்டும் துலக்கி) ‘மெஸ்சில் டிஃபன் சாப்பிடும் எனதருமை அறைவாசிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் அலாரம் வைத்து விடியற்காலை 8:30 மணியளவில் எழுந்து அவசரமாகப் பல்துலக்கிவிட்டு ஓடுவார்கள். அன்று காலையுணவு தோசை. இருப்பதில் சற்றே உண்ணுமளவிற்கு இருக்கும். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையல்லவா?

வார நாட்களில் வில்லிலிருந்து புறப்படும் அம்பாக வகுப்பிற்குக் கிளம்பும் நான், வாரக் கடைசியில் வெண்கலச் சொம்பாகச் சோம்பல் முறித்து எழுவதற்குள் மணி பத்தோ, பதினொன்றோ கடந்திருக்கும். இந்த லட்சணத்தில் ஒன்பது மணிக்கு ஒருமுறை, ஒன்பதரைக்கு ஒருமுறை அலாரம் வேறு அடிக்கும். உச்சக்கட்டமாகவெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே, விடியும் பூமி அமைதிக்காக விடியவேஎன்று அதற்குத் தோதாகப் பாடல் வேறு.

அப்படிப்பட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான் அது நிகழ்ந்தது. கட்டிலை விட்டு எழுந்து காலைக் கீழே வைத்தபோது வலதுகால் சற்றே சுரணையற்றிருப்பது போலத் தோன்றியது. உதாசீனப் படுத்தியபடி எழுந்து நடக்க முயன்றபோதுதான் விபரீதம் புரிந்தது. வலதுகால் முற்றிலுமாக உணர்வை இழந்திருந்தது. முருங்கைக்காயைப் போல வளைந்து, நெளிந்தது. நிலையாக நிற்க முடியவில்லை. மேலும் ஓரடி எடுத்து வைத்தபோது கீழே விழுந்துவிட்டேன். விழுதல் என்றால் தடுக்கி விழுந்து, விழுப்புண்கள் பெறும் அளவிற்கான விழுதல் அல்ல; ‘பப்பரப்பாஎன்று தடுமாறி தரையில் ஒருமாதிரி உட்கார்ந்துவிட்டேன். ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. காலைத் தடவிக் கொடுத்தேன். பாதத்தில் உள்ளங்கையை வைத்து வேகமாகத் தேய்த்தேன், சூடு பரவினால் சொரணை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்போடு. மெல்லக் கையைத் தரையில் ஊன்றி, மீண்டும் எழுந்து நிற்க முற்பட்டபோதுஉடலின் மொத்த எடையும் இடதுகாலினால் தாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறதுஎன்ற உண்மை முகத்தை வெளிறச் செய்தது.

கட்டிலில் சாய்ந்துவிட்டேன்; உலகம் இருட்டிக்கொண்டுவருவதைப் போலிருந்தது. கண்ணை மூட முயற்சி செய்தாலும், அவ்விருளிலும் விதவிதமான ஊதாவிலும், பச்சையிலும் ஏதேதோ உருவங்கள் மூடிய இமைகளுக்கும், விழிகளுக்கும் இடையே நடனமாடின. மீண்டும் எழுந்தமர்ந்தேன். சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தேன். இரண்டு, மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும். தொடையில் ஏதோ ஒட்டுவது போலிருந்தது; சிறுநீர் கழித்திருந்தேன் என்னையறியாமல். இப்போது பயம் பல மடங்காகியது. ‘அதுவும் சொரணையற்றுப் போயிருந்தது.

