Sunday, January 15, 2017

அ(பொ)ங்கலாய்ப்புகள்

பண்டிகைக்காலங்களில் இரண்டு பிரச்சனைகள்தான் தலையாய மண்டைக் குடைச்சல்கள்.

1)    “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே/ வாரங்களே/ நாட்களே/ மணிநேரங்களே ஆன புத்தம்புதிய திரைப்படம்என்று அடித்தொண்டையிலிருந்து, நாபிக்கமலம் வழியாகக் கத்திக் கூப்பாடு போடும் தொலைக்காட்சிச் சேனல்கள்.

2)    “எங்க உங்க பெரியவன் வரலையா? சின்னவன் வந்துட்டானா?என்று வம்புக்குத் தயாராகும் அண்டை அயலார் பெருமக்கள்.

பொங்கல் என்று வந்துவிட்டால் இவ்விரண்டு விஷயங்களும் ஒருபடி மேலே சென்று முற்றிய நிலைமையை எட்டிவிடும். வகைதொகையின்றி புதிய படங்களை மாற்றிமாற்றி ஒளிபரப்பி மார்தட்டுவது தமிழர் பண்பாடு அல்லவா? கலாச்சாரக் காவலர்களான சிவகார்த்திகேயனும், சிம்புவும்தான் நம் வீட்டில் பொங்கல் பானை கழுவிவைப்பது போல, ‘உங்களை மகிழ்விக்கும் பணியில்என்ற பின்குறிப்புடன் சில சேனல்கள் இவர்களது திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள்.

எனினும், நம் பேசுபொருள் இதுவல்ல. வரிசையில் இரண்டாவதாக இருக்கும் வம்படிச் செய்திகளே இங்கு பிரதான இடம் பெருகின்றது. பின்வரும் மக்கள் அனைவரும் இப்பதிவைப் படிக்கவிருக்கும்/படித்துக்கொண்டிருக்கும் அனைவராலும் எதிர்கொள்ளப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.

1)    அநியாய ஆச்சரியம் அம்புஜம் மாமி: முந்தைய நாள் நள்ளிரவு சொந்த ஊருக்கு வந்து, அலைச்சல் அசதியில் அடுத்த நாள் மதியம் ஒரு மணிக்குக் கொட்டாவி விட்டு எழுந்து, சோம்பல் முறித்து, பல்விளக்கியோ விளக்கிக்கொண்டோ வாசலுக்குச் சென்றால், “டேய்... எப்போ வந்த? சொல்லவேயில்ல. ஒவ்வொரு தடவையும் வந்துட்டு இப்படித்தான் சொல்லிக்காமலே ஓடிப்போயிடுறஎன்று புதிதாக வந்த 2000 ரூபாய்த் தாளைக் கட்டாகப் பார்த்த ரீதியில் ஆச்சரியப்படும் மாமியைச் சமாதானப்படுத்துவது, ஏ.டி.எம். வரிசையில் நிற்பதைக் காட்டிலும் கடினமான காரியம்.

”இல்லைங்க, நான் நேத்து ராத்திரிதான்...என்று சொல்லி முடிக்கக்கூட விடாமல், தொடர்ச்சியாகப் பேசி ஆர்.ஜே.பாலாஜிக்கே சவால் விடும் இவர்களது வாய்ஜாலத்தில் கேட்பவருக்குத் தொண்டை வறண்டு, தண்ணீர் தாகம் தவிக்கும்.

ஒருவழியாகப் பேசிமுடித்து, “நீ என்னமோ சொல்ல வந்த?என்று அவர்கள் கேட்கும்போது, நமக்கு மறந்திருக்கும். மூளையைக் குடைந்து, ‘என்னாச்சு?என்று மனதிற்குள் ஒரு சிறிய நினைவலையை ஓடவிட்டு யோசித்துப் பார்த்தால் கூட ‘நேத்து ராத்திரிஎன்னும் இரண்டு வார்த்தைகள் மட்டும் நினைவுக்கு வந்து, அவ்வாக்கியத்தை முடிக்க முடியாமல் திணறும். ‘நேத்து ராத்திரி யம்மா...என்று பாடிக்கொண்டே வந்துவிட வேண்டியதுதான்.

2)    விவகாரமாய் விசாரிக்கும்வீரப்பன் மாமா:
இவர் கொஞ்சம் சிக்கலான நபர். தொலைபேசியை எடுத்தால் ‘ஹலோஎன்றும், நேரில் பார்த்தால் ‘சௌக்கியமா?என்றும் கேட்க வேண்டும் என்ற விருந்தோம்பல் தோன்றாக்காலத்தில் வாழும் விந்தையான மனிதர். ‘வந்துட்டான்யா வைப்ரேஷனுஎன்று பெரும்பாலான நேரங்களில் சுதாரித்துத் தப்பிவிட்டாலும், தப்பித்தவறி முகத்தில் முழித்தால், “என்னப்பா, அடுத்தது எம்.பி.ஏ-வா, இல்ல எம்.எஸ்.-ஆ? என் சொந்தக்காரப் பையன்கூட ‘கேட்பரிட்சை எல்லாம் எழுதினான். கெடைக்கவே இல்ல. ‘கேம்பஸ் இண்டர்வியூவை நம்பி இருக்காத தம்பிஎன்று நீட்டி முழக்குவார். வாழ்வின் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்துச் சோர்ந்த விளைவுகளைச் சில நிமிடங்களில் கொடுத்துவிட்டு, முத்தாய்ப்பாக, “உனக்கு ஒண்ணும் சொல்லத் தேவையில்ல. நீ உலகம் தெரிஞ்ச பையன். பாத்துக்கோஎன்று பீடிகை போட்டுச்செல்வார்.

அவர் சென்றவுடன் நேர்மறையான அனைத்து நம்பிக்கைகளும் கரைந்து, நமக்கு நாமே ‘உதவாக்கரைப் பட்டம் கொடுத்துக்கொள்ளும் அளவிற்குச் சந்தேகப்படத் தொடங்குவோம்.யாருய்யா இவன்? அவனா வர்றான், அவனா போறான்என்று பின்னர் இவரைப் பற்றிய தெளிவு பிறக்கும்; இருந்தாலும், அவநம்பிக்கையை விதைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

3)    நலம் விசாரித்து நரசூஸ் காபி குடிக்கும்நடராஜன் மாமா:
கல்யாணம் – காட்சி, துக்கம் – துயரம் என எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாமல், “இவங்க வீட்டுக்கு எப்படிப் போலாம்?என்று யோசித்துக் கொண்டிருக்கும் இவருக்கு, வகையாக வந்து சிக்கிக்கொள்வது ஊரிலிருந்து வரும் மண்ணின் மைந்தர்களான நாம்தான். சூரியன் எழுவதற்கு முன்பாகக் கல்லூரிப் பையன் எழுந்திருக்க மாட்டான் என்பது தெரிந்தும், பையன் வந்திருக்கான்னு கேள்விப்பட்டேன் (அவரே பார்த்திருந்தால் கூட, ‘கேள்விப்பட்டேன்என்றுதான் சொல்லுவார், ‘அப்படியே கேஷுவலா லுக் விடுடாஎன்று அறிவுறுத்தும் சந்தானம் போல); அதான் பாத்துட்டுப் போலாமேன்னுஎன்று அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் தோரணையில் அம்மாவிற்குத் தெரிந்துவிடும் அவரது எதிர்பார்ப்பு.

அம்மா: ஏதாவது சாப்பிடுறீங்களா?
அவர்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ங்க.
அம்மா: குடிக்க ஏதாவது தரவா?
அவர்: சூடாத் தண்ணி மட்டும் போதும்.
அம்மா: (உள்ளுக்குள் கறுவிக்கொண்டே) இருங்க, காபி போட்டுத்தரேன்.

காபி வரும்வரை ‘தினமணியின் ஒரே பக்கத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பார்; இத்தனைக்கும் அதில் காஜல் அகர்வால் விளம்பரம் கூட இருக்காது.

