Saturday, May 25, 2024

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே...

கத்திரி வெயில் சுட்டெரிக்கும் ஒரு சனிக்கிழமை. மதியச்சாப்பாடு முடிந்த களைப்போடு கட்டிலில் படுத்து மின்விசிறியை இயக்கினால் என்ன ஆகும்? நியாயமாகத் தூக்கம் வரும்; வர வேண்டும். திரைச்சீலைகள் மூடிய அறையில், வெயிலின் தாக்கம் சற்றே குறைவாகத் தோன்றும் இடத்தில் சொகுசாக மின்விசிறியின் கீழே உறங்க வேண்டும் என்பது ஒரு மனிதப்பதரின் ஆசைதானே? ஆனால் சற்றே சுயகுரூரம் இருக்கும் மூளை கொஞ்சம் தகிடுதத்தம் செய்தால்?

"அந்த ஃபேன் ஃபுல்ஸ்பீடுல ஓடும்போது டப்புனு உள்ள கைய வெச்சுப் பார்த்தா என்னாகும்?" என்ற விந்தையான, விஞ்ஞானப்பூர்வமான வினா தோன்றுமாயின் ஒரு மானிடப்பதரால் என்ன செய்ய இயலும்? இப்போது கண்ணை மூடினாலும் அக்காட்சிதான் கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இத்துடன் நிறுத்தினால் பரவாயில்லை. ஐ.பி.எல். ரீபிளே போலவும், ரஜினிகாந்தின் ஓப்பனிங் காட்சி போலவும், தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள் போலவும் ஸ்லோ-மோஷனில் அக்காட்சியைத் திரும்பத்திரும்ப மனக்கண்ணிற்குள் கொண்டுவந்து நிறுத்தும். இதுபோதாதென்று அப்போதுதான் 'அயலான்' தொழில்நுட்பக்க குழுவினரை மிஞ்சும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளெல்லாம் வேறு சேர்ந்துகொள்ளும்.

சரி, இது தூக்கமின்மையால் ஒருவேளை வரும் பிசகாக இருக்கலாம் என்றால் அப்படியும் சொல்லத்தோன்றவில்லை. வேலைக்குச் செல்வதற்குத் தயாராகும்போது கையுயர்த்தி டீ-ஷர்ட்டோ, பனியனோ அணியும்போது "அப்புடியே லேசா இன்னும் கொஞ்சம் கையைத் தூக்கி ஃபேன்ல வெச்சுப்பாக்கலாமா ஒரே ஒரு தடவ?" என்ற அவா எழுந்து, "வை", "வைக்காத" என்று இரு குழுக்களாக எண்ணங்கள் பிரிந்து நடுவில் ஒரு கோபிநாத் உட்கார்ந்து பஞ்சாயத்து நடத்த வேண்டிய நிலை வந்துவிடுகிறது. இதுவரை கிறுக்குத்தனமாக கோபிநாத் தீர்ப்பு சொன்னதில்லை; என்றேனும் ஒருநாள் சொதப்பிவிடுவாரோ என்ற பயம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

மின்விசிறி மட்டும் அல்ல. அடிவாங்க வேண்டும் என்ற துணிவும், தினவும் இன்ன பிற இதர சூழ்நிலைகளிலும் அவ்வப்போது கம்பெனி ஆர்ட்டிஸ்ட் கேமியோ கதாபாத்திரங்களில் வருவது போல தோன்றிக்கொண்டே இருக்கும். ஜன்னலையோ, கதவையே திறந்து மூடும்போது "சுண்டுவிரலை மட்டும் நடுவுல வெச்சு வேகமா சாத்திட்டா எப்புடி இருக்கும்?" என்பது ஒரு தினசரி மனப்போர்.

'சரி, ஏதோ வேலைப்பளுவின் காரணமாகச் சிலபல நியூரான்கள் கோளாறாகப் பணி செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானே?' என்று சமாளிக்கலாம் என்றால், 'அதையும் தாண்டிப் புனிதமானது' என்கிற ரீதியில் இன்னும் விஷமத்தனமான சிந்தனைகள் வந்து போவதையும் தவிர்க்க இயலுவதில்லை. கைப்பேசியின் சார்ஜரையோ மடிக்கணினியில் சார்ஜரையோ ஆன் செய்யும் நேரத்தில் "குறுக்க இந்த கவுசிக் வந்தா...?" என்று கொமாரு கோமாளித்தனம் செய்வார். மின்சாரம் பாயும் கேபிள் நுனியை ஊறுகாய் போல் நாக்கில் வைத்துப் பார்ப்பதற்கான உள்விசை எங்கிருந்தோ ஊற்றாக உருவாகி ஆறாகப் பெருகிப் பிரளயமாகப் பாய்ந்து வரும் நேரத்தில் நல்லவேளையாக மின்வெட்டு ஆகிவிட்டது ஒருமுறை.

இவையெல்லாம் கூடப் பரவாயில்லை என்று தோன்றுமெனின் மேலும் சில விபரீத வினைச்சிந்தனைகளும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு. மிக்சியில் சட்னி அரைப்பதென்பது அவ்வாறான ஒரு நேரம். என்ன சிந்தனை ஓடும் என்பது புரிந்திருக்க வேண்டும்! "மூடி போடாமல் அரைக்கலாமா? கைக்கு ஏதாச்சும் ஆகுதா பாப்போமே?" என்பது ஆர்.சி.பி. ஐ.பி.எல். கோப்பைக்கு அருகில் செல்வது போல ஒவ்வொரு முறையும் கிளுகிளுப்பாகத் தோன்றி, பின் ஆர்.சி.பி. ஒவ்வொரு முறையும் இயலாமையுடன் திரும்புவது போல் சோகத்துடன் மூடியைப் போட்டே அரைத்துவிடவேண்டிய கட்டாயம்.