நண்பர்கள் வருவதற்கு முன்பாகக் கால்சட்டையை மாற்றிவிடலாம் என்ற என் எண்ணத்தில் மண்ணையள்ளிப் போட்டான், அறைவாசி இக்பால். “என்ன மச்சான் நொண்டுற?” என்று எக்களித்துச் சிரித்த அவனுக்கும் என் நிலைமை புரிய வெகுநேரம் ஆகவில்லை. வித்யாசாகரும், இக்பாலும் தம் தோள்மீது என் கையைச் சாய்க்கச் செய்து, என்னை விடுதிப் படிக்கட்டின் வழியே தரைத்தளத்திற்கு அழைத்துச் சென்று, ஆட்டோவில் ஏற்றியது நன்றாக நினைவில் இருக்கிறது. முதலில் கல்லூரிக்கருகில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, ‘தவறான பழக்கத்தால் விளைந்த விளைவாக இருக்கலாம் என்று அவர் சொன்னது நினைவிருக்கிறது. ‘ஆண்மைக்குறைவுஎனும் பிரச்சனை பற்றி அவர் கூறியதை, அவசரமாகக் கடலூரிலிருந்து சென்னைக்கு விரைந்து வந்திருந்த அம்மாவிடம் - அவரை அழைத்து வந்திருந்த தி.நகர் பெரியம்மாவிடமும் - சொல்லாமல் விட்டது நினைவிருக்கிறது.

மிகவும் பிரயத்தனப்பட்டு என்னைக் கடலூருக்கு அழைத்து வந்து வீட்டுப் படுக்கையறையில் அம்மாவும், அப்பாவும் கைத்தாங்கலாகப் படுக்க வைத்தது நினைவிருக்கிறது. அவர்கள் இருக்கும் நேரம், “ம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்லம்மாஎன்று சமாளித்துச் சிரித்து, அவர்கள் அறையை விட்டு அகன்றதும், ‘ஆண்மைக்குறைவாக இருக்குமோ?’ என்ற கேள்வியால் துளைக்கப்பட்டு குப்புறப் படுத்து அழுதது நினைவிருக்கிறது (அழுகையின் விளைவாய் நான் தலை புதைத்திருந்த தலையணையும், அதன் விளைவாக அதனில் அழுந்தியிருந்த என் முகமும் அனலாகக் கொதித்தது நினைவிருக்கிறது).

பின்னர், கடலூரில் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் ஒருவரிடம் சென்றதும், அவர்உங்கள் உயரத்திற்கும், எடைக்குமான சமநிலை பிசகியிருப்பதால் வந்த கோளாறுதான் இது; இதுக்கும் ஸ்டெரிலிட்டிக்கும் சம்மந்தமே இல்லைஎன்று சொன்னது நினைவிருக்கிறது. எக்கோ, எக்ஸ்-ரே போன்ற பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, ‘சையாட்டிக்நரம்பு - முதுகெலும்புக்கும், கால்களுக்கும் பாலமாகச் செயல்படுகிற நரம்பு - எனது உயரத்திற்கேற்ற எடையில்லாததால் வலுவிழந்து அவ்வப்போது வீங்குகிறது என்ற முடிவை உறுதி செய்தது நினைவிருக்கிறது. அதற்குப் பின்பான ஒருமாத கால ஓய்வு நினைவிருக்கிறது. அப்போது வேறு வழியேயின்றி நான் படித்தஉயிர்மை’, ‘காலச்சுவடு’, ‘உயிர் எழுத்துபோன்ற இதழ்கள் நினைவிருக்கின்றன (இப்போது அவை (உயிர்மை தவிர்த்து) வழக்கமாகப் படிக்கும் இதழ்களாக மாறியிருப்பது நற்செய்தி).

அந்த ஒன்றரைமாத காலம் என் எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் ஏற்படுத்திய மாற்றம் சொற்களால் விவரிக்க முடியாதது. முதுகெலும்பின் நுனியில் இருக்கும் ஒரு சிறிய நரம்பு, என் எடை-உயரச்சமத்துவமின்மையைப் (நாட்டின் பெரிய பிரச்சனை நம் உடலில்தான் தொடங்குகிறது என்பது இதனூடே நான் சொல்ல வரும் உபகருத்து, ஹாஹா) பதினெட்டு ஆண்டுகளாகத் தாங்கியிருந்திருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. கூடவே, அவ்வளவு ஆண்டுகாலம் என்னைத் தாங்கிப் பிடித்திருந்த ஒரு நரம்பு ஒரே நாளில் வேலையைக் காட்டிவிட்டது என்பது இன்னும் யோசிக்க வைத்தது. ‘என்ன வாழ்க்க டா இது?’ என்பதான சிந்தனை அது.