அம்மாவும் என்னதான் உள்ளுக்குள் திட்டினாலும், நல்ல காபியாகப் போட்டுவிடுவார். அதை உறிஞ்சி உறிஞ்சிக் கடலலையின் ஆரவாரத்தைப் போன்ற சத்தத்துடன் குடித்துவிட்டு, “சரிங்க. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு. பையன் எழுந்த உடனே நான் விசாரிச்சேன்னு சொல்லுங்கஎன்று வாசலை நோக்கி நடப்பார்.

அத்துடன் போய்விட்டால் பரவாயில்லை. வாயிற்கதவருகே நின்று வாங்கிக்கட்டிக்கொள்வார்.

அவர்: ஆமாம், பையன் எங்க வேலை செய்யுறான்?
அப்பா: சார், அவன் இப்போதான் காலேஜ் படிச்சிட்டிருக்கான்.
அவர்: ஓ (திணறிச் சமாளிக்கிறார்) கரெக்ட். நான் அன்னிக்கு ரமேஷ் வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க பையனையும் உங்க பையனையும் கொழப்பிக்கிட்டேன்.
அப்பா: ஓ சரி சரி.
(உள்ளுக்குள்) வழியாத, போய்த் தொலை.

4)    உண்டி கொடுத்து உயிர் எடுக்கும்ஊர்வசி மாமி:
இவர் படுத்தும்பாட்டில் பல்வேறு அம்சத்திட்டங்கள் உண்டு. முதல்நாள் உண்மையிலேயே அக்கறையாகத் தன் பையனுக்கோ, பேரனுக்கோ கொடுக்கும் அதே பாசத்துடன் சுவையான கூட்டு, அவியல் என்று அள்ளி இறைப்பார். சுவையில் மயங்கி, ‘ஆஹா, ஓஹோஎன்று புகழ்ந்துவிட்டால் போதும்; அடுத்த நாள் தெரியாத்தனமாக அதிகமாய் வடித்த அரைவேக்காட்டு அரிசியை எடுத்துவந்து, “கொழந்தைக்குப் பிடிக்குமேன்னு எடுத்துண்டு வந்தேன்என்று வெள்ளந்தியாகச் சிரிப்பார். மறுக்க முடியாமல், அரைமனதோடு வாங்கி, முழுமனதோடு சாப்பிட்ட பின்னர்தான் ‘விளைவுகள்தெரிய ஆரம்பிக்கும்.
(இப்பதிவை எழுதத் தொடங்கிய பின், மூன்று ‘இடைவேளைகள்எடுக்க வேண்டியதாயிற்று.)

‘எதுக்குடா அவங்க குடுக்குறாங்கன்னு எல்லாத்தையும் சாப்பிடுற?என்ற கேள்வி உங்கள் மனத்தில் உதிப்பது தவிர்க்க முடியாத நியதி. மூன்று காரணங்கள் உள்ளன.

1)    உருவத்திற்கும், தின்னும் சோற்றின் அளவிற்கும் சம்பந்தம் இல்லாத அபூர்வப் பிறவி நான்.
2)    எல்லாம் கார்போஹைட்ரேட் தானே?என்று என்றோ வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றும் அப்பாவி ஜீவன் நான்.
3)    ஒருமுறை, பக்கத்துவீட்டில் கொடுத்த பாயசத்தை மாட்டுக்குக் கொட்டுவதைப் பார்த்து, அந்தப் பாட்டி உதிர்த்த பழங்காலத்து வசவுச்சொற்கள் இன்றும் செவிகளில் தேனாய்ப் பாய்கிறது. ‘ஆறாதே நாவினால் சுட்ட வடு’ எனும் குறளின் வாழும் உதாரணம் நான்.

இப்படி ஆயிரம் தொல்லைகள் இருந்தாலும், ஒவ்வொரு பண்டிகைக்கும், அடித்துப்பிடித்துப் பேருந்தில் பயணம் செய்து பெருமையுடன் சொந்த ஊருக்கு வரும் அனுபவமும், வீட்டில் தங்கும் நாட்களும் அலாதியானவை.

ஏனெனில்,
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
இதுதான் என் ஊரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
நீ மோதிப் பாரு

Saturday, January 14, 2017

தங்கல் விமர்சனம்

(’காப்பீட்டு ஊழியர்’ எனும் இதழிற்காக எழுதியது; வெட்டித் தொகுக்கப்பட்டு, வெளியான விமர்சனம் இறுதியில் காண்பிக்கப் பட்டுள்ளது.)

திரையரங்கில் திரைப்படத்திற்கு முன்பாக இசைக்கப்படும் தேசியகீதம் ஒலித்தது; சுணங்கி, முனகி, எழுந்து நின்று அனைவரும்தேசிய ஒருமைப்பாட்டைவெளிப்படுத்தியாயிற்று. இதை இங்கு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ‘தங்கல்திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் இந்தியாவிற்காக மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வெல்கிறார் கீதாகுமாரி ஃபோகாத். காமன்வெல்த் பதக்க மேடையில் இந்திய தேசியகீதம் ஒலிக்கிறது. ‘எழுந்துநில்’, ‘அமைதியாய் இருஎன்று யாரும் அறிவிக்கவில்லை; ஆனால், மொத்தத் திரையரங்கும் அமைதியாகச் சலனமின்றி நிற்கிறது. இவ்வெளிப்பாடே தேசிய உணர்வு, அதுவே தங்கலின் வெற்றியும்கூட.

மேரிகோம்’, ‘இறுதிச்சுற்று’, ‘சுல்தான்என்று குத்துச்சண்டையும், மல்யுத்தமும் இந்தியத் திரையுலகிற்குப் புதிதல்ல. எனினும் இவையனைத்தையும் தாண்டி, ‘தங்கல்ஒருபடி மேலே நிற்கிறது என்றால், அதற்கு முக்கியமான காரணம் இத்திரைப்படத்தில் மிகக்குறைந்த அளவில் வெளிப்பட்டிருக்கும் சினிமாத்தனமேயாகும்.

வெறும் வசனங்களால் மட்டுமே படத்தை நிரப்பாமல், நிசப்தத்திற்கும், இசைக்கும், மௌனத்திற்கும், உணர்வுகளுக்கும் தகுந்த இடத்தையும், மதிப்பையும் அளித்து, இக்கதையைத் திரைக்கதை ஆக்கிய இயக்குநர் நிதேஷ் திவாரி பாராட்டுக்குரியவர். உண்மைக்கதையையோ, அச்சம்பவங்களை மையமாகவோ வைத்துத் திரைப்படத்தை எடுக்க நினைக்கும்போது, தொடக்கத்தில் பிரகாசமாகத் தோன்றினாலும், முழுநீளத் திரைக்கதையாக எழுதும்போதுதான் அதிலுள்ள சிக்கல்கள் பிடிபடத் தொடங்கும். ஆனால், தொய்வின்றி இரண்டரை மணிநேரப் படமாகக் கொடுத்த விதத்தில் மிளிர்கிறார் இயக்குநர்.

சில காட்சியமைப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். தன் மல்யுத்தக் கனவுகளை நிறைவேற்ற ஆண்வாரிசு வேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் மஹாவீர்சிங் ஃபோகாத் (ஆமீர்கான்) நான்கு பெண் குழந்தைகள் பிறந்தவுடன், விரக்தியில் தன் பதக்கங்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு மூடுகிறார்; கனவுகள் மூடப்படும் அத்தருணத்தின் படிமம் அருமையாகக் கையாளப்பட்டிருக்கிறது.

அதேபோல், தந்தையிடம் பயிற்சிபெற்ற கீதாகுமாரி, ‘தேசிய விளையாட்டு முகாமில்பயிற்சிபெறும்போது, பயிற்சி முறைகள் மாறுகின்றன. ஒருமுறை ஊருக்கு வரும்போது தந்தைக்கும், மகளுக்கும் அது தொடர்பாக ஒரு மல்யுத்தப்போட்டி நடைபெறுகிறது. திரையில் இரு பயிற்சிமுறைகளுக்கு இடையிலான போட்டியாகத் தோன்றும் அக்காட்சி, முதுமையை இளமை வெல்வது தவிர்க்க இயலாத நியதி எனும் செய்தியைச் சொல்கிறது; தாய்மகள் உணர்வுப்போராட்டங்களும் சொல்லப்படுகின்றன. அவ்விடத்தில் கையறுநிலையில், உடலில் தெம்புமின்றி, தான் தோற்றுக்கொண்டிருப்பதை நொடிநொடியாய் வெளிப்படுத்தும் ஆமீர்கானின் நடிப்பு, படத்தின் மிகப்பெரிய வரப்பிரசாதம்.

