Thursday, June 25, 2015

உணர்வெனும் சங்கிலி

            மாலையில் அலுவலக வேலைகளை அவசரமாக முடித்துவிட்டு ரயிலேறுவது வாடிக்கையாகவே மாறிவிட்டது அவளுக்கு. மணிரத்னத்துக்கடுத்தபடியாக ரயில் பயணங்களை ரசிப்பவள் அவள். உண்மையில், பணிமாற்றத்தால் பயணம் அவளுக்கு உற்ற தோழியாக மாறியிருந்தது. காலையில் கடைசி நேரப் பரபரப்பில் கிளம்பினாலும் ரயிலின் ‘தடக் தடக்இசையினூடே ‘தி இந்துபடிப்பது ஏகாந்த அனுபவமாயிருந்தது. சொந்த ஊரில் வேலைசெய்தபோதுகூட இல்லாத மன அமைதி, தண்டவாளங்களும், ரயிலும் சேர்ந்து பாடும் தாலாட்டில் கிட்டியது. மகனுக்கு நொறுக்குகள் வாங்குவதற்கென்று, புதிய இடத்திலும் கடையொன்றைக் கண்டுபிடித்துவிட்டாள்.

     அன்று ரயிலில் பெரிதாகக் கூட்டமில்லை. நெற்றியில் படிந்த வியர்வைத்துளிகளை ஒற்றியபடி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். மொத்தமே நான்கு பேர் மட்டுமே இருந்த அப்பெட்டியில் மற்ற மூவருமே வியாபாரிகள். ரயிலில் தினம்தினம் சுண்டல், போளி, பலாச்சுளைகள் விற்கும் அன்றாடங்காய்ச்சிகள். சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து சோர்வு மிகுந்த ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஆண், முதுமையின் அடையாளங்கள் தெளிவாகத் தென்பட்ட ஒரு மூதாட்டி, 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் – மூன்று தலைமுறைகள் வறுமை என்னும் நேர்க்கோட்டில் சந்தித்திருந்தனர் அவர்களையறியாமலேயே.

     ஆனந்த விகடனைப் படித்துவிட்டதால் பொழுதுபோக்க வழி தெரியாமல் வந்தவள், அவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள். “இந்த ட்ரெயின்லதாம்மா தெனம் வியாபாரம் பண்ணுவேன். சுண்டல், கடலை, போளி இப்டி ஒரு ஒரு நாளைக்கு ஒண்ணொண்ணுஎன்றான் அந்த திடகாத்திரமான மனிதன். கூடையில் மீதமிருந்த சுண்டலைப் பற்றிக் கேட்டபோது, “அவ்ளோதாம்மா. இன்னிக்குக் குடுத்து வெச்சது அம்புட்டுதேன். காலைல எடுத்துட்டு வர்றது. சில நாள் ரெண்டு கிலோ கூட மிஞ்சிப்போயிடும். அதெல்லாம் மாட்டுக்குதான். சாயங்காலம் அஞ்சு மணி, ஆறு மணி தாண்டுனா சுண்டல் நமுத்துப்போயிடும். அப்புறம் விக்கமுடியாது.

     பரிதாப உணர்ச்சி மேலிட 5 ரூபாய்க்குச் சுண்டல் கேட்டாள். பெரிய பொட்டலமாகத் தந்தான். 20 ரூபாய் பெறும். “இப்போ ரெண்டு மாசமா லீவு வுட்ருந்தாங்கல்ல? சரியான சேல்ஸ். ஒரு நாளைக்கு 1000 ரூபாய் கூட சம்பாதிச்சுருக்கேன். ரயிலுக்குள்ள விக்கணும்னா 10 நாளைக்கு 1000 ரூபா கட்டி ரசீது வாங்கணும். ஆனா ஸ்குவாட் வந்தாங்கன்னா பிரச்சனையாயிரும். 250 ரூபா ஃபைன் போட்டுடுவாங்க. இப்ப இருக்குற ஒரு அதிகாரி நல்லவரு. அவங்க வந்தாக்க, முந்தினயே ஃபோன் பண்ணிடுவாரு; எறங்கிடுவோம்”, என்றவனிடம், “இவ்ளோ சிரமம் இருக்குல்ல, வேற ஏதாச்சும் தொழில் பாக்கலாம்ல? கடைல எதுவும் வேல செஞ்சாக்கூட நல்ல சம்பளம் கெடைக்குமே”, என்றாள்.