அப்போது எடுத்த முடிவு கல்லூரி இறுதியாண்டு வரை என்னைச் சுறுசுறுப்பாகவே வைத்திருந்தது; இப்போதும் வைத்திருக்கிறது. “எதாச்சும் செய்யணும்ணேஎன்ற நினைப்பே அது. பல்வேறு பொறுப்புகளை இழுத்துப்போட்டு வேலை செய்திருக்கிறேன். நண்பர்களுக்கு உதவ வேண்டும், முடிந்த வரையில் ஏதேனும் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. ஏனெனில் என் முதுகுப் பிரச்சனையின்போதும், அதிலிருந்து மெதுமெதுவே மீண்டு வந்த பின்பும் உதவி செய்த நிறைய நண்பர்கள் எந்த எதிர்பார்ப்புமின்றிச் செய்தனர் என்பதே உண்மை.

சீக்கிரம் எதாச்சும் பெருசா செஞ்சுடணும். அடுத்த தடவ எப்போ கால் சைடு வாங்கும்னு தெரியல. இப்போ நல்லாத்தானே இருக்கோம்? புதுசா எதாச்சும் பண்ணுவோம், தெரிஞ்சிப்போம், முயற்சி பண்ணுவோம்என்ற எண்ணம் ஒவ்வொரு நாளையும் உயிர்ப்பாக மாற்றுகிறது. ஏனென்றால் மரபணு ரீதியாகவே சிலர் ஒல்லியாய் இருப்பதும், சிலர் அளவிற்கு மீறிய எடையுடன் இருப்பதும் மாற்றவியலாத விஷயங்கள். நம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதைத் தானே தலைவா மாற்ற முடியும்?

எனவேஆகஅதாகப்பட்டதுநான் சொல்வது என்னவென்றால்ஓரிரு வருடங்களோ, ஐந்து வருடங்களோ ஏதேனும் உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. குடும்பம், குட்டி, வேலை, வாழ்க்கை என்று வருவதற்கு முன்பாக மட்டுமாவது, நாற்பது வருடங்களுக்குப் பின் நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்குமளவிற்கான சிற்சில மனிதக் கடமைகளை (உதவிகள் என்று சொல்லி ஏதோ நாம் ஞானியாக வேண்டியதில்லை; மனிதராகப் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் மற்றவரிடம் கையேந்திதான் நிற்கிறோம்) ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.


காசு பணம் துட்டு மணி மணிஎன்ற அழுத்தம் பிற்காலத்தில் வரும்போது, கல்லூரி நினைவுகள் முழுமையாகக் கலைந்திராத இப்பருவத்தில் சொல்லிக்கொள்ளும்படியான செயல்கள் எதையுமே செய்யவில்லையே என்று தோன்றிவிடக் கூடாது என்ற பயம் இருக்கிறது. இவைகள்தாம் நான் பெற்ற கல்வி (‘கற்ற கல்விஎன்று சொல்லிக்கொளுமளவிற்கு இன்னும் வளரவில்லை) - என் பள்ளிகளும், என் கல்லூரியும் - எனக்கு அளித்த பெருங்கொடை என்று கருதுகிறேன்; இச்சிந்தனை. பெற்றோர், நண்பர்கள், உற்றார், உறவினர் புரிந்துகொள்வார்களா என்று தெரியவில்லை. ஆனால், இதாங்க என்னோடநியூ இயர் ரெசொல்யூஷன்’.