பின்பு, புதிய பயிற்சி முறைகளால் உலகளவுப்போட்டிகளில் தொடர்தோல்விகளைச் சந்திக்கும் கீதா, பட்டியாலாவிலிருந்து தந்தைக்குத் தொலைபேசும் காட்சி உருக்கத்தின் உச்சம். தொலைபேசியின் இரு முனைகளிலும் தந்தையும், மகளும் விசும்புகின்றனர்; ஒருவர் சொல்ல வரும் விஷயம் என்னவென்று மற்றவருக்கு நன்றாகத் தெரியும். இவையனைத்தும் கண்ணீரினூடே புரியவைக்கப்படுகிறது. ஒரு சோகத்தருணத்தின்போது மனிதமனம் அழத்தான் செய்யுமே தவிர, புலம்பாது. அதை அருமையாகப் படமாக்கியிருக்கும் விதத்தில் பேசுகிறது படக்குழுவின் தெளிவு.

ஒரு இரக்கமற்ற பயிற்சியாளராக, பாசமிகு தந்தையாக, கொள்கைப்பிடிப்பு கொண்ட விளையாட்டு உணர்வுள்ளவராக என அனைத்து அவதாரங்களிலும் ஆமீர்கான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கீதா மற்றும் பபிதாவின் குழந்தைப்பருவ பாத்திரங்களாக நடித்த இரு சிறுமிகளும்நடிப்புஎன்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்துகின்றனர்; ‘காக்காமுட்டையில் வரும் இரு சிறுவர்களின் இயல்பான நடிப்பை இத்துடன் ஒப்பிட முடியும்.

இரு பெண்களின் வாழ்க்கைதான் மையக்கரு என்றாலும், இரண்டாம் பாதியில் கீதாவின் முன்னேற்றமே திரையில் காண்பிக்கப்படுகின்றன. அதனால், வளர்ந்த பபிதாவாக வரும் பாத்திரத்திற்குப் பெரியளவில் படத்தில் நடிக்க இடமில்லை; எனினும், பாசமிகு தங்கையாகத் தன் சகோதரியின் வெற்றிக்குப் பின் இருக்கிறார். அவரது பாத்திரத்திற்கும் கடைசிவரை சமமான முக்கியத்துவம் தந்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது. படத்தொகுப்பாளரின் மேதைமை இக்காட்சிகளில் வெளிப்படுகிறது; கச்சிதமாக, சுமார் 155 நிமிடங்களில் தரமான படைப்பைத் தருவதில் இவரது பங்கு அலாதியானது.

ப்ரீதமின் இசையில் பாடல்கள் அனைத்தும் உணர்வுகளைப்பார்வையாளர்களிடம் எளிதாகக்கடத்துகிறன. ‘யுத்தம் யுத்தம்’(‘தங்கல் தங்கல்’) பாடல் தனித்துத் தெரிகிறது. பின்னணி இசை, தனியாக ஒரு கதாபாத்திரம்போல் இழைகிறது. பஞ்சாபி நாட்டுப்புற இசையும், தேசிய உணர்வைத் தூண்டும் ரசமுமாகப் படத்தின் பக்கபலமாய் நிற்பது இசை. போட்டியின் முக்கியமான நொடிகளின்போது பிற ஒலிகள் எதுவும் இன்றி, வீராங்கனைகளின் மூச்சுச்சத்தம் மட்டுமேகேட்கும் அளவிற்குச் செதுக்கியிருக்கிறார் ப்ரீதம். சப்த(ஸ்வர)த்திற்கும், நிசப்தத்திற்குமான மெல்லிய இடைவெளியை லாவகமாகக் கடந்துசெல்கிறார்.

வசனங்கள் கூர்வாளைப்போல் அளவாக ஆனால் அருமையாக இருக்கின்றன. “நாளைக்கு நீ கனவுகளைத் தொலைத்த அனைத்துப் பெண்களுக்கான அடையாளமாய் விளையாட வேண்டும்”, “கீதாபபிதா ரெண்டு பேரும் என் செல்லங்கள்தான், ஆனால் என் கனவை அவங்களால நிறைவேத்த முடியாதுபோன்ற வசனங்கள் சிலிர்க்க வைக்கின்றன.

மஹாவீரின் தம்பி மகனான ஓம்கரின் பார்வையில் படத்தை நகர்த்தியிருப்பது புதுமையான கண்ணோட்டம். தேசியப்பயிற்சியாளராக வரும் ஒருவர் கடைசிவரை பயிற்சியளிப்பதை வாய்ப்பாடமாகவே நடத்துவதும், அவர் சொல்வது அனைத்துமே தவறு என்பதுபோலும் இருக்கும் சில காட்சிகள் சினிமாத்தனமானவையாகஎம். குமரன்திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றன. இறுதிப்போட்டியின் உண்மையான நிகழ்வுகள் மாற்றப்பட்டிருக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டு படம் வெளியானதிலிருந்தே தொடர்ந்துவருகிறது. எனினும் இத்தகைய சிறிய குறைகளை மறந்து, பெண் முன்னேற்றத்தைப் பாசாங்கில்லாமல், பிரச்சாரமில்லாமல் சொன்ன இப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

ஆண், பெண் வேறுபாடின்றிநம் சமூகம் பெண்களை எந்த இடத்தில் வைக்கிறது?’ எனும் அகக்கேள்வியை அனைவரது மனத்திலும் எழுப்பும் வகையில் தங்கல் ஒரு வெற்றிப்படைப்பு என்றே அறுதியிட்டுச் சொல்லலாம்.



Saturday, December 3, 2016

ஒரு நாள், ஆனால் திருநாள் #3

(மூன்றாம் (எ) கடைசி பாகத்தை அடைந்துவிட்டோம், ஒருவழியாக. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைப் படித்துவிட்டு இங்கே வருதல் நலம்)

வண்டி கேட் பேருந்து நிறுத்தத்தில் பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வந்தது; ஏறிப் புறப்பட்டோம் ஊரை நோக்கி. திங்கட்கிழமையாதலால் பெரிதாகக் கூட்டமில்லை. சொகுசான இடமாகப் பார்த்து அமர்ந்தோம்.

6:30 மணி தாண்டியிருந்ததால், பனிக்காற்று இதமாக வீசியது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி அரைத்தூக்கத்தில் அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே இருந்தேன்.

பிச்சாவரத்திற்கென்ற ஏதோ ஒரு தனித்துவம் – ஒருமுறை வந்தால் மீண்டும் மீண்டும் வரவைக்கச் செய்யும் இனம்புரியாத மந்திர சக்தி – வியப்படையச் செய்தது. படகில் ஏறியதிலிருந்து நடந்த அனைத்தும் இதமான ஒரு மகிழ்ச்சியைத் தந்தது.

இரண்டடி, மூன்றடி ஆழமேயுள்ள தாழ்வான பகுதிகளிலிருந்து, சற்றே பயமூட்டும் அளவுக்கு (ஆறடிக்கு மேலான) இடங்களனைத்தையும் பார்த்துவிட்டோம். அமைதியான நீரோட்டத்திற்கிடையே அவ்வப்போது தோசைக்கல்லில் எண்ணெய் விட்டால் வரும் வட்டங்களைப் போல், மீன்களின் துள்ளலால் சுழல்களாகத் தண்ணீர் பரவி ஓடியது நினைவிற்கு வந்தது; வானும், பூமியும் மணமக்களாக இருந்தால் அவர்களுக்கிடையே விரிந்த திரையாக இருப்பது பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள்தாம் என்று தோன்றியது; ஒரு பெரிய மாளிகையின் நுழைவாயிலைப் போல, வானவில்லின் வளைந்த தோற்றம் கொண்டு, அண்ணாந்து பார்த்தால் அனைத்தையும் மறைக்கும் மாபெரும் மரங்கள் நினைவில் அசைந்தாடின.