     வேற வேல எதுவும் தெரியாதும்மா. இது பழகிடுச்சு. கூட்டிக் கழிச்சுப் பாத்தாத் தண்டல் போக ஒரு நாளைக்கு எப்புடியும் 300 ரூபா நிக்கும்.அவனது தொழில்பக்தி, பணத்திற்காகவே வேலைசெய்யும் தனது நடுத்தர வர்க்க மனநிலையைச் சம்மட்டியால் அடித்தது போலவே உணர்ந்தாள். “அதுசரி! மத்தவங்க பண்றாங்கன்றதுக்காகப் பிள்ளைகள இஞ்சினியருக்குத்தான் படிக்க வைப்பேன், டாக்டருக்குத்தான் படிக்க வைப்பேன் என்று நாம் பிடிவாதம் பிடிக்கும்போது, பணம் கெடச்சாலும் மத்த வேலைக்குப் போகமாட்டேன்னு சொல்ற அவனோட பிடிவாதமும் நியாயம்தான்”, என்று உள்ளுணர்வு எகத்தாளம் செய்தது.

     பலாச்சொள சாப்படறியாம்மா? மீதமிருந்தவற்றை ஆளுக்கொன்றாகக் கொடுத்தாள் கிழவி. பல்லில்லாத வாயில் வைத்து அவள் மென்றுகொண்டே வந்தது சிரிப்பாகத்தான் இருந்தது. திடிரெனச் சத்தமாக இருமினாள்; புரையேறியிருக்கக்கூடும்.
“ஆயா? உங்கள யாரோ நெனைக்கறாங்க போல.
அட, இந்த வயசான கெழவிய யாருமா நெனக்கப் போறாங்க?

                                                            ***************

     இரவு புதிதாக அரைத்திருந்த மிளகாய்ப்பொடியுடன் தோசை சாப்பிடுவது அருமையாயிருந்தது. காரம் சற்று அதிகமாகவே இருந்தபடியால், இருமல் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருந்தது. தண்ணீர்க் குவளையை நீட்டிய மகன், “என்னம்மா, உன்ன யாரோ நெனைக்கறாங்க போல?என்றான். சட்டெனக் கிழவியின் நினைப்பு வந்தது அவளுக்கு. கூடவே அவளுடைய கேள்வியும்: “இந்த வயசான கெழவிய யாருமா நெனக்கப் போறாங்க?

     நினைப்பு என்பதும், மறத்தல் என்பதும் ஒருவரின் உடல்ரீதியான இருப்பு சம்பந்தப்பட்டது அல்ல; நினைப்பு என்பது ஒருவர் ஏற்படுத்திய உணர்வுகளின் நீட்சி; அந்த யாரோ ஒருவர் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பின் சங்கிலித்தொடர்பு. பரஸ்பரம் இருக்கும் எண்ண ஓட்டங்களின் சங்கமம். இல்லையேல், அரைமணி நேரம் மட்டுமே உடனிருந்த அக்கிழவியின் நினைப்பு ஏன் அந்நேரத்தில் வரவேண்டும்?

4 comments:

  1. *goes to a corner and cries*
    *throws hat and flowers at this post*
    *goes into the room and locks self in*
    *vows to never come out*

    Giri. Giri. GIRI. SEND THIS PIECE TO A EFFING MAGAZINE AND /GET IT PUBLISHED!/
    I've said this before and I'll say it again. You habe an amazing knack of writing in Tamil. And your way of interpreting everyday incidents is outta the world.
    I'll go and curl up in my bed listening to sad songs, Ok?

    ReplyDelete
    Replies
    1. Oh, please. You gonna hear sad songs?? Strange enough. I never meant it to be sad. Anyways, thanks for the out of the world comments. Hope everything is true :P

      Delete
  2. Keep up the good work Giri.

    Loved this line: மத்தவங்க பண்றாங்கன்றதுக்காகப் பிள்ளைகள இஞ்சினியருக்குத்தான் படிக்க வைப்பேன், டாக்டருக்குத்தான் படிக்க வைப்பேன் என்று நாம் பிடிவாதம் பிடிக்கும்போது, பணம் கெடச்சாலும் மத்த வேலைக்குப் போகமாட்டேன்னு சொல்ற அவனோட பிடிவாதமும் நியாயம்தான்

    And yes - please do get this published. On paper. In a magazine :D

    ReplyDelete
    Replies
    1. Is it worth that much? Ah, I see. But, mom is of the opinion that if something gets published online (read blog), it shouldn't go for print except when I write a book or the magazine is my own :P :D

      By the way, thanks for the read, guruji (I mean it)!!

      Delete