Monday, February 19, 2018

இவனும் அகதியே

வசவுகளுக்குப் பழக்கப்பட்ட
வடகிழக்கிந்தியன்
திருவான்மியூர் சிக்னலில்
மிதிவண்டியில்
குரங்குப் பெடல் போடத் தயார் நிலையில்
பச்சை விளக்கிற்குக் காத்திருக்கிறான்

பச்சை ஒளிர்ந்த நொடிப்பொழுதில்
பின்னிருந்து ஒலியெழுப்பி
“*ம்மாளஎன்றபடி கடக்கிறான்
ஃபோர்டு எண்டேவர்க்காரன்


மிரண்டொதுங்கி
விழிபிதுங்கி
தடுமாறி நிற்கும்
வந்தேறியின் கண்களில் வழிய மறுக்கும்
கண்ணீரினூடே தெரிகிறது
அந்நியனெனும் பீதி

ஃபோர்டும், அதைத் தொடர்ந்து
இரண்டு பேருந்துகளும்
மூன்று ஆட்டோக்களும்
நான்கைந்து வண்டிகளும்
சீறிப் பாய்கின்றன

அவை எழுப்பிய புகை
கண்களை மறைக்க
தெளிவற்ற சாலையில்
நிலையற்ற வாழ்வின் ஒரு நாளைக் கடக்க
எத்தனித்துச் செல்கிறான்
புறக்கணிப்பின் அடையாளமாய்

அவனுக்குச்சாவு கிராக்கியும் தெரியாது;
கயித கஸ்மாலமும் புரியாது

புரிந்தென்ன ஆகப் போகிறது?