பெயரே தெரியாத பறவைகளின் அழகும், அவை எழுப்பிய ஓசையும் காதில் ரீங்காரமிட்டன; கச்சேரியில் கீர்த்தனைகளையும், ஆலாபனைகளையும் கடந்து கடைசியாக வரும் ‘ஜுகல்பந்தியைப் போல, அப்பறவைகள் கலவையாக எழுப்பிய ஓசைகள் அனைத்தும் ஒரே ஸ்ருதியில் இயற்றப்பட்ட சங்கீதமாய் ஒலித்துக்கொண்டே இருந்தது. அடர்ந்த மரங்களினூடே செல்லும்போது சீழ்க்கையடிப்பது போன்ற சத்தத்தை எழுப்பிப் பீதியடையச் செய்த பூச்சிகளின் நினைவு கடந்து சென்றது; ‘செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது தலையைக் கடந்து சென்ற மரங்கொத்திப் பறவையின் நீலவண்ணம் கண்முன்னால் புகைப்படமாகப் பதிந்து நின்றது.

இவையனைத்தையும் தாண்டி நீர்ப்பகுதிக்கே உரிய வாசனையுடன், சதுப்பு நில மரங்களின் மூலிகை வாசமும் சேர்ந்து மயக்கிய நேரங்கள் பசுமரத்தாணியாய்ப் பதிந்திருந்தன. இடையில் ஒரு மரத்தின் மிக மெல்லிய கிளை கூட வலிமை கொண்டதாக என்னையும், தீபக்கையும் தாங்கிப் பிடிக்கும் அளாவுக்கு உறுதியானதாக இருந்ததையும், அங்குக் குரங்கு வித்தை காண்பித்துத் தாவிக் குதித்துப் புகைப்படங்கள் எடுத்ததும் மின்னலென வெட்டியது.

கூடவே சேர்ந்து தெளிந்த நீரொடையென ஓடியது அன்று பார்த்த மீன்பிடிக்கும் காட்சிகள். கூடையை வைத்துக்கொண்டு ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்குஎன்ற ரீதியில் கூடை இறால் மீன்களால் நிறையும் வரை, சலனமற்றுத் தண்ணீரில் உட்கார்ந்து/மிதந்து கொண்டிருந்த பெண்மணிகள் அலைமோதினர்; குடும்பத்துடன் மீன்பிடிக்கப் படகில் சென்று, தந்தை வலைபோட, மகன் துடுப்புப் போட, பிடித்த மீன்களை எல்லாம் தாய்  குவியலாக்கி அடுக்கிய காட்சி, “குடும்பமே இத நம்பித்தான் இருக்குறோம்என்று தொலைக்காட்சிப் பெட்டியில் கதறிய மீனவப் பெண்களின் கூற்றை மெய்ப்பித்தது.

வலை போடுவதற்கென்று ஒரு தனித்திறமை வேண்டியிருக்கும் போல; நான் பார்த்தவரையில் அது ஒரு கலை போலவே தோற்றமளித்தது. முதலில் மீன் பிடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும் வகையில் படகை நிலைநிறுத்த வேண்டும். பிறகு, வலையைச் சிறிது சிறிதாக இறக்கித் தண்ணீரில் விடவேண்டும். இப்போது படகை முன்நோக்கிச் செலுத்தி வலையின் ஒரு முனையைக் கையில் பிடித்துக்கொண்டால், வலை மெதுவாகத் தண்ணீரில் விரிந்து பரவும். வலையின் பரப்பளவு அதிகமாகும் அந்நேரத்தில் ‘பொளக்என்று நீரினூடே எழும் சலசலப்பு அலாதியானது. முடிவாக வலையில் மீன்கள் மாட்டிய பின்பு மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக அந்தத்திலிருந்து ஆதி வரை செல்ல வேண்டும். இப்படித்தான் எல்லா இடங்களிலும் மீன் பிடிப்பார்களா எனத் தெரியவில்லை. சைவமாகப் பிறந்ததால் அதைப் பார்க்கும் பாக்கியம் கூட எனக்குப் பெரிதாகக் கிட்டியதில்லை.

சட்டென்று நினைவு திரும்பியவனாக, “மீன் செம்மயா பிடிக்குறாங்கல்ல?என்று தீபக்கிடம் வினவினேன்.

“அட நீ வேற. சண்டே காலைல தாழங்குடா பக்கம் போய்ப்பாரு. அங்க மீன் பிடிச்சு மொத்தமாக் கரை சேப்பாங்க. நல்லா இருக்கும்என்றான். ‘ஞாயிற்றுக்கிழமை – தாழங்குடாஎன்று மனம் பதிவு செய்தது.

எங்களது பேச்சுவார்த்தையில் குறுக்கிட்டு, “சார், ஷேர் இட்எப்புடி வேலை செய்யுது?என்று கேட்டார் மூன்று இருக்கைகள் கொண்ட எங்களது வரிசையில் மூன்றாவதாக அமர்ந்திருந்த நபர். ஜன்னலோர இருக்கையில் நானும், நடுவில் தீபக்கும், மறுமுனையில் அவருமாக அமர்ந்திருந்தோம்; எனவே அவருக்குப் பதில் சொல்லும் பெரும்பேறு எனக்குக் கிட்டவில்லை. ஏற்கனவே இருமுறை, “சார், டைம் எவ்ளோ?என்று 6:47க்கு ஒருமுறையும், 6:51க்கு ஒரு முறையும் கேட்டிருந்தார். நானாக இருந்திருந்தால், “என்னய்யா, வாட்ச் வேணுமா? இந்தா நீயே வெச்சுக்கோஎன்று கைக்கடிகாரத்தைக் கழற்றித் தந்திருப்பேன் (பின்னர், “பேசிக்கலி ஐ ஆம் ஃப்ரம் கர்ண பரம்பரைஎன்று பீலாவும் விட்டிருப்பேன்). ஆனால் பாவம் பிஞ்சு மனதுடைய தீபக், அவருக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

“அதாவது சார், இப்போ நீங்க உங்க மொபைல்ல ஷேர் இட் ஆன் பண்ணிக்கிட்டிங்கன்னா பக்கத்துல ஷேர் இட் ஆன்ல இருக்குற அத்தன மொபைலோட பேரும் உங்க ஃபோன்ல காமிக்கும். உங்களுக்கு வேண்டிய பாட்டு, படம், ஃபோட்டோன்னு என்ன வேணும்னாலும் அனுப்பிக்கலாம்என்றான் அக்கறையுடன்.

“அதுக்கு அப்போ நெட் வேணுமா?

“நெட் எல்லாம் வேணாம் சார். வைஃபைல கனெக்ட் ஆயிடும்.

“நான் இப்போ வைஃபையே ஆன் பண்ணல. எப்புடிப் பண்ணணும்?

“நீங்க ஆன் பண்ண வேணாம் சார். ஷேர் இட் உள்ள போனா, தானா ஆன் ஆயிடும்.

இக்கட்டத்தில் அவரால் தீபக் சொல்வதை எற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஏதோ ஆராய்ச்சிப் பாடம் எடுக்கும் விரிவுரையாளர் போலத் தோன்றியிருக்க வேண்டும் அவருக்கு, தீபக்கைப் பார்த்தவுடன். அவரது முன்நெற்றி சுருங்கி ஐயத்துடன் தீபக்கை நோக்கின.

“நீங்க சொல்றதப் பாத்தா என்னோட ஃபோன் இப்போ உங்களோடத மோப்பம் பிடிக்குதுன்னு சொல்றீங்கஎன்று கூறி, வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார். பேருந்தின் பின்வரிசைகளில் அரைமயக்கத்திலும், முக்கால் போதையிலும் தூங்கிக்கொண்டிருந்த சிலர் திடுக்கிட்டு முழித்துப்பின் இருக்கையில் மீண்டும் சாய்ந்தனர்.

“இந்த வைஃபை, உலகத்துல இருக்குற எந்த ஷேர் இட் கூட வேணும்னாலும் கனெக்ட் ஆகுமா தம்பி?என்றார்.

இல்ல சார், அப்புடி இல்ல. ஒரு குறிப்பிட்ட தூரம் வரைக்கும்தான் கனெக்ட் ஆகும் தீபக்.

“பாருங்களேன், இவ்ளோ வயசாயிடுச்சு எனக்கு. ஷேர் இட் உள்ள போனா வைஃபை கனெக்ட் ஆகும்ன்ற பேசிக் விஷயம் கூட இப்போத்தான் தெரிஞ்சுக்குறேன்என்று சொல்லிவிட்டுப் பரிதாபமாகப் பார்த்தார்.

இந்நேரத்தில் பக்கத்து வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், எங்களைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டேயிருந்தார். அவ்வப்போது எங்கள் ‘ஷேர் இட்ஆளை நோக்கிக் கைகாட்டி, தலையின் அருகே கைவிரலைச் சுழற்றினார். “நீ சொல்லித்தான் தெரியணுமா இவரு மெண்டல்னு?என்று தோன்றியது. பொதுவாகப் பெரியவர்களைப் பார்த்து அப்படியெதுவும் தோன்றியதில்லை. இப்போதும் அவரைக் கீழ்த்தரமாக வைத்து யோசிக்கத் தோன்றவில்லை. ஆனால், அப்போதைக்கு இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது; அவர் தவறாக நினைக்கக் கூடும். அமைதியாக அமரவும் முடியாது; ஏனென்றால் சிரிப்பு முட்டியது.

எனக்குப் பொழுது போகவில்லை. குத்துமதிப்பாகப் பற்றவைத்தேன். “டேய் தீபக், அந்த மாஸ்டர் ஆப்பத்தி அவருக்குச் சொல்லிக்குடுடா. இண்டர்நெட் ஸ்பீட் எல்லாம் அதிமாகுமே அது யூஸ் பண்ணுனா! நீதானேடா அன்னிக்கு எனக்கு ஏத்திக் குடுத்தஎன்று தூண்டிவிட்டேன்; நினைத்ததைப்போலவே அதைப் பிடித்துக்கொண்டார் மனிதர்.

“அதென்ன தம்பி ‘மாஸ்டர் ஆப்’? எனக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன்என்று குழந்தையாகக் கேட்டார். “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். இப்போ அது என்னோட ஃபோன்ல இல்ல. எடமில்லன்னு டெலிட் பண்ணிட்டேன்என்று தன் பங்கிற்கு தீபக் அடித்துவிட்டான்; எப்படியோ அவர் சமாதானமாகிவிட்டார்.

மீண்டும் பிச்சாவர நினைவுகளில் மூழ்க எத்தனித்தபோது, “தம்பி, இங்க நாம மூணு பேரு இருக்கோம். இதே மாதிரி நம்பள மாதிரியே வேற உலகத்துல ஆளுங்க இருக்காங்களா?என்று கிளப்பினார்.

“தெரியல சார். இருக்கலாம், இப்போதைக்கு எதுவும் யாரும் கண்டுபிடிக்கல. அதுனால நாம படத்துல காட்டுறது எல்லாத்தயும் நம்பலாம், நம்பாமயும் இருக்கலாம்என்று எப்படியோ மழுப்பினான் தீபக். ‘கேம்பஸ் இண்டர்வியூவந்தால் இப்படியே வாயில் வடை சுட்டு எப்படியும் ஏதேனும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவிடுவான் எனும் திடமான நம்பிக்கை மனதில் நிலைகுத்தி நின்றது.

அவர் விடுவதாக இல்லை; ‘என்னாச்சு, கிரிக்கெட் விளாண்டோம்என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் விஜய் சேதுபதியைப் போல, அச்சு மாறாமல் அதே கேள்வியை மீண்டும் கேட்டார். தீபக்கும் ‘நீ விடாக்கண்டன்னா, நான் கொடாக்கண்டன் பாஸுஎன்ற அளவில் முன் சொன்ன அதே பதிலை, அட்சரம் பிசகாமல் அவரிடம் மொழிந்தான்; ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைப்பட்ட கால அவகாசம் கூட ஒன்று போலவே இருக்கும் அளவிற்கு அவனுடைய இரு பதில்களும் ஒரே மாதிரி இருந்தன.

இப்போது மாட்டிக்கொண்டார், சைகை காட்டி எகத்தாளம் செய்துகொண்டிருந்த பக்கத்து இருக்கைப் பயணி. அவரை நோக்கித் திரும்பிய திருவாளார் ஷேர் இட், அதே கேள்வியைக் கேட்டார். இப்போது ஒரு சிறிய கூடுதல் கொசுறுடன் – “இந்தப் பழைய படத்தில எல்லாம் காட்டுவாங்களே – அவள் எங்கே இருக்கிறாள்? இளவரசி எங்கே என்று காட்டு மாயக்கண்ணாடியே!’ -  அதே மாதிரி நம்பளயும் பாக்கலாம்ல?என்று ஈ.டி., யு.எஃப்.ஓ, ஏலியன் என ஆராய்ந்து பதிலளிக்கக்கூடிய அளவிற்குத் தன் கேள்வியின் தரத்தை உயர்த்தியிருந்தார். எகத்தாளப் பேர்வழி, விடைசொல்ல முடியாமல் திக்கித் திணறி நடுங்குவதைப் பார்த்து ரசித்த நாங்களிருவரும், பேருந்து நிலையம் நெருங்கியபடியால் இறங்க ஆயத்தமானோம்.

“என்ன தீபக், இப்போவாச்சும் இந்த நாள் முடிஞ்சுச்சா?என்று கேட்டபோது, சிரித்தான்; நானும் சிரித்தேன். பேருந்தை விட்டு இறங்கி வண்டியை எடுக்கப் புறப்பட்டோம்.

(தொடர் எழுதுவது எனக்கும் புதிதான அனுபவம்தான். இதைத் தொடர் என்றுகூட வரையறுக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஒரு நாளில் நடந்த மூன்று சம்பவங்கள் ‘இந்த நாள் இனிதே நிறைவடைந்ததுஎன்ற எங்களின் நினைப்பை ஒவ்வொரு முறையும் உடைத்துச் சுக்குநூறாக்கியது.

முதலிரண்டு பாகங்கள் எழுதியபோது, அன்றைய தினம் சந்தித்த மனிதர்களைப் பற்றியே எழுத விரும்பியதால் இயற்கையைப் பற்றியோ, மற்ற விஷயங்கள் குறித்தோ பெரிதாக எழுத முடியவில்லை.

நண்பர்கள் இருவரிடமிருந்து வந்த இரு முக்கியமான வாட்ஸப் பின்னூட்டங்கள் குறிப்பிடத் தகுந்தவை:

1)      பிச்சாவரம் பற்றி எழுதும்போது, இயற்கையழகை வர்ணித்திருக்கலாம்; மொக்கையாகப் பேசிக்கொண்டே இருந்தது போலிருந்தது. இதற்கான பதில் மேலே இருக்கிறது.
2)      சினிமா வசனங்களைத் தவிரப் பெரிதாக எதுவும் இல்லை. தேவையில்லாத விஷயங்கள் நிறைய இருப்பதாகத் தோன்றியது. மிகவும் பெரிய பதிவு, ஊன்றிப் படிக்கும் அளவிற்கு சுவாரசியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது. இதற்குச் சாமி சத்தியமாக என்னிடம் விடை இல்லை. மொக்கையாக இருந்திருந்தால் அடியேனை மன்னித்தருளவும்.

பொதுவாக எழுத்து என் சந்தோஷத்திற்கு என்று மட்டுமே நம்புபவன் நான். எனினும், இந்த இரு பின்னூட்டங்களில் குறிப்பிடப்பட்டிருந்த குறைகளை ஓரளவிற்கேனும் களைந்துவிட்டேன் எனும் நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறேன்.)

Friday, December 2, 2016

ஒரு நாள், ஆனால் திருநாள் #2

(மூன்று பாகங்கள் கொண்ட இத்தொடரின் இரண்டாம் பாகம் இது. நேற்று வெளியிடப்பட்ட முதல் பாகத்தை படித்தபின் இதைத் தொடருமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.)

பிச்சாவரம் படகுத்துறையிலிருந்து வெளியே வந்து டவுன் பஸ்ஸிற்காகக் காத்திருந்த நேரத்தை விரயமாக்க விருப்பமின்றி, எதிரிலிருந்த பூங்காவுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்துத் தீபக்கும், நானும் ஊஞ்சலில் ஆட ஆரம்பித்தோம்; சிறுபிள்ளைத்தனம்தான், நன்றாகத் தெரியும். இருந்தாலும், ஆசை யாரை விட்டது? தீபக் மெதுவாக ஆடினால் போதுமென்று லேசான உந்துதலோடு நிறுத்திவிட்டான். என் நேரம், வேகமாக ஆட வேண்டும் என்று மூளை கட்டளையிட்டது. மிக உற்சாகமாக உந்தி, உந்தி ஆடிக்கொண்டிருந்தபோது, இடையில் ஒருமுறை கால் சரியாக உந்தாததால் தரையில் பட்டு, அந்த அதிர்வு உயிர்நாடி வரை பரவி, சப்தநாடியும் சில்லிட்டு ஒடுங்கியது ஒரு நிமிடம்.

சட்டென்று முகம் மாறியதைத் தீபக் கவனித்ததாகத் தெரியவில்லை. யோசித்துப் பார்த்தபோதுதான் படாத இடத்தில் பட்டிருக்கக் கூடிய அந்த வலிக்கான காரணம் புரிந்தது; அன்று காலையில் எழுந்தவுடன் அழகு பார்ப்பதற்காகக் கண்ணாடியில் முழித்துவிட்டேன் என்று. “யார் மூஞ்சிலதான் முழிச்சேனோ?என்று கெட்ட வார்த்தையில் கூடத் திட்ட முடியாதத் தர்மசங்கடமான நிலை. இது எதுவும் தெரியாமல் ஊஞ்சலின் ‘சுகானுபவத்தைஅனுபவித்துக் கொண்டிருந்தான் நண்பன்.

“மச்சான், அங்க பாத்தியா?என்று அவன் கேட்டபோதுதான் சுற்றியிருந்த மக்களைப் பார்த்தேன். அனைவரும் ஜோடிகள். அது சரி, நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்ற ரீதியில் நாங்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம். சுற்றியிருந்த அனைத்துக் காதல் ஜோடிகளும் எங்களை ‘அவர்கள்என்று நினைத்திருக்கக் கூடும். எங்களுக்கு வேறு விதமான சிரிப்பு: ஒருவர் உடன்வந்திருந்த ஜோடியைப் பரோட்டா மாஸ்டரைப் போல் பிசைந்து கொண்டிருந்தார்; இன்னொரு பக்கம் இந்த உலகையே மறந்து ஒருவர் மடியில் அவரது ‘புறாபடுத்திருந்தது. நான் பரவாயில்லை, இயந்திரவியல் படிக்கிறேன். எனக்கு வகுப்பறையில் கூட அந்தப் பாக்கியம் கிடையாது. தீபக்தான் பாவம். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு படிக்கின்றவன், வகுப்பறையில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ள துறை. மனம் மிகவும் சஞ்சலப்பட்டிருக்க வேண்டும்.

அரை மணிநேரத்திற்கு ஒரு பேருந்துதான் என்பது நன்கு தெரியுமாதலால், கால் மணிநேரம் வரை ஆடிவிட்டுப் ‘போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்துஎன்று எழுந்துவிட்டோம். நாங்கள் பத்தடி நகர்ந்திருக்க மாட்டோம்; இரு குழந்தைகள் வந்து இடத்தை ஆக்கிரமித்து விட்டனர். எங்கிருந்து வந்தார்கள் எனத் தெரியவில்லை, அல்லது எங்கள் கண்கள் ஜோடிப் புறாக்களை மட்டும்தான் நோட்டம் விட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். எப்படியோ, “எருமை மாட்டு ஜன்மங்க! ஏழு கழுத வயசாயிடுச்சுஎன்ற வசவு நிச்சயமாக அக்குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து எங்களைப் பற்றி வெளிப்பட்டிருக்க வேண்டும். எத்தனை தலைமுறைகளைத் தோண்டியெடுத்துத் திட்டினார்கள் என்று தெரியவில்லை; யோசித்துப் பார்க்கவும் விருப்பமில்லை.

பேருந்துச் சத்தம் கேட்டதும், பர்ஸை ஒரு முறை பார்த்தேன்; 16 ரூபாய் இருந்தது. “அப்பாடா, டிக்கெட் 7+7 = 14 தான்; பொழச்சோம்டாஎன்று படகுக்காரர் கொடுத்த 10 ரூபாயுடன், நான் வைத்திருந்த சில்லறையைச் சேர்த்து எடுத்து வைத்துக்கொண்டு, வாடா என் டொமேட்டோஎன்ற நினைப்பில் நின்றிருந்தோம். ஒரு தனியார் பேருந்து வந்தது.

நடத்துனரிடம், “அண்ணே, வண்டி கேட் ரெண்டு டிக்கெட் எவ்ளோண்ணே?என்றதற்கு, “வண்டி கேட் போகாது தம்பி. அதுக்குப் பெரியார் வண்டி வரும். பஸ் ஸ்டேண்ட்ல வேணா எறங்கிக்கோங்க. 9 ரூபா ஒரு டிக்கெட்என்றார்.

மாப்பு, வெச்சுட்டான்யா ஆப்புஎன்று பேயறைந்தாற்போல இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டு திடுக்கிட்டு நின்றோம். நடத்துனருக்குப் புரிந்திருக்க வேண்டும். “பெரியார் வண்டி இன்னும் 10 – 15 நிமிஷத்துல வந்துரும். அதுல டிக்கெட் கம்மிதான். வண்டி கேட்ல எறங்கிக்கோங்கஎன்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவரது எண்ணவோட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது; ‘இதுக்கெதுக்குடா வெள்ளையுஞ்சொள்ளையுமா அலையுறீங்கஎன்றுதான் கூறியிருப்பார் என எந்தக் கோயிலில் வேண்டுமானாலும் கற்பூரத்தில் அடித்துச் சத்தியம் செய்வேன்.

போனது போச்சு விட்டு விளையாடு; வானத்தப் பாத்துத் தொட்டு விட போடுஎன்று மீசையில் மண் ஒட்டாத கதையாக அரசுப் பேருந்திற்குக் காத்திருந்தோம். ஆடி, அசைந்து ஒருவழியாக வந்தது ‘பெரியார் வண்டி’. முன்னெச்சரிக்கையாக, “அண்ணே, வண்டி கேட் வரைக்கும் ஏழு ரூபா தானே டிக்கெட்டு?என்று கேட்ட எங்களை வித்தியாசமாகப் பார்த்தார் நடத்துனர். “சிதம்பரம் பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் ஏழு ரூபாதான் தம்பி. எந்த ஊருக்குப் போகணும்?என்றார்.

“கடலூர்ண்ணே.

“மணி இப்போ 4:50 ஆகுது. உங்களுக்கு நல்ல நேரமா இருந்தா பாசஞ்சர் ட்ரெயின் வரும் கடலூர்ப் பக்கமாப் போறது. பஸ் ஸ்டேண்ட் கிட்டதான் ரயில்வே ஸ்டேஷனும். பஸ் ஸ்டேண்ட்லயே எறங்கிக்கோங்க.

“ஓ அப்புடியா?

“ஆனா பாத்துக்கோங்க. ஓடிப்போயி டிக்கெட் எடுக்கணும். இல்லாட்டி டிக்கெட் இல்லாமக் கூட போங்க. ஒரு பய செக் பண்ணமாட்டான்.”

அவர் சொல்வது லாட்டரிச் சீட்டில் பரிசு விழுந்தது போன்ற சந்தோஷத்தைக் கொடுத்தாலும், கூடவே பயணச்சீட்டு எடுக்க முடியாமல் பயணம் செய்து கடைசியில் எங்கள் முகராசிக்கு மாட்டிக்கொள்வோமோ என்ற பயமும் சேர்ந்துகொண்டது.

தீபக் சிரத்தையாகப் பேசினான். “மச்சான், அழகா வண்டி கேட்ல எறங்கிப் பக்கத்துல இருக்குற ஏ.டி.எம்-ல எங்கயாச்சும் காசு எடுத்துட்டு அப்டியே பஸ் ஏறிடலாம்டா.” எனக்குத்தான் ஏழரை அன்று நாக்கில் புகுந்து விளையாடியது. “டேய், பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் அதே டிக்கெட்தான்னு சொல்றாரு அண்ணன். ட்ரெயின் புடிக்கவும் சான்ஸ் இருக்கு. சப்போஸ் ட்ரெயின விட்டாலும் பஸ் ஸ்டேண்ட்ல பஸ் ஏறினா உக்கார எடம் கெடைக்கும். வண்டி கேட்ல ஏறுனா ஸ்டேண்டிங்தான். எல்லாத்தையும் தாண்டிப் பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல இல்லாத ஏ.டி.எம் எங்கயாச்சும் பாத்துருக்கியா?என்று பக்காவாகச் சொல்லிவிட்டு “ரெண்டு பஸ் ஸ்டேண்ட்ண்ணேஎன்று சீட்டெடுத்துவிட்டு, ‘நாங்க இருக்கோம்என்று வாசன் ஐ கேர் மருத்துவரைப் போல் பார்வையைச் செலுத்தினேன்.

போகிற வழியில் கிள்ளை ரயிலடியில் ரயில் வருவதற்காகக் கேட் போட்டிருந்தார்கள். “தம்பி தம்பி, இந்த ட்ரெயின்தான்பா. போச்சு, நம்ப போறதுக்குள்ள தாண்டிடும். நீங்க பஸ் புடிச்சுதான் போகணும்என்றார் ஓட்டுனர்; ஒரு நம்பிக்கை தகர்ந்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்குஎன்று உள்ளுக்குள் சொல்லிவிட்டு, “மச்சான், பஸ் கண்டிப்பா கெடைச்சுடும்டாஎன்றேன்; நக்கலாகச் சிரித்தான் தீபக்.

வண்டி கேட்டைக் கடந்துதான் பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வண்டி கேட்டைக் கடந்தபோது ஒரு ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம் இருப்பதைக் காட்டினான் தீபக். பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது நீ........ளமான வரிசையில். “டேய், எறங்கிடுவோம்டா. லைன்ல நின்னு எப்புடியும் ஒரு அர மணிநேரத்துல காசு எடுத்துடலாம்என்றான். அவனை முறைத்துவிட்டு, “என்ன மச்சான், நான்தான் சொல்றேன்ல? பஸ் ஸ்டேண்ட் கிட்ட எடுத்துக்கலாம்டா. காசு எடுத்துட்டு நல்லா சாப்புட்டுட்டுத் திருப்தியா ஊருக்குப் போறோம்என்றேன்; அவன் உண்மையிலேயே என்னைப் பார்த்துச் சிரித்தானா, அல்லது எனக்குத்தான் அப்படிப் பிரமையாகத் தோன்றியதா என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒரு நையாண்டித்தனம் நெஞ்சில் சுருக்கென்று தைத்தது போலிருந்தது.

ஒருவழியாகப் பேருந்து நிலையத்தை அடைந்தோம். அருகில் வாண்டையார் உணவகம் எனக் கொட்டை எழுத்தில் எழுதியிருந்தார்கள். நல்லக் கொழுத்த உணவகமாகத் தெரிந்தது; சைவம்/அசைவம் வேறு. அதையும் பார்த்துத் தீபக்கையும் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்தேன். “மூடிட்டு வாடா. காசு எடுத்துட்டு ஊருக்குப் போலாம்என்று வாயை அடைத்தான். ‘பயபுள்ள ரொம்ப அசிங்கப்படுத்துறானேஎன்று யோசித்துப் பின்பு, அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்குச் சென்றோம்; ஏ.டி.எம் திறந்திருப்பது தூரத்திலிருந்தே தெரிந்தது; வெளியிலும் கூட்டமே இல்லை.

கண்ணா லட்டு தின்ன ஆசையா?என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டு, “நான்தான் சொன்னேன்ல?என்று தீபக்கிடம் கூறினேன். அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, வேலை செய்யாத ஏ.டிஎம் என்று. முதல்முறையாக நான்தான் அருகில் சென்று ஏமாந்தேனா, அல்லது பலர் எனக்கு முன்னரே அப்பெரும் புண்ணியத்தை அனுபவித்தனரா என்று தெரியவில்லை; முகத்தில் ஈயாடவில்லை எனக்கு. தீபக் முகத்தைப் பார்க்கவில்லை அப்போதைக்கு. கண்டிப்பாகக் கிராதகன் அந்த நமட்டுச் சிரிப்புத்தான் சிரித்திருப்பான்.

“அண்ணே, வேற எங்க இங்க ஏ.டி.எம் இருக்கு?என்று பங்கில் வேலை செய்யும் ஒரு நபரிடம் விசாரித்தோம். அந்தப் பக்கத்துல இன்னொரு பெட்ரோல் பங்க் இருக்கு தம்பி. அங்க ஒரு ஏ.டி.எம். உண்டு. அங்க போய்ப் பாருங்கஎன்றார். ஓட்டமும், நடையுமாகச் சென்றால் இங்கு எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் தூரத்தில் இருந்தே அந்த ஏ.டி.எம். மூடப்பட்டிருப்பது தெரிந்துவிட்டது.

பிறர் சொல்பேச்சைச் சிலநேரம் ஆராயாமல் அப்படியே முழுமையாகக் கேட்டுவிட வேண்டும்எனும் ஞானம் அப்போதுதான் பிறந்தது. பக்கத்தில் இவன் வேறு, வாயைத் திறந்து “நான் சொல்றதக் கேட்டிருந்தா இந்தப் பிரச்சன இல்லல்ல?என்று வாயால் கேட்காமல் கண் ஜாடையிலேயே சம்மட்டியால் அடித்துக்கொண்டிருந்தான். சிறிது தூரம் நடந்த பின்பு ஒரு பெரியவரிடம், “சார், இங்க வேல செய்யுற ஏ.டி.எம். பக்கத்துல எங்க இருக்கு?என்று, ‘வேல செய்யுறஎனும் வார்த்தையை உட்புகுத்திய பெருமை மின்னக் கேட்டோம்.

“அந்தா அந்த முக்குல தெரியுதா ஒரு ஆலமரம்? அங்க ரெண்டு மூணு ஏ.டி.எம் இருக்குஎன்றார். மீண்டும் ஒருமுறை “வேலை செய்யுங்களா?என்று கேட்டிருக்க வேண்டும்போல; தவறு செய்துவிட்டோம். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க அவர் சொன்ன ‘முக்குவரை வந்து பார்த்தால், இருந்தது ஒரே ஒரு ஏ.டி.எம்; அதுவும் மூடித்தான் இருந்தது. கோபத்தில் நான் கெட்ட வார்த்தைகளில் சாபம் விடத் தொடங்கினேன் (யாருக்கு என்று கேட்க வாசகர்களுக்கு அனுமதியில்லை; அதைச் சொன்னால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை).

“சரி விடு மச்சி. பஸ் வந்த வழியிலயே போய்ப் பாப்போம். வேற எந்த ஏ.டி.எம்-மும் சிக்கலன்னா வண்டி கேட் ஆக்ஸிஸ் பாங்க்தான்என்று தீபக் சமாதானம் கூறினான்; மனதிற்குச் சற்று ஆறுதலாயிருந்தது. இதற்கிடையில் பிரச்சனையை அம்மாவிடம் (என்னைப் பெற்ற பெண்மணி; ‘அவர்இல்லை) சொல்லியிருந்தேன். அவர் பங்கிற்கு அவர், “டேய், என்னோட ஆஃபீஸ்ல வொர்க் பண்ற யாருகிட்டயாவது சொல்றேண்டா. இப்போதைக்குக் காச வாங்கிக்கோ. நாளைக்கு ஆஃபீஸ் போகும்போது நானே குடுத்துடறேன்என்று கரிசனமாகப் பேசினார். ஒரு நிமிடம் சரி என்று சொல்லலாம் போலத்தான் இருந்தது. இருந்தாலும் “21 வயசாயிடுச்சு. இந்த அசிங்கமெல்லாம் படணுமா? என்ன ஆனாலும் சரி. பொறுமையா காசு எடுத்துட்டுப் போலாம். எவன் கிட்டயும் கை நீட்டத் தேவயில்லஎன்று மனசாட்சிப் பயல் குரல் கொடுத்தான். ‘நான் பாத்த்தையெல்லாம் திங்குற ஓணான் இல்ல; பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்என்று “அதெல்லாம் நான் பாத்துக்குறேன்மா. நான் வரதுக்கு லேட் ஆகும். அதச் சொல்லத்தான் கால் பண்ணேன்என்று வைத்துவிட்டேன்.

