Saturday, May 9, 2015

ஒரு மழைத்துளியின் பயணம்

Prelude: I am just happy to publish my first Tamil piece of my blog. This I wrote during my 11th standard rainy holidays. It is a fact that schools in Cuddalore get a separate vacation through torrential rains. Thanks mom for converting the paper - written article into the digital format.

இந்த வருட மழைக்காலத்தில் நான்கைந்து நாட்கள் மட்டுமே பள்ளி விடுமுறை விடப்பட்டபோதும் அந்த வருத்தமெல்லாம்(!) மழை பெய்யும் அழகான காட்சிகளை ரசிக்கும்போது பறந்து சென்றது. பலதரப்பட்ட மக்கள் மழையினால் பாதிக்கப்படுவார்கள் என்று அறிந்தும் எனது குழந்தை மனம் மேலும் மேலும் மழை வேண்டும் என்று இயற்கை அன்னையிடம் வேண்டி மன்றாடியது.
உண்மையிலேயே இயற்கையின் காட்சியமைப்பும், கொடையும் நினைந்து, வியந்து போற்றுதற்குரியது. சோவென்ற குரலுடன் பெய்யும் மழை; பின்னணி இசைக்கு இடி; ஒளியமைப்புக்கு மின்னல்; இவற்றுடன் நடனமிடும் மரங்களும், பறந்து அங்குமிங்கும் செல்லும் பறவைகளும்..... பார்க்கப் பார்க்க மனம் இவ்வுலக வாழ்வை விட்டு மெல்ல விலகிச் செல்வதை உணர முடிகிறது. சிறிது நேரம் மெய்ம்மறந்து பார்த்தால் ஓர் நடனக் காட்சியைக் கண்டு களித்த ஆனந்தம் மனதிலும் முகத்திலும் படர்கிறது.
பள்ளி விடுமுறையானாலும் படிப்பதற்கான பாடங்களுக்கொன்றும் குறைவில்லை. ஆனால், அமர்ந்து,கூர்ந்து படிப்பதற்கான எண்ணம் வரவேயில்லை. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெளியே வந்தேன். தோட்டத்தில் அணில்களும், குருவிகளும் பல்வேறு வகையான ஓசைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தன. ஒரு மூலையில் ஊற்று நீர் பிரவாகம் எடுத்துக்கொண்டிருந்தது. கருமேகங்கள் சூழ்ந்து நின்று முரசறைந்து கொண்டிருந்தன.
இவற்றையெல்லாம் மகிழ்ச்சியுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் பார்வை தற்செயலாக துணிகள் காய வைக்கும் கொடியின் பக்கம் சென்றது. அக்கொடியின் மேல் முத்து முத்தாக நீர்த்துளிகள் பூத்திருந்தன. விளம்பரங்களிலும், விழாக்களிலும் மேடைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதைப் போல நீர்த்திவலைகள் அழகாகப் படர்ந்திருந்தன. அங்குமிங்குமாக அல்லாமல் அவை முறையாக ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அடுக்கி வைக்கப்பட்டதைப் போல் தோற்றமளித்தன.
அதில் ஓர் நீர்த்துளி, கொடியின் விளிம்பில் ஒட்டியும் ஒட்டாமலும் கீழே தரையில் விழும் நிலையில் ஊசலாடிக்கொண்டிருந்தது. மலைப்பள்ளத்தாக்கில் விழ வேண்டிய நிலையில் கடைசி முயற்சியாக மனிதன் மெல்லிய மரக்கிளை ஒன்றைப் பிடித்துக்கொண்டு தொங்குவதைப்போல அத்துளி யாருடைய உதவியையோ எதிர்பார்ப்பது போலத் தளரும் பிடியுடன் கொடியோடு ஒட்டிக்கொண்டிருந்தது. எண்ணெய்யில் பொரித்த பூரி சிறிது சிறிதாக உப்பிப் பெரிதாகத் தோற்றமளிப்பதைப் போல அந்த நீர்த்துளி கொடியின் கீழ் ஏற்பட்ட காற்றழுத்தத்தால் உப்பியது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தபோது வால்ட் விட்மன் இயற்றிய A Noiseless Patient Spider என்ற ஆங்கிலக் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. ஒரு மலைப் பள்ளத்தாக்கில் சிலந்தி ஒன்று வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வதற்காக இலக்கின்றி எல்லா இடங்களிலும் வலை பின்ன முயன்று கொண்டிருக்கும். அது போல மனித ஆன்மா தியானத்தில் இருக்கும்போது நற்சிந்தனைகள் எனும் வலையைப் பரப்பிக் கடவுளை அடைய முயற்சி செய்யும் என்று அழகாக விளக்கியிருப்பார். சிலந்தி, மனித மனம்  ஆகியவற்றைப் போலவே, அச்சிறிய மழைத்துளிக்கும் ஏதோ ஒரு தேடல் இருப்பதைப் போலவே நான் உணர்ந்தேன்.
அது கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக உயிர்ப் பயத்துடன் கொடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது போலவும், மறுபுறம் எப்படியேனும் மண்ணோடு மண்ணாகக் கலந்து இயற்கையுடன் ஒன்றிணைய வேண்டும் என்ற வேட்கையோடு எதிர்பார்ப்பதைப் போலவும் தோன்றியது. ஒரு குழப்பமான மன நிலையுடன் தீர்மானமாக முடிவுக்கு வர முடியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்துக் கொண்டிருந்த மழைத்துளியைப் பார்த்தபோது பரிதாபமகவும் இருந்த்து.
மற்ற எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அத்துளி கீழே விழுந்து விடக் கூடாது என்று தீடீரென வேண்டிக் கொள்ளத் தொடங்கினேன். அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மர ஓலைகளிலிருந்து விழுந்த மழை நீரில் ஒரு துளி, கொடியைப் பற்றியிருந்த துளியைக் கீழே தள்ளி விட்டு,அவ்விடத்தில் வந்து சொகுசாக அமர்ந்து கொண்ட்து..
   ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ப்ரூட்டஸால் குத்தப்பட்ட சீஸர் அதிர்ச்சியில் உறைந்து நண்பன் துரோகியாக மாறியதை நினைத்துக் கொண்டே இறந்து விடுவது போல, தனது இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட புதிய நீர்த்துளியின் செயலை எண்ணி, வெட்கி அந்நீர்த்துளி கீழே விழுந்து ஒரு நொடியில் மண்ணோடு மண்ணாகப் புதைந்தது.
       நெருக்கமான நண்பரோ உறவினரோ விட்டுப் பிரிந்ததைப் போன்ற ஏக்கத்துடன் உள்ளே சென்றேன்.

8 comments:

  1. "OUT OF BOX BLOG"...
    spider,iruthalai koli erumbu
    tis all nama 10th la padicha UVAMAI VILAKATHA
    nyabaga paduthudhu

    ReplyDelete
  2. Replies
    1. Thank you. But, I feel lazy to type phonetic Tamil in this keyboard. Thankfully, mom did the typing work and hence the result :)

      Delete
  3. அருமை தம்பி :-)

    ReplyDelete
  4. 11th la elzhudiniya... romba nalla irukku.

    ReplyDelete