சரி, சட்னி அரைத்தாயிற்று! சிரைத்து, குளித்து, புத்துணர்ச்சியுடன் இட்லி சட்னி சாப்பிடலாம் என்று ட்ரிம்மரை எடுத்தால், "தல! சங்கு கிட்ட வரைக்கும் போற... அப்புடியே லைட்டா சங்குல ட்ரிம்மர் ப்ளேடை வெச்சு கீறிப் பார்க்கலாம்ல?" என்று '3' பட தனுஷிற்கு அருகில் தோன்றும் பச்சை வண்ணக் கோமாளிகள் என்னிடமும் கேட்கத்தொடங்குவர். அவர்களை வேறு சமாளிக்க வேண்டும். இட்லி மாவை ஃபிரிட்ஜிலிருந்து எடுக்கப் போனால் "தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்" என்பது போல எர்த் கனெக்ஷன் சரியாக இல்லாத நேரத்தில் ஃபிரிட்ஜின் வயரையோ, கதவு திறப்பதற்கு ஏதுவாக இருக்கும் இரும்பு ப்ளேட்டையோ ஒரு இரண்டு, மூன்று வினாடிகள் தொட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் தலைதூக்கும். சற்றே சுதாரிக்கும் மனம் உடனே, "தம்பி, அதான் தக்காளி சட்னி அரைச்சு வெச்சுட்டியே! எதுக்கு இன்னொரு தக்காளி சட்னி உனக்கு?" என்று வடிவேலு உவமைகளுடன் வழிகாட்டும்.

இப்பட்டியல் இத்துடன் முடிவதும் இல்லை. மேலும் சில உதாரணங்கள் கீழே:

1 - மதியம் வேலைக்குச் செல்லும்போது : "கண்கூசிக் குருடாகும்வரை சூரியனைப் பார்த்துக்கொண்டே செல்லலாமே!"

2 - நடைபாதையில் போகும்போது : "எதிர்ல வேகமா ஒரு கார் வருதுல? அது கிட்டத்துல வரும்போது முன்னாடி போய் நின்னுட்டு அடிச்சுத் தூக்குறானா இல்லையான்னு டெஸ்ட் பண்ணிப் பாப்போமா?"

3 - பதின்மூன்றாம் மாடியில் ஸ்மோக்கிங் கார்னரில் நண்பன் புகைக்கும்போது : "இங்க ஓப்பனாத்தானே இருக்கு? எகிறி குதிச்சா என்னாகும்? எலும்புல்லாம்தான் ஒடையுமா? இல்ல ஆளே காலியாயிடுவோமா? ட்ரை பண்ணிப் பாக்கலாமே ப்ளீஸ்"

4 - லைவ் கடாய் சாட் கார்னரில் நிற்கும்போது : "அந்த சன்னா மசாலாவைச் சூடு பண்ணுறப்ப அடுப்புல கைய உட்டுறலாம்; என்ன ஆயிடும் பெருசா?"

5 - காய்கறி வெட்டும்போது : "கத்தியை லேசா ஆள்காட்டி வெரல்ல வெச்சு அத்துவுட்டா என்னாவும்?"

மேலும் பல கிறுக்குத்தனங்களும் உண்டு. சாணை பிடிக்கும் இயந்திரத்தைப் பார்க்கும்போது உதிக்கும் யுரேகா யோசனை, பேருந்தின் படியில் தொங்கும்போது ஓட்டமெடுக்கும் பல்வேறு சாத்தியங்கள், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது எதிரில் பேருந்து வரும் நேரத்தில் கையை நீட்டத் துடிக்கும் எத்தனிப்புகள், ஓடும் ரயிலில் கதவோரத்தில் நின்று வெளியே பார்க்கும்போது கடந்துசெல்லும் மின்கம்பங்கள் ஆசைகாட்டிக் கூப்பிடுவதாக நினைக்கும் நினைப்புகள், உழவர் சந்தையில் கடையண்ணன் பலாப்பழத்தை வெட்டும்போது "போதும்ண்ணே" என்று சொல்லும் சாக்கில் கையைக் குறுக்கே விட்டே ஆக வேண்டும் என்ற அவசரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இது ஒரு விசித்திர வியாதியும் இல்லை, அரிதான அற்புதமும் இல்லை என்று சமீபத்தில்தான் தெரிந்தது. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கான முழுமுதற்காரணம் உயிரைப் பாதுகாத்தல் என்பதையும், தற்காப்பிற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்கு 'இப்படி நடந்துவிட்டால்...?' என்ற எண்ணங்களே தூண்டுகோலாய் இருந்திருக்கின்றன என்பதையும் படித்துத் தெரிந்துகொண்டேன். இவ்வெண்ணங்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பல்வேறு புதிய பரிமாணங்களை அடைகின்றன என்றும் யார்யாரோ எழுதியிருக்கிறார்கள். எனக்கு என் எட்டாம் வகுப்பு ஆசிரியை சொன்னதே நினைவுக்கு வருகிறது - "மூளை வளந்துருச்சுன்னு இப்போதான் தோணுச்சு. அதைத் தப்பாக்குற மாதிரி பிரிமிட்டிவ் மேன் கணக்கா உனக்கு மட்டும் ஏண்டா இப்புடி கோக்குமாக்காவே யோசிக்கத் தோணுது?"

No comments:

Post a Comment