நடக்கத் தொடங்கினோம். போகிற வழியில் ஒரு தபால் அலுவலத்தில் ஏ.டி.எம் திறந்திருந்தது; ஆனால், ‘அவுட் ஆஃப் சர்வீஸ்என்று இரண்டாவது முறையாக மூக்கை உடைத்தது. இடையில் ‘வழி மாறிவிட்டோமோ?என்ற சந்தேகம் வேறு வந்தது. “மச்சான், ரொம்ப நேரமா நடக்குறோம். இன்னும் வண்டி கேட் வரல. நீ சொல்லித்தானேடா இந்த வழியா வந்தோம்? மாத்தி விட்டுட்டன்னு நெனைக்குறேன்” என்று தீபக்கிடம் நான் மல்லுக்கு நிற்க, அவன் நடந்து சென்ற ஒருவரிடம் வழி கேட்டான். சரியான வழியில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று அறிந்தபோதுதான் மற்றொரு உண்மை புரிந்தது - ‘நாம் நினைத்த ஒரு விஷயம் எதிர்பார்த்ததைப் போல் நடக்கவில்லை என்றால், எதன்மீதாவது/யார்மீதாவது காரணமேயில்லாமல் பழியைச் சுமத்திவிட மனம் தயாராகி விடுகிறது’.

மச்சான், அந்த வண்டி கேட் ஏ.டி.எம். நாம வரும்போதே செம்ம கூட்டமா இருந்துச்சு. இப்போ திரும்பப் போகும்போது காசு காலியாகி இருந்தா என்னடா பண்றது?என்று தீபக்கைக் கேட்டபோது, “ஏண்டா, உனக்கெல்லாம் வாயில நல்ல வார்த்தையே வராதா?என்று அசிங்கமாகக் கேட்டான். உடலும், மனமும் சோர்ந்த நிலையில் வண்டி கேட்டின் அருகே சென்றபோது, புத்துணர்ச்சி ஏற்பட்டது. ஏடி.எம். திறந்திருந்தது, கூட்டமும் நின்றிருந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக வரிசையில் நிற்கப்போவது குறித்து ஆனந்தம் பிறந்தது. “மச்சான், இப்போல்லாம் கூட்டம் இல்லாத ஏ.டி.எம்.தான் நம்ப முடியாது போலஎன்று சிரித்தபடியே வரிசையில் நின்றேன்.

“இங்க அடுத்தது என்னென்ன வில்லங்கம் வெச்சுருக்காங்களோடா?என்று சொல்லிச் சிரித்தபோது, முன்னால் நின்றிருந்தவர், “தம்பி, ரெண்டாயிரம் ரூபா நோட்டு மட்டும்தான் வருது. ஒரு கார்டுக்கு ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் ரூபாதான், தெரியும்ல?என்றார். அக்கணத்தில்தான் சட்டென்று உறைத்தது, என்னுடைய அக்கவுண்டில் 2,000 ரூபாய் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளாமலேயே வந்துவிட்டேன் என்று. இணைய வழி பேங்கிங்கையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ‘டோல் ஃப்ரீஎண்ணுக்கு அழைத்து, மீதமுள்ள தொகையை அறிந்து கொள்ளலாம் என்று தோன்றியது; ஆனால் இரண்டு காரணங்களுக்காகக் கேட்கவில்லை.
1)      அவ்வரிசையில் நின்றுகொண்டு அதைக் கேட்பது அவமானமாகப் பட்டது.
2)      காசு இல்லையென்று சொல்லிவிட்டால், அம்மாவுக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வாங்கும் எண்ணமும் இல்லை.

வரிசையில் நின்றிருந்தவர்களிடம் இருந்து விதவிதமன சம்பாஷணைகள் வெளிப்பட்டன.

“உள்ள போயி அவ்ளோ நேரமா என்னய்யா பண்றான் அந்தாளு? பணம் எடுக்குறானா, பங்களா கட்டுறானா?

அங்க பாருங்க. திருட்டுப் பய. ஒரே ஆளு நாலு கார்டு எடுத்துட்டு வந்து எட்டாயிரம் ரூபா எடுத்துட்டுப் போறான். ரெண்டாயிரம், ரெண்டாயிரமா ஒவ்வொரு நாளா எடுக்கலாம்ல? அப்புடிக்கு என்ன இப்போ தல போற செலவு இருக்கப்போகுது?

“நைட்டு 11:50க்கு வாங்க சார். 10 நிமிஷம் வெயிட் பண்ணுனா அடுத்த நாளுக்கான ரெண்டாயிரத்தையும் எடுத்துட்டுப் போயிடலாம்.”

இன்னும் பற்பல கருத்துக்கள், யோசனைகள், திட்டுக்கள், ஷொட்டுக்கள். இப்படியாக வரிசை நகர்ந்துகொண்டே செல்லச்செல்ல எனக்கு இதயத்துடிப்பு அதிகரித்தது. காசு எப்புடியாச்சும் இருக்கணும் கடவுளேஎன்று வேண்டிக்கொண்டே மனதிற்குள் விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலீஸா, கந்த சஷ்டிக் கவசம் என்று அறைகுறையாகத் தெரிந்த அனைத்து சுலோகங்களையும் ‘மெட்லிசெய்துகொண்டிருந்தேன். கட்டக்கடைசியாக எனக்கு முன் இருவர் இருந்த நிலையில், கைப்பேசியில் எஸ்.எம்.எஸ். வந்தது. எடுத்துப் பார்த்தபோது மனத்தில் இனம்புரியாத சந்தோஷம். இரண்டு நாட்களுக்கு முன்பாக மறுத்திருந்த அமேசான் ஆர்டருக்கான ‘ரீஃபண்ட்தொகை, அக்கவுண்டிற்கு மாற்றப்பட்டிருப்பதாக வந்த தகவல்தான் அது. “யுவர் அமேசான் ஆர்டர்.... 619 ஹேஸ் பீன் ரீஃபண்டட். அவைலபிள் பேலன்ஸ் இன் யுவர் அக்கவுண்ட் இஸ் 2605.39என்று மின்னியது.

யோசித்துப் பார்த்தபோதுதான் திடுக்கிடும் உண்மை பிடிபட்டது. தீபக்கிடம் கைப்பேசியைக் காட்டினேன். “619 ரூபா வந்தே, அக்கவுண்ட்ல 2605 தான் இருக்குன்னா அப்போ முன்னாடி 1986 ரூபா தான் இருந்திருக்கும். நாம இவ்ளோ நேரம் நின்னதுக்கு யூஸே இல்லாமப் போயிருக்கும்என்று சொல்லிச் சிரித்தேன். டேய் யப்பா, உன்ன நம்பி உன் கூடப் பிச்சாவரம் வந்தேனே! என்னச் சொல்லணும்டாஎன்பதுபோலப் பார்த்துச் சிரித்தான்.

பணத்தை எடுத்துக்கொண்டு வந்தபோது பெரிய சாதனை செய்தது போன்ற உணர்வு இருவரிடமும் மேலோங்கியது. அம்மாவிடம் கர்வத்துடன் தகவலைச் சொல்லியாயிற்று. “மச்சான், இப்போதான் எனக்கு இந்த நாள் முடிஞ்ச மாதிரி இருக்கு. அடுத்த பஸ்ஸுல ஊருக்குப் போயி சேர்றோம்என்றான் தீபக். இப்போது அவன் தப்புக்கணக்குப் போட்டிருந்தான். அவனைப் பொறுத்தவரையில் அந்த நாள் அத்துடன் முடியவில்லை என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

                                                                                                                               (தொடரும்)