Monday, May 13, 2019

முற்று

தீவிர சிகிச்சைப் பிரிவு வாயிலில் இறந்து கிடந்தார் முருகன். அத்துவான இரவில் நோயாளிகளனைவரும் அவரவர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தனர். உடன் வந்திருந்த உறவினரும், நண்பர்களும் காத்திருப்பு அறையில் குறுக்கும்நெடுக்குமாய்ப் பாய்விரித்து அயர்ந்திருந்தனர். வாயில் நுரை வழிய விழுந்து கிடந்த அக்காவலாளி கேட்பாரற்ற நிலையில் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்திருந்தார். கடிகாரம் மூன்று முறை செவிப்பறைகளின் ஆதியைத் தொட்டுவிட்டு அடங்கியது. பிரிந்த உயிரும், பிரியப் போகும், பிழைக்கப் போகும் உயிர்களும் நிசப்தத்தில் கலந்தன.

*****

சார், உங்க தங்கச்சி மருந்தக் குடிச்சிட்டாங்க. கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு ஒடனே வாங்க”. இரண்டு சுற்றுப் போதை மட்டுமே உட்சென்றிருந்ததால் சற்றே தெளிவாக இருந்தான் சின்னமுத்து. சிதறிக்கிடந்த வறுவல்களும், மங்கலாய்த் தெரிந்த காலணிகளும், பச்சை வர்ண ஒளிவிளக்குகளுமாய் இருந்த மதுபானக் கடையின் முப்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களில், ஒரு மூளை மட்டும் சுதாரித்துக்கொண்டிருந்தது.

*****

யோவ், என்னையவா உள்ள விட மாட்டேன்னு சொல்ற? நான் யாருன்னு தெரியுமா? உன்னக் கொன்னுடுறேன் இருய்யா.” முழு வேகத்துடனும், அரைபோதையுடனும், அதிகபட்ச நடுக்கத்துடனும் ஓடிவந்த சின்னமுத்து, நொடிப்பொழுதில் முருகனைத் தள்ளிவிட்டான்.

சுவரில் இடித்து விழுந்த முருகன் தம்பி இரு தம்பி. அப்டிலாம் போய் இப்போ பாக்க முடியாது. பெட்ல சேத்து அர அவரு கூட ஆவல இன்னும்என்றபடி எழுந்தார். சின்னமுத்துவின் முட்டல்களும், மோதல்களும் அவர் முன் எடுபடவேயில்லை. நெற்றிப்பொட்டு சற்றேனும் சுருங்காமல், புருவம் உயராமல், வார்த்தை உச்சத்தை எட்டாமல், சலனமின்றி சின்னமுத்துவைக் காத்திருப்போர் இடத்தில் அமர வைத்தார்.

ஹேமா சொந்தக்காரங்க யாராச்சும் இருக்கீங்களா?”
”…..”
போங்கம்மா டாக்டர் கூப்பிடுறார்.”

உள்ளே சென்ற முப்பத்தாறாவது நொடியில் அதரங்களை உலுக்கும் கேவலும், கூச்சலுமாக வெளியே ஓடி வந்தாள் வசந்தி. “யோவ் வாட்ச்மேன், இதுக்கு என்னக் கூப்புடாமயே இருந்திருக்கலாமேய்யா. செத்த சேதியச் சொல்ல எதுக்குய்யா என்ன உள்ள போச்சொன்ன? செத்துப்போ. உன் குடும்பமே நாசமாப் போக. போய்ச் சேந்துட்டாளே மகராசி, நான் பெத்த சொத்துஎன்றபடி முருகனின் நெஞ்சில் குத்தினாள். சாளரங்களின் வழியே உள்ளே வந்திருந்த ஓரிரு பறவைகள் விக்கித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அரற்றியபடியே விழுந்த வசந்தியைக் கைத்தாங்கலாய்ப் பிடித்து ஓரமாய் அமர வைத்தார்.
அரை மயக்கத்தில் இருந்த வசந்தி, கண்கள் இருள, சாய்ந்து விழுந்தாள். பின்னல் அவிழ்ந்து தலைவிரிகோலமாயிற்று.

*****

பின்மண்டையில் யாரோ கோடரியால் ஓங்கி அடிப்பதைப் போல வலி பிளந்துகொண்டிருந்தது. சின்னமுத்து தள்ளிவிட்ட வேகத்தில் சுவரில் மோதியிருக்க வேண்டும். இடித்தது போல நினைவில்லை முருகனுக்கு. அதைப் பற்றிச் சிந்திக்கவும் நேரமில்லை. தன் நாற்காலியில் உட்கார்ந்தார். தலையை நிமிர்த்திக் குனிந்தால் இருட்டிக்கொண்டு வந்தது. தடுமாறியபடியே படியில் நடந்துசென்று இரண்டு பரோட்டா தின்றுவிட்டு வந்தார்.

தரையை மெழுகித் துடைக்கும் செங்கேணியம்மா, “என்ன முருகா, அதுக்குள்ள தின்னுட்டியா என்ன?” என்றாள் துடைப்பத்தைத் தரையில் அழுத்தித் தேய்த்தபடியே. மையமாய்த் தலையசைத்த முருகனால் பெரிதாகப் பேச முடியவில்லை. தொண்டை அடைப்பதைப் போலிருந்தது.

*****

கண்விழித்துப் பார்த்தபோது நேரம் 12:30யைத் தாண்டியிருந்தது. தலையில் கீரைக்கூடையை வைத்தது போல் பாரம் அழுத்தியது. முருகன் எழுந்தார். “சாமி, இனிமே முடியாதுப்பா. தெனம் பத்துச் சாவு, தெனம் நூறு ஏச்சு வாங்க இனிமே முடியாதுஎன்று முனகியபடியே மருத்துவமனையின் கிழக்கு வாயில் வழியே வெளியே வந்தார். ஏற்கனவே இரண்டாய்ப் பிரிந்திருந்த சாலை, தலைசுற்றலில் நான்கைந்து பிரிவுகளாய்த் தெரிந்தது. மின்விசிறியைப் போல் சுழன்றது சாலை. சற்றுத்தொலைவில் இருந்த மளிகைக் கடையில், “தென்ன மரத்துல பூச்சி புடிக்குது தம்பி. இந்தத் தோட்டத்துல எல்லாம் போடுவாங்களே பூச்சிக் கொல்லி ஒரம். அது கொஞ்சம் ஒரு மூணு பாக்கெட்டு குடுப்பாஎன்